Wednesday 14 May 2014

நூற்றாண்டை நினைவு கூருதலின் அரசியல் : கால்டுவெல்லும் அயோத்திதாசரும்

ஸ்டாலின் ராஜாங்கம்

தி.மு..தலைவர் மு.கருணாநிதிகால்டுவெல்லின் இருநூறாவது பிறந்த தினமான மே 7-ம் நாள் அவரைப்  போற்ற வேண்டும் என்று மே  4-ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ், திராவிடன் போன்ற அடையாளங்கள் உருவாக கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூல்தான் வித்திட்டது என்கிற வகையில் அதன் ஆசிரியரான கால்டுவெல்லை கருணாநிதியின் இந்த அறிக்கை நினைவு கூறுகிறது. குறிப்பான பிரச்சினைகள் அடிப்படையில் அல்லாமல் தங்களை எல்லோருக்குமான அமைப்பாகவும் தலைவராகவும் காட்டிக்கொள்ள விரும்பும் யாரும் பயன்படுத்துவதாக தமிழ் அடையாளம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் இங்கொரு சமய நம்பிக்கையின் இடத்தைப் பிடித்திருக்கிறது. கால்டுவெல்லின் கருத்துகள் மீது எதிரும் புதிருமான பல்வேறு பார்வைகள் வந்துவிட்ட நிலையிலும், அதைக் கணக்கிலெடுக்காமல் பழைய தமிழ் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே கருணாநிதியின் கால்டுவெல் பற்றிய அறிக்கை அமைந்திருந்தது.

அதேவேளையில் கருணாநிதியின் தமிழ் உரிமை கோரல்களை எதிர்கொள்ளவும் தன்னை அவ்விடத்தில் நிறுவிக் கொள்ளவும் .தி.மு. தலைவர் ஜெயலலிதா முயற்சித்து வருவதும் வெளிப்படை. எனவே கருணாநிதியின் கால்டுவெல் பற்றிய அறிக்கைக்கு அடுத்த நாள் மே 5-ந்தேதி முதல்வரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதாவது கால்டுவெல்லின் 200-வது பிறந்த தினம் அரசுவிழாவாக கொண்டாடப்படும் என்றது அவரின் அறிக்கை. கருணாநிதியின் அறிக்கையைப் பார்த்து இதைச் செய்ததாக சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சி.எஸ்.. திருநெல்வேலி மண்டலப் பேராயர் வைத்த கோரிக்கையை ஏற்று இதை நடத்தவதாக அறிவித்திருந்தார். அன்றே மே 7-ந்தேதி கால்டுவெல் சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிப்பார் என்கிற தி.மு..வின் செய்திக் குறிப்பும் வெளியானது. தேர்தல் உள்ளிட்ட அதிகாரத் தேவைகளுக்காகச் சாதி உள்ளிட்ட உள்ளூர் உணர்ச்சிகளைப் பயன்படுத்தத் தயங்காத இக்கட்சிகள் இப்போது திராவிடம் மற்றும் தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றும் முனைப்பில் இந்த போட்டிகளில் உடுபடுகின்றன.

திராவிடக் கருத்தியல் மற்றும் திராவிட இயக்கம் போன்றவற்றிற்கு உரிமை
அயோத்திதாச பண்டிதர்
கோருவதற்காகவே கால்டுவெல்லின் (1814-1891) இருநூறாவது பிறந்த தினம் நினைவு கூறப்படுகிறதென்றால் இதே காரணத்துக்காக நினைவு கூற வேண்டிய மற்றொரு நாளும் இதே காலத்தில் வந்தது. நவீன காலத் தமிழகத்தின் முன்னோடி சிந்தனையாளர்களுள் ஒருவரான அயோத்திதாசரின் (1845-1914) நினைவு நூற்றாண்டு தினம்தான் அது. அவர் 1914-இம்இண்டு மே 5-ந்தேதி மரணமடைந்தார் என்ற வகையில் மே 5 அவரின் நூற்றாண்டு நினைவு நாளாகும். கால்டுவெல்லும் அயோத்திதாசரும் நேரடியாக தொடர்புடையவர்கள் இல்லை. இனால், திராவிட இயக்கக் கருத்தியலின் தோற்றுவாயோடு தொடர்புடையவர் என்ற முறையில் கால்டுவெல் போலவே அயோத்திதாசரையும் நினைவு கூர நியாயமிருக்கிறது.

கருணாநிதியின் அறிக்கையில் சொல்லப்படுவதைப் போலதிராவிட மொழிகள்’ என்ற சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர் கால்டுவெல் அல்ல. அண்மையில் இது தொடர்பான பல்வேறு புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. திராவிட உறவுமுறை என்கிற அரிய நூலை எழுதிய டிரவுட்மன் செய்த ஆய்வின்படி கால்டுவெல்லின் நூல் (1856) வெளியாவதற்கு முன்னரே 1816-இல்திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை எல்லிஸ் (1777-1819) வெளியிட்டார். ஆங்கிலேய அரசாங்க நிர்வாகியான எல்லீஸ் மொழியியல் நோக்கில் தொடங்கிய திராவிடமொழிகள் குறித்த இக்கருத்தாக்கத்தை கிறித்துவ மறை பரப்பாளரான கால்டுவெல், பின்னாளில் திராவிட மொழிகளைப் பேசி வாழ்ந்த குழுக்கள் குறித்த விரிவான ஆய்வாகவும் விரித்தார். அந்நூலுக்குப் பிறகு தமிழில் கால்கொண்ட நவீன வரலாற்று முறைமை மீது இக்கருத்தாக்கம் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது. இந்நிலையில்தான்திராவிடன்’ என்ற சொல்லை அரசியல் அமைப்பொன்றின் பெயராகவும் சமூகக் குழுவின் பெயராகவும் கையாண்டவராக முதலில் அயோத்திதாசரையே காணமுடிகிறது. 1891-இல்திராவிட மகாஜனசபை’ என்ற அமைப்பைத் தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூகப் பணியாற்றியதோடு அம்மக்களை ‘(சாதிபேதமற்ற) திராவிடர்கள்’ என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தினார். அவர் காலத்திலேயே வேறு குழுவினர்ஆதி திராவிடன்’ என்கிற அடையாள முயற்சிகளிலும் உடுபட்டனர்.

திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக 19-இம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி பல்வேறு காரணிகள் பங்கு வகித்திருப்பினும் துல்லியமாக புலப்படும்படியான முன்னோடியாக அயோத்திதாசரைக் கூறலாம். திராவிட இயக்கத்தின் முன்னோடியாக கூறத்தக்க அளவில் அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள சென்னை லௌகீக சங்கம் நடத்தியதத்துவவிவேசினி’ இதழ்களில் கூட (1878-1888) நாத்திகம், புரோகிதர் மறுப்பு போன்றவை உண்டெனினும் அப்போது உருவாகி வந்த தேசியவாத அரசியலைப் பிராமண அதிகாரமாகக் கருதி எதிர்த்தமை, இந்துமதம் மறுப்பு, இடஒதுக்கீடு கோரல் என்றெல்லாம் வெளிப்படையாக நவீன அரசியல் அமைப்புக்குட்பட்ட அரசியல் முகத்தோடு அயோத்திதாசர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட முன்னோடிகளே செயற்பட்டதைப் பார்க்க முடிகிறது.

தம்முடைய சமூகப்பணியின் தொடக்ககாலத்தில் ஆங்கிலேயர் அரசு குடிமதிப்பு கணக்கெடுப்பு எடுத்த போது (1881) பஞ்சமர்களை இந்துக்களாக பதிவு செய்யக்கூடாது என்றும், பூர்வத் தமிழர்கள் என்று பதிவுசெய்ய வேண்டுமென்றும் அயோத்திதாசர் அரசிடம் விண்ணப்பம் செய்தார். மேலும், 1880களின் மத்தியில்திராவிடர் கழகம்’ என்கிற அமைப்பை நடத்தி வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜான் ரத்தினம் என்கிற கிறித்தவ மதத் துறவியோடு சேர்ந்துதிராவிட பாண்டியன்’ என்கிற இதழை அயோத்திதாசர் நடத்தினார் என்று குறிப்புகள் கூறுகின்றன. பிறகு 1891இல் அவர் தொடங்கிய அமைப்பின் பெயரில்திராவிடன்’ என்ற சொல் இடம்பெற்றது. தமிழரைக் குறிப்பதற்கான மறுசொல்லாகவே அச்சொல்லைக் கருதிய அயோத்திதாசரிடம் இப்பார்வை கால்டுவெல் கட்டமைத்த கருத்தியலின் தாக்கத்தினால் உண்டானது என்று சொன்னால் அது மிகையில்லை. தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக அரசாங்க ஆதரவைக் கோரிவந்த அவர் அரசியல் நோக்கில் காலனியத்தின் அடையாள உருவாக்கமானதிராவிடன்’ என்ற சொல்லை எடுத்துக்கொண்டார். ஆனால், அயோத்திதாசர் தம் எழுத்துகளில் கால்டுவெல் பெயரை நேரடியாக எங்கும் கூறவில்லை. பறையர் வகுப்பு பற்றி கால்டுவெல் காட்டும் தொன்மங்கள் வரலாறு போன்றவை அயோத்திதாசரின் எழுத்துகளில் விரிந்த சித்திரம் பெற்று நிற்கின்றன.

திராவிடக் கருத்தியலின் மூலவரான எல்லீஸ் பற்றிய தகவல் கூட அயோத்திதாசரிடம் உண்டு. அதாவது 1812-ம் ஆண்டு சென்னை கல்விச்சங்கத்தை ஆரம்பித்த எல்லிஸ் அதல் தமிழ் ஏடுகளைச் சேகரிக்கவும் அச்சிடவும் செய்தார். திராவிட மொழிகள் குறித்த பார்வை உருவாக இச்சங்கச் செயற்பாடுகள் அவருக்கு ஆதாரமாயின. அவர் குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்னர் கல்விச் சங்கத்தில் குறள் அச்சேறியது. அவர் ஏடுகளை சேகரித்து வந்தபோது எல்லீஸிடம் குறளையும் நாலடி நானூறையும் சுவடிகளாகத் தந்தவர் தம் பாட்டனார் கந்தப்பன் என்கிறார் அயோத்திதாசர். அதேபோல குறள் அச்சில் வெளியான பின்பு அதிலிருந்த பாடபேதங்களை எல்லீஸிடமே அவர் முறையிட்டதாகவும் கூறுகிறார்.

அயோத்திதாசரின் கருத்தியலும் செயற்பாடுகளும் 1914-இம் ஆண்டு மரணத்துக்குப் பிறகு பல்வேறு காரணிகளால் மெல்ல மெல்ல மறைந்தன. பிறகு இறந்து நூறாண்டுகளை எட்டும் தருணத்தில் 1990களில்தான் அவரின் சிந்தனைகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. அவரின் சிந்தனைகளைத் தொகுத்த ஞான.அலாய்சியஸ் அயோத்திதாசரின் கருத்துக்களே திராவிட இயக்கத்தின் முன்னோடி என்கிறார். அயோத்திதாசரின் கருத்துகளைத்தான் திராவிட இயக்கம் முழுமையாக பேசியதென்றோ, திராவிட இயக்கமே அவருக்குத்தான் சொந்தம் என்றோ உரிமை பாராட்ட முடியாது. அரசியல் கருத்துகள் தவிர்த்து அயோத்திதாசரின் பண்பாட்டுப் பார்வை திராவிட இயக்கத்தாரிடமிருந்து வேறுபட்டது. இனால் அரசியல் கருத்துகள் என்ற அளவில் வேறு எவரையும் விட திராவிட இயக்கம் அயோத்திதாசரை மூலவராகக் கொள்வதில் நியாயமிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இனால் திராவிட அடையாளத்திற்காக போட்டியிடும் தற்காலக் கட்சிகள் அயோத்திதாசரைச் சிறிதளவும் நினைவு கூருவதில்லை. 1912-இம் ஆண்டின் சென்னை திராவிட மாணவர் அமைப்பொன்றைத் தொடக்கமாகக் கொண்டு 2012-ம் ஆண்டை திராவிட இயக்க நூற்றாண்டாக முன்பு கருணாநிதி அறிவித்தார். திராவிடக் கட்சிகள் அயோத்திதாசரைத் தொடக்கமாக கொள்ளாததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இனால் அவருக்கு நூற்றாண்டு என்று வருகிறபோது கூடப் பேசாமல் மௌனம் காக்கிறார்கள்.

ஏனெனில் அயோத்திதாசர் உள்ளூர்க்காரர். இங்கு அவர் ஏதாவதொரு சாதியை சேர்ந்தவராகி விடுகிறார். அதிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். அந்த கணக்குக்கு ஏற்பவே அவரை நினைவு கூரவோ பேசாமலிருக்கவோ முடியும். இனால் கால்டுவெல்லை இப்படிச் சொல்லிவிட முடியாது. எனவே அவரை நினைவு கூருவது எளிமை. அதனால்தான் அவரை நினைவு கூருவதற்கு இங்கு போட்டி. அதற்கிணையாக அயோத்திதாசரை நினைவு கூர்ந்துவிடாமல் மௌனம் காப்பதிலும் போட்டி.

ராபர்ட் கால்டுவெல்
கால்டுவெல் 1856-இல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அவர் உயிரோடு இருந்தபோது திருத்தம் செய்து 1876-இல் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டார். அதன்பிறகு அந்நூலின் மூன்றாம் பதிப்பு 1913-இம் இண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் அம்மூன்றாம் பதிப்பில் சில பகுதிகள் நீக்கப்பட்டு, நீக்கப்பட்டதற்கான குறிப்பே இல்லாமல் வெளியிடப்பட்டது. துண்டாடப்பட்ட இந்த வடிவமே முழுமையானது என்ற எண்ணம் அறிவுலகில் நிலைத்துவிட்டது. அந்நூலிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமானது பழம் திராவிடக் குடிகள் பறையர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளே என்பதாகும். கால்டுவெல்லுக்குச் சிலையும் பெயரும் வைத்ததாக உரிமை பாராட்டுவதில் போட்டி போடும் கட்சிகளின் இட்சியிலும் கால்டுவெல் நூல் மீதான எந்த ஆய்வும் நடந்ததில்லை. மாறாக, தனி நபர்கள் முயற்சியில் 2009-இம் ஆண்டுதான் இரண்டாம் பதிப்பின் நேரடி மூன்றாம் பதிப்பு வெளியிடப்பட்டது (கவிதா சரண் பதிப்பகம்). இதுபோன்ற அறிவார்ந்த விசயங்களெல்லாம் இக்கட்சிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் வேறு சில விசயங்கள் மட்டும் சொல்லித் தராமலேயே தெரிகின்றன.
 
திராவிட மற்றும் தமிழ்க்குழுவின் முதற்குடியினராக தாழ்த்தப்பட்ட சாதியைக் காட்ட விரும்பாமல் அதற்கான நூலாதாரத்தையே 1913-இல் நீக்கிய விசயம்தான், இன்றைய 2014-இல் திராவிட கருத்தியலின் மூலவராக தாழ்த்தப்பட்ட ஒருவர் இருந்தார் என்பது தெரிந்து விடக்கூடாது என்கிற விசயமாகவும் தொடர்கிறது என்று கூறினால் அதை தவறென்று சொல்லமுடியுமா?

Monday 2 December 2013

‘சாதி இன்று’ நூல் வெளியீட்டு விழா : ஏற்புரை


(சாதியின் இன்றைய பரிமாணங்களைக் கணக்கில் கொண்டு அதன் இருப்பை மதிப்பிடும் சாதி இன்று’ என்கிற நூல் வடிவிலான அறிக்கை 2013இம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. சி.லஷ்மணன், ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம், .ஜெகநாதன், அன்புசெல்வம் ஆகியோரின் கூட்டுப்பார்வையில் உருவான இந்த அறிக்கை வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் ராஜாங்கம் பேசிய ஏற்புரை திருத்தங்களோடு எழுத்து வடிவமாக்கி கீழே தரப்படுகிறது.)


நூலை எழுத்தாளர் சிவகாமி வெளியிட மாரியப்பன் அருளானந்தம் பெறுகிறார்.

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் நவம்பர் 26. அம்பேத்கர் வரைந்தளித்த இந்திய அரசியல் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் எற்றுக்கொள்ளப்பட்ட இந்நாளில் சாதி இன்று’ என்ற இந்த அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் சாதிகள் (1916) என்கிற ஆய்வறிக்கையை அம்பேத்கர் எழுதி நூறாண்டுகளை எட்டவிருக்கும் தருணம் இது. சாதி ஒழிப்பு போன்ற அரசியல் நிலைப்பட்ட சிந்தனைகளை எட்டுவதற்கு முன்பே சாதியின் தோற்றம், அதன் அமைப்பியக்கம் போன்றவற்றை மானுடவியல் மாணவராக இருந்து அவ்வறிக்கையில் அவர் ஆராய்ந்திருப்பார். அதில் சாதியின் தோற்ற நிலைக்கான பல்வேறு காரணிகளை அவர் விவாதிக்கிறார். சாதியின் தோற்றத்திற்கான பல்வேறு சாத்தியங்களை அணுகியிருக்கும் விதத்திலும், இந்தியாவில் நவீன ஆய்வு அணுகுமுறையோடு சாதி பற்றி எழுதப்பட்ட முன்னோடி முயற்சி என்ற விதத்திலும் அந்நூல் அவருடைய முக்கியமான பங்களிப்பு. தமிழில் அம்பேத்கரின் இந்நூல் வந்துவிட்ட பின்னாலும், சாதி பற்றி வரன்முறையான ஆய்வுநூல் இன்று வரையிலும் வெளியாகவில்லை என்றே சொல்லலாம். தமிழில் ஆங்காங்கு வெளியாகியிருக்கும் ஓரிரு நூல்கள், கட்டுரைகள் தவிர குறிப்பிடத்தக்க நூல்கள் ஏதுமில்லை.

இங்கு பொதுவாக சாதி பற்றிய விவாதமென்றாலே சாதிக்கொடுமையை எடுத்துச் சொல்வதாகவும், சாதி கூடாது என்பதை அரசியல்ரீதியாக விளக்கும் கருத்துகளாகவும் மட்டுமே காணப்படுகின்றன. மேலும் இவை எல்லாம் உடனடி எதிர்வினைகளாக மட்டுமே இருந்துள்ளன. நெடிய பிராமண எதிர்ப்பு அரசியல் வரலாற்றைக் கொண்ட தமிழ்நாட்டில் இத்தகைய ஆய்வுகள் முளைவிடாதது ஏனென்பது முக்கியமான கேள்வியாகும். இங்கு சாதியின் அமைப்பியக்கமும், அதற்கான எதிர்ப்பும் அரசியல் ரீதியாக மட்டுமே விளக்கப்பட்டு வருகின்றன. அதாவது பிராமணர்  x பிராமணர் அல்லாதார் என்கிற எளிமைப்படுத்தப்பட்ட எதிர்வு சிந்தனையே சாதியை விளங்கிக் கொள்வதற்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. இந்த எதிர்வுக்கு அப்பாலும் சாதியம் செயல்படுகிறது. தலித்துகள் மீது ஏவப்பட்டு வரும் வன்முறைகளில் அவற்றிற்கான பங்கே அதிகம். அவற்றையும் சாதி பற்றிய சொல்லாடல்களில் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அறிக்கை எழுதப்பட்டிருக்கிறது.

பேரா.நடராஜ், ஸ்டாலின் ராஜாங்கம், சிவகாமி, பேரா.பத்மினி
தலித்துகளுக்கும் தலித் அல்லாத சாதிஇந்துகளுக்குமான இடைவெளி அதிகரித்திருக்கிறது. கடந்தகால மாற்றங்களினூடாக புதிய சாதியவாதம் உருவாகியிருக்கிறது. அது தலித்துகளின் மீது உடைமை, உடல் மட்டுமல்லாது உளவியல் ரீதியான வன்முறையாகவும் மாறியிருக்கிறது. 1990களின் தலித் எழுச்சி என்பது வட்டார ரீதியான ஆதிக்கசாதிகளின் அதிகாரத்திற்கு எதிராகவே முளைவிட்டது. அதுவரையிலும் தமிழகத்தில் சாதியை புரிந்து கொள்வதற்காக நம்ப வைக்கப்பட்டு வந்த பிராமணர் - பிராமணரல்லாதோர் என்கிற சட்டகம் அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளானது. ஆனால் இப்புதிய கேள்வி சாதிபற்றிய விவாதங்களில் கணக்கில் கொள்ளப்படவில்லை. மாறாக அறிவுலகம் சாதி பற்றிய பழைய சட்டகத்தை நீட்டிக்கும் விதமான சொல்லாடல்களிலேயே இயங்கி வருகிறது. தலித் எழுச்சி ஏற்படுத்திய புதிய கேள்விகளால் பழைய சட்டகம் உடைந்து விடக்கூடாது என்கிற பதட்டமும், அதற்கேற்ப சில பல அம்சங்களைத் தங்கள் கருத்தியலின் அங்கமாக்கிக் கொண்டு அதை அப்படியே தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பும்தான் இவற்றில் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் சாதி சார்ந்து எற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கணக்கில் கொண்ட பேச்சுகளும் எழுத்துகளும் கடுமையாக எதிர்கொள்ளப்பட்டன. முன்முடிவு சார்ந்து புறந்தள்ளப்பட்டன. அவதூறு செய்யப்பட்டன. புதிய கருத்தொன்றிற்கு ஏற்படும் சவாலான நிலைதான் அது. இச்சிக்கலை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். எனினும் செயல்படவேண்டிய தருணம் இது என்பதைத் தீவிரமாக உணர்ந்திருக்கிறோம்.

2012 நவம்பர் 7ல் தருமபுரியில் தலித் கிராமங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த அறிக்கை எழுதுவதற்கான உடனடிக்காரணம். அச்சம்பவம் எங்களைப் பெரும் மன அவசத்திற்கு ஆளாக்கியது. உண்மை அறியும் குழுக்களின் வரையறை, அதில் ஈடுபடுவதால் ஏற்படும் திருப்தி ஆகியவற்றை அறிந்திருந்த போதிலும், அங்கு சென்று பார்க்கவேண்டும் என்பதற்காக உண்மை அறியும் குழுவாகச் சென்று திரும்பினோம். தர்மபுரி வன்முறை ஒரு கட்சியின் அல்லது ஒரு தலைவரின் உடனடித் தாக்குதல் மட்டுமல்ல. அது மாற்றங்களினூடாக உருவாகி வந்திருக்கும் புதிய சாதியவாதத்தின் விளைவாகும். தலித்துகள் மீது பிறசாதிகள் எல்லாவற்றிற்கும் வெறுப்பு இருக்கும் நிலையில், தற்போது அவ்வெறுப்பை வெளிக்காட்ட இப்போது ஒரு கட்சிக்கு அல்லது சாதிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவே. ராமதாஸையோ, வன்னியர்களையோ கண்டிப்பது உடனடி அரசியல் எதிர்வினை மட்டுமே. அரசியல் உலகம் மட்டுமல்ல, அறிவுலகமும் இதைத்தான் செய்கிறது.

இந்நிலையில்தான் உடனடி எதிர்வினை என்பதைத் தாண்டி புதிய சாதியவாதத்தின் பரிமாணங்களை அறிவார்ந்த நிலையிலாவது விவாதத்திற்குக் கொணர வேண்டும் என்று கருதி, புதிய சாதியவாதம் பற்றிய தொடக்கநிலை அறிக்கை ஒன்றை விவாதித்து உருவாக்குவது என்று முடிவெடுத்தோம். தலித்துகள் தாக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியான அரசியல் ஆதரவு தேவை. ஆனால் அறிவுஜீவிகளுக்கு அவற்றோடு வேறு சில பொறுப்புகளும் உண்டு. இனால் அவர்களில் பலரும் கூட அறிக்கை, கூட்டம் என்று சுருங்கிக் கொள்கின்றனர். உடனடி எதிர்வினையென்பது ஒரு பிரச்சினையை அரசியல் மட்டத்தோடு நிறுத்திவிட்டு வேறு பரிமாணங்களை மறைத்துவிடுகிறது. மேலும் பிரச்சினையை தாண்டி அதன் வேரைப் பார்க்காமல் நிறுத்திவிடுகிறது. சாதி வன்முறை எழுந்தாலே அதன் கொடூரம் பேசப்படுகிறதே ஒழிய அதன் வேர், அவற்றின் அரசியல் போன்றவை ஆராயப்படுவதில்லை. பிரச்சினைக்கு மட்டும் எதிர்ப்பு என்றால் ஒவ்வொரு முறையும் எதிர்வினை செய்துகொண்டே இருக்கமுடியும். உடனடி அரசியல் எதிர்வினையாகக் கூட்டம், அறிக்கை போன்றவற்றைச் செயற்படுத்துவது போராளி பிம்பத்திற்குதான் வழிவகுக்கும். மற்றபடி பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். இன்றைய தமிழ்ச் சூழலின் அரசியல் உலகமும் அறிவுலகமும் இவ்வாறுதான் ஒன்றேபோல் இயங்கி வருகிறது. இச்சூழலில்தான் கூட்டம், அறிக்கை என்பதையெல்லாம் விடுத்து இன்றைய சாதியவாதத்தின் அரசியலை ஆராய்கிற விதத்தில் செயல்படுவதே அறிவார்ந்த எதிர்வினையாக இருக்கமுடியும் என்று கருதி இந்த அறிக்கையை ஓராண்டு முழுதும் சிறிது சிறிதாக விவாதித்து 110 பக்கத்தில் ஒரு நூலாகக் கொணர்ந்திருக்கிறோம்.

இன்றைய சாதியவாதத்தின் அரசியலை ஆராய விரும்பாமல் தலித்துகளுக்காக நடத்தப்படும் பெரும்பான்மையான கூட்டங்களும் அறிக்கைகளும் தலித் அல்லாதவர்களின் குற்றவுணர்வைக் கழுவிக் கொள்வதாகவும் ஆதிக்கசாதிகள் மீதான தலித்துகளின் கோபத்தைத் தணிக்கும் சமாதானக் கூட்டங்களாகவும் இருப்பதையே பார்க்கமுடிகிறது. இங்கு தலித்துகளுக்குத் தேவை கழிவிரக்கமல்ல. இதுபோன்ற தருணங்களில் தலித் அல்லாத சனநாயக சக்திகளின் ஆதரவைக் காட்டி தலித்துகளின் பார்வையிலிருந்து ஆதிக்கசாதிகள் மறைக்கப்படுகின்றனர். இன்றைய சமூகப் பரப்பின் சாதி உளவியல் மற்றும் அதிகாரம் என்பது வெகுசில சனநாயக சக்திகளின் வரம்பில் இல்லை. சாதியின் சமகால அதிகார பலத்தையும், அதன் விளைவையும் மதிப்பிடுவது உண்மையான சனநாயக சக்திகளை மறுப்பதாகாது.


எங்களின் இந்த அறிக்கை முழுமையானதல்ல. இதன்மீது இக்கபூர்வமான எதிர்வினைகளை எதிர்பார்க்கிறோம். இதில் சாதி பற்றி இதுவரை பேசப்பட்டு வந்த பல்வேறு விஷயங்களைக் கைவிட்டிருக்கிறோம். சில புதிய விஷயங்களைப் பேசியிருக்கிறோம். அவற்றில் நிறையும் குறையும் இருக்கின்றன. அதோடு வளர்த்தெடுப்பதற்கான கூறுகளும் இடைவெளிகளும் சேர்ந்தே இருக்கின்றன. அறிக்கை அச்சாக்கம் ஆன பின்னால் எங்களுக்கே கூட அறிக்கை மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டு அறிக்கை மறுதிருத்தம் செய்யப்படலாம். அறிவார்ந்த தளத்திலான எதிர்வினையென்றாலும் இன்றைய புதிய சாதிய வாதத்தை எதிர்கொண்டு அதைப் புரிந்து கொண்டிருக்கும் இந்தத் தலைமுறை தலித்துகளுக்கான எழுத்து ரீதியான கையளிப்பாகவே இந்த அறிக்கையை அணுகியிருக்கிறோம். கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி.

-    ஸ்டாலின் ராஜாங்கம்