Friday 11 May 2012

ரவிக்குமார் எழுதிய மறதியின் புதைமணல் (குமுதம் தீராநதி - ஏப்ரல் 2012) கட்டுரை மீதான எதிர்வினை

திராவிட இயக்க நூற்றாண்டு : இரண்டு எதிர்வினைகள்


(குறிப்பு : இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் மீது தவிர்க்க இயலாத சூழலில்       மட்டுமே எதிர்வினை செய்வது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நான் அந்த வகையில் எழுதிய எதிர்வினைகளே இந்த இரண்டும்.


தீராநதியின் இரவிக்குமார் கட்டுரை மீது (ஏப்ரல் 2012) எழுதப்பட்ட எதிர்வினையின் சிறுபகுதி மட்டுமே மே மாத தீராநதி இதழில் வெளியிடப்பட்டது. எனவே எதிர்வினையின் முழுவடிவம் இங்கே வெளியிடப்படுகிறது.


செம்மலர் இதழுக்கு நான் எழுதிய மற்றொரு எதிர்வினையை அவ்விதழ் முழுமையாக வெளியிட்டது. அவ்வெதிர்வினையும் இங்கே வெளியிடப்படுகிறது. ஆனால் எதிர்வினை பிரசுரமான மே இதழிலேயே திராவிட இயக்க நூற்றாண்டின் நினைவாக எஸ்.ஏ.பெருமாள் எழுதிய நீதிக்கட்சியும் சமூக நீதியும் என்ற கட்டுரையும் வெளியாகியுள்ளது.


ஒரு சுட்டிக்காட்டல் என்ற வகையில் எழுதப்பட்ட என் எதிர்வினையைத் தாண்டி அவ்விதழின் அரசியல் நிலைப்பாடு என்ற வகையில் அக்கட்டுரையைப் புரிந்து கொள்ளலாம் எனில், அக்கட்டுரை பல வரலாற்றுப் பொய்களைக் கண்மூடித்தனமாகக் கட்டவிழ்த்துள்ளது என்பதுதான் விந்தை. மீண்டும் மீண்டும் அவ்விதழுக்கே எதிர்வினையெழுவது நமக்கே வெட்கமாகயிருக்கிறது. அத்துணை மோசடியானது அக்கட்டுரை. நீதிக்கட்சி பற்றி பரவலாக அறியப்பட்ட ‘பிராமணரல்லாத உயர்சாதியினரின் கட்சி’ என்ற சிறுவிமர்சனத்தைத் தாண்டி நீதிக்கட்சியைப் புரட்சிகரக் கட்சியளவிற்கு உயர்த்தியிருக்கிறது அக்கட்டுரை.


‘1920 முதல் 1927 வரையில் ஆட்சிசெய்த நீதிக்கட்சியின் சீர்திருத்தச் சாதனைகளாக 21 அம்சங்களைப் பட்டியலிடுகிறது அக்கட்டுரை. அதில் 11 அம்சங்கள் தலித்துகளுக்காகச் செய்யப்பட்ட சாதனை. அப்பட்டியலில் அநேகம் பொத்தாம்பொதுவானவை; ஆதாரமற்றவை; பொதுப்புத்தி சார்ந்தவை. ஆங்கிலேயர் காலம் முதற்கொண்டே இருந்துவரும் சலுகைகள், தலித் முன்னோடிகளால் போராடிப் பெறப்பட்ட சலுகைகள் ஆகியவற்றையும் நீதிக்கட்சியின் சாதனைகளாக அக்கட்டுரை கூறுகிறது.


உதாரணத்திற்குச் சில : தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதியை முதன்முதலாக நீதிக்கட்சி அமைச்சராக நியமித்தது என்றொரு தகவல். இது எந்த ஆண்டு? நியமிக்கப்பட்ட அமைச்சரின் பெயர் என்ன? போன்ற தகவல்களை எஸ்.ஏ.பெருமாள் வெளியிடவேண்டும். அதே போல மற்றொன்று : சென்னை பின்னி மில் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட திரு.வி.க.வை பிரிட்டிஷார் பேச்சைக் கேட்டு நீதிக்கட்சி நாடுகடத்த மறுத்தது என்பது. அதே வேளையில் தாழ்த்தப்பட்டோரைச் சென்னை நகரில் ஒரே இடத்தில் குடிவைக்கக் கூடாது, சென்னையிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற நீதிக்கட்சி தியாகராயச் செட்டியாரின் அறிக்கையைப் பற்றி நம்மூர் மார்க்சிஸ்டுகள் அறிவார்களா? வரலாறு என்னும் பெயரில் தலித்துகளின் கருத்தியலில் சுமத்தப்படும் அடிமைத்தனம் இது! இதைப் படித்தால் தலித்துகளுக்காக இப்படியொரு கட்சி இந்தியாவில் இருந்ததில்லை என்றுதான் யாரும் பொய்யாக நம்பவேண்டிவரும்.


திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளை கணக்கில் கொள்ளத் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தைச் சரிசெய்யும் அவசரத்தில் அவ்வியக்கம் கற்பித்துள்ள திரிபுகளையெல்லாம் ஆராய்ச்சி ஏதுமில்லாமல் ஏற்கவேண்டிய அவசியம் இடதுசாரிகளுக்கு வந்துவிட்டதை நினைக்கும்போது வருத்தமாயிருக்கிறது. மொத்தத்தில் தி.க. இதழில் வந்திருக்கவேண்டிய கட்டுரை செம்மலரில் வெளியாகியிருக்கிறது.


- ஸ்டாலின் ராஜாங்கம்
 
திராவிட இயக்க நூற்றாண்டு : இரண்டு எதிர்வினைகள் (எதிர்வினை 1)


கருத்துரீதியாக ரவிக்குமார் கட்டுரையோடு முரண்பாடில்லாத எனக்கு எழும் கேள்வியென்னவெனில் விமர்சனச் செயற்பாட்டை மேற்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்கென அறம் என்று ஏதுமில்லையா, எதையும் எப்போதும் யாரும் கவனிக்கமாட்டார்களென்று எழுத முடியுமா என்பதே.  கருணாநிதி திராவிட இயக்கத்தின் தொடக்கமாக அயோத்திதாசரை கொள்ளாததில் வியப்பில்லை. ஆனால் எதை எப்போது மறந்திருக்க வேண்டும், எப்போது ஞாபகத்தில் கொள்ள வேண்டும் என்ற தன் கணக்கை எல்லோரும் மறந்திருக்க வேண்டும் என்று ரவிக்குமார் எதிர்பார்ப்பதுதான் வியப்பாயிருக்கிறது. ரவிக்குமாரின் தலித் பற்றிய மறதிக்கும், தற்போதைய ஞாபகத்திற்கும் இடையில் எஞ்சியிருப்பது சுயநலத்தோடு முரண்படாத அவரின் அறிவு ஜீவித்தனம் மட்டுமே.

தமிழக தலித் இயக்கம் பற்றி ஓர்மை கொண்ட ரவிக்குமார் அதனடிப்படையிலேயே திராவிட இயக்கம் தலித் இயக்கத்தை உள்வாங்கியது, மேலும் அது சமகால தலித் அரசியலுக்கும் எதிரானது என்பதை முன்பு உரக்கப் பேசினார். இடையில் தலித் இயக்கமொன்றின் சட்டமன்ற பிரதிநிதியாகிய அவர் திராவிட இயக்க திமுகவோடு காட்டிய நெருக்கம் கூட்டணி அரசியலைத் தாண்டியதாக அமைந்திருந்தது. ஏறக்குறைய ஆறேழு ஆண்டுகளில் திமுகவை போற்றியதில் மட்டுமல்ல, பிரதான தலித் அரசியல் கோரிக்கைகள் எதையும் உரி விதத்தில் எடுத்து வைக்காமலும் இருந்துகொண்டார். ஆனால் சட்டமன்ற பிரதிநிதியாய் இல்லாத தற்போது திராவிட இயக்கத்தின் தலித் பற்றிய மௌனத்தை இக்கட்டுரை மூலம் பேசத் தொடங்கியுள்ளார். எனில் தலித் அடையாளம் என்பதோ தலித் பிரச்சினை என்பதோ அவருக்கு என்னவாகவிருக்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. சட்டமன்ற பிரதிநிதியாய் இருந்த இந்த இடைக்காலத்தில் தலித் பிரச்சினைகளோ, இதுபோன்ற தலி;த் பற்றிய மௌனங்களோ இல்லாமல் இருந்தது என்பது இதன் பொருளா? அல்லது தான் பேசவரும் போது மட்டும் தான் தலித்துகளுக்கு பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தமா?

ரவிக்குமார்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்ட தலித் பிரச்சினைகளை  அரசியல் அதிகார தளத்தில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வந்தபோது ஒரு அறிவு ஜீவி என்கிற முறையில் அரசியல் வெளியில் அவற்றை விவாதித்தற்கான சான்றுகள் ஏதேனும் உண்டா? அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியையாவது சந்தித்ததுண்டா? மாறாக நாங்களும் பேசியிருக்கிறோம் என்பதற்கான சில பேச்சுகளைத் தாண்டி ஆட்சியாளா;களுக்குத் தொந்தரவு தராத அவா;களால் எளிதில் நிறைவேற்ற முடிகிற நலவாரியம் போன்ற கோரிக்கைகள் குறிப்பான பிரச்சினைகளின் போது யாரையும் பகைத்துக் கொள்ளாத மௌனங்கள் மட்டுமே சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் கையாளப்பட்டன.

திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதிதிராவிட முன்னேற்ற கழகம் என்று புகழ்ந்தமை, கருணாநிதியைத் தலைவர் கலைஞர்; என்றே விளித்தமை, நந்தன் பற்றிய தலித் வரலாற்று நூலுக்கு தலித் கருத்தியலுக்குத் தன்னையே முன்னோடியாகக் காட்டும் கருணாநிதியின் முன்னுரையைப் பெற்று வெளியிட்டமை, தமிழக அரசின் இலவச டிவிக்கான நிதியை தலித் மக்களின் சிறப்பு உட்கூறு திட்ட நிதியிலிருந்து திருப்பியபோது காட்டிய மௌனம் (பார்க்க: சவுக்கு இணையதளத்தில் நிதியை திருப்பியதற்கான அரசாணை நகல்கள்) இவ்வாறு பலவற்றைச் சொல்ல முடியும். அரசியல் நிர்பந்தம் காரணமான சரணாகதி என்பதிலிருந்து சுயநலனுக்கான மோசமான சரணாகதிக்கு சென்றதுதான் மிச்சம். கட்சியின் ஒரு தொண்டரை கூட ஈர்க்காத ஒருவர் ஒரு கட்சியையே தன் விருப்பத்திற்கான அரசியல் நிலைபாட்டிற்கு இணங்க வைப்பது அல்லது கட்சி தன்னை கட்டுப்படுத்தாத இடத்தில் இருத்திக் கொள்வது என்பதுதான் இவரின் அறிவு கட்டமைத்த அதிகாரம். தலித், போதி என்று தலித் அடையாளம் பேசிய இதழ்களை மூடிவிட்டு மணற்கேணி என்ற பொதுப்பெயரில் பொதுவான இலக்கியம் பேசும் இதழை தொடங்கிக் கொண்டதும் இவ்வாறுதான். தன் பழைய நூல்களை வெவ்வேறு தலைப்புகளில் மறுபதிப்பு செய்து கொண்ட அவர் மறுபதிப்பு செய்யாத ஒரே நூல் கொதிப்பு உயர்ந்து வரும். கட்டுரைக்கு கட்டுரை கருணாநிதியைத் தலித் எதிரியாகக் காட்டியிருக்கும் அந்நூலை மறப்பதுதான் அவர் மேற்கொண்டிருந்த கருணாநிதி ஆதரவு அரசியலுக்கு செய்த ஒரேபரிகாரம். இவ்வாறு உடனடியாகவோ நீண்டகால நோக்கிலோ தலித் அடையாளத்திற்கு எவ்வகையிலும் பயன்படாத சமரசங்களுக்காக தலித் நலன்களை பலி தந்துவிட்டார்கள்.

தலித் பிரச்சினைகளுக்கான அரசியல் வெளியை அழித்துவிட்டு அடையாளத்தை பேசுவது மட்டும்தான் தலித் அக்கறையா? ஆக்கப்பூர்வமான அரசியல் நடைமுறைகளுக்காக போராடுவதும் அடையாளத்தை மீட்டெடுப்பதும் வேறு வேறல்ல. அயோத்திதாசர் உள்ளிட்ட முன்னோடிகளைப் பேசுவதன் பொருள் அவர்கள் விரும்பிய அரசியல் வெளியை ஒர்மையோடு விரிவுப்படுத்துவதுதான்.  1998-ஆம் ஆண்டு பிரப்வரி மாதம் திண்டிவனத்திற்கு அருகில் தலித் ஒருவர் கொல்லப்பட்ட போது கொந்தளிக்காத தலித்மக்கள், சில நாள் கழித்து அம்பேத்கர் சிலைக்குச் செருப்பு மாலை போட்ட போது கொந்தளித்ததைத் தன் கட்டுரை ஒன்றில் (பார்க்க : Venomous touch page :149) குறிப்பிடுவதன் மூலம் உயிருள்ளவருக்காகப் போராடுவதைக் காட்டிலும் உயிரற்ற சிலை என்ற அடையாளத்திற்காகப் போராடுவதை விமரிசனமாக எழுதியிருப்பார் ரவிக்குமார். ஆனால் ஆக்கபூர்வ அரசியலைக் கைவிட்டு விட்டு இக்கட்டுரையில் அதே அடையாளத்தைக் காட்டிதான் அவர் கவலைப்படுகிறார் என்பதை மறந்து விட முடியாது. பொதுவாக அடையாள ரீதியான கோரிக்கைகளை எழுப்புவதும், அதை ஆட்சியாளர்கள் நிறைவேற்றிருத் தருவதும் புதிதல்ல. திமுக ஆட்சியில் ரவிக்குமாரும் கலந்துக் கொண்ட இரட்டைமலை சீனிவாசன் சிலைதிறப்பு கூட அதிமுக ஆட்சியின் போது செ.கு.தமிழரசன் வைத்த கோரிக்கையினால் உறுதி செய்யப்பட்டதேயாகும். எனவே தன்னுடைய கோரிக்கையினால் அயோத்தி தாசருக்குக் கிடைத்த அங்கீகாரங்களென சிலவற்றை இக்கட்டுரையில் ரவிக்குமார் கூறிக்கொள்வது பெரி விசயமில்லை.

அதிலும் கடந்த திமுக ஆட்சியில் (2006-2011) தன்னுடைய கோரிக்கையினால் அயோத்திதாசருக்காக நடந்த சிறப்புகளில் தபால்தலை வெளியிட்டதையும் கூறிக்கொள்ளுகிறார். ரவிக்குமார் மாநிலசட்டமன்ற உறுப்பினரானது 2006-இல். தபால்தலையை மத்தியஅரசு வெளியிட்டது   21.10.2005-இல். அயோத்திதாசருக்குக் தபால்தலை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அயோத்திதாசர் பெயர் போன்றவை தலித் எழில்மலை மத்திய இணை அமைச்சராக இருந்தபோது கால்கோள் இடப்பட்டு பிந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவு செய்யப்பட்டது என்பதே உண்மை. தலித் எழில்மலை, அன்பு பொன்னோவியம், ஞானஅலாய்சியஸ் போன்றோரின் பங்களிப்புகளை அழித்துவிட்டு, அதன் மீது தன் பெயரை எழுதி ஒட்டிக்கொள்வதுதான் தலித் வரலாற்றை நேர்செய்வதா?  

இதுவரை எழுதப்பட்ட சொற்பமான தலித் வரலாற்று நூல்களில் தலித் இயக்கங்களை, ஆளுமைகளை உள்வாங்கிய மறைத்த பிற அடையாளங்கள் பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம். அத்தகைய உள்வாங்குதலில் தலித் தரப்புக்கிருந்த சிக்கல்கள் பற்றிய அவ்வளவாக பேசவில்லை. அயோத்திதாசரின் பௌத்த இயக்கத் தேக்கத்தைத் திராவிட இயக்கத்தின் எழுச்சியோடு மட்டுமல்ல பௌத்த இயக்கத்தைச் சேர்ந்த அப்பாதுரையாரின் செயற்பாட்டோடும் சேர்த்து ஆராயவேண்டும். எனவே தலித் இயக்கத்தை இருபுறமாகவுமிருந்து ஆராயவேண்டும். அப்போதுதான் சமகால தலித் இயக்கத்தோடு சேர்ந்து செயற்பட்ட ரவிக்குமார் போன்றோர் கடந்த கால வரலாற்றையும் அடையாளத்தையும் மட்டும் பேசி நிகழ்காலச் செயற்பாட்டின் தேக்கத்தில் தங்களுக்கிருந்த பங்கை மறைத்துக் கொள்வதை புரிந்துகொள்ள முடியும்.



(தொடரும்)

1 comment:

  1. அ.ஜெயபால்15 May 2012 at 10:35

    இந்த எதிர்வினைகளை படிக்கிற போது உண்மையிலேயே மனது வருத்தமடைகிறது. நாம் போராட வேண்டிய தளங்கள் பல இன்னும் உள்ளன என்பதை உங்கள் கட்டுரைகள் எங்களுக்கு சுட்டிக் காட்டுகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களை தலித்துகள் அடைய வேண்டும் என தான் வாழ்நாளின் இறுதி நாள் வரை பாடுபட்டார். அவருக்குபின் நல்ல தலைவர்களை காண்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது. அறிவு ஜீவிகளின் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் என்பார் சயீத். இந்திய சாதிய சமூகத்தில் எப்படி விழிப்பாயிருந்தாலும் நுட்பமான முறையில் சாதியத்தை நம் எதிரிகள் நம்மீது இன்னும் திணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் எல்லோரும் மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்வோம். கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர்.. ஜெய் பீம் .

    ReplyDelete