Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Monday, 19 November 2012

கலப்புமண எதிர்ப்பு அரசியல் - விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

- ஸ்டாலின் ராஜாங்கம்

2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டை என்னும் கிராமத்தில் சாதிமீறிக் காதலித்த காரணத்திற்காகத் தலித்தான முருகேசன் வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி ஆகிய இருவரையும் ஊரின் ஆதிக்க சாதியினர் கொடூரமாகக் கொலைசெய்தனர். வன்னியர்களின் இக்கொடூரச் செயலுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் மறைமுகமான ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டது. இக்கொடூரக் கொலையில் ஈடுபட்ட ஊர்க்காரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அக்கட்சி சட்டரீதியாக உதவியதாகவும் கூறப்பட்டது. புகாரை அந்தக் கட்சி இதுவரை மறுக்கவில்லை. ஆனால் கடந்த 2012 ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் பெண்களைப் பிற சாதி ஆண்கள் காதலிக்கவோ மணக்கவோ அனுமதிக்கக் கூடாது என அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி குரு பேசிய சாதிமறுப்புத் திருமணம் குறித்த அக்கட்சியின் நிலைபாடு தெளிவாகிவிட்டது. புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலை விவகாரத்தில் அக்கட்சியின் மௌனத்திற்கான காரணத்தையும் குரு இதன் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்.

அரசியல் மேடையொன்றில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக இது வெளிப்படையாக விடுக்கப்பட்ட அறைகூவல். வடமாவட்டங்களில் அரசியல் ஆதரவோடும் சாதி வெறியோடும் ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகளைக் குறித்து இமையம் எழுதியுள்ள ‘பெத்தவன்’ என்ற தேர்ந்த சிறுகதையும் (உயிர்மை, செப்டம்பர் 2012) அண்மையில் வெளியாகியுள்ளது.

இதேபோலக் கடந்த சில வருடங்களாகக் கொங்கு மண்டலத்தின் ஆதிக்க சாதியான கொங்குவேளாளர் அமைப்புகளில் சில வெளிப்படையாகச் சாதி மறுப்புத் திரு மணத்திற்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளன. சாதி கடந்த காதல், திருமணங்களைக் கொலை உள்ளிட்ட கொடூரமான வழிமுறைகளின் மூலம் தடைசெய்துவரும் அச்சாதியினர் அரசியல்ரீதியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு சாதிமறுப்புத் திருமணங்களுக்கெதிரான தம் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு அரசின் அங்கீகாரத்தை வெளிப்படையாகக் கோரத் தொடங்கியுள்ளனர். ஆதிக்க சாதியினரிடமிருந்து தலித்துகளைப் பாதுகாக்கும் தலித் வன் கொடுமைச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி கடந்த பல வருடங்களாக அரசை வலியுறுத்திவரும் சில கொங்கு வேளாளர் அமைப்புகள் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி கோவையில் நடத்திய கூட்டமொன்றில் கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடைசெய்ய வேண்டுமென்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகச் செய்திகள் வந்தன. கலப்பு மணச் சட்டத்தை ரத்துசெய்யும்படி அரசைக் கோரியுள்ள இந்த அமைப்புகள் தமக்கென இணையதளம் ஒன்றையும் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.

கொங்குப் பகுதியின் முதன்மை ஆதிக்க சாதியினரான கொங்கு வேளாளர்களை அரசியல்ரீதியில் ஒன்றிணைக்கவும் சாதி அடையாளத்தை ஓட்டுவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் தொடர்ச்சியே இது போன்ற நடவடிக்கைகள். சமூக மாற்றத்தின் காரணமாக இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காதல், கலப்பு மணங்களைக் கண்டு ஆதிக்கச் சாதிகள் பதற்றமடைந்திருப்பதன் அடையாளமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். எண்ணிக் கையில் பெரும்பான்மைச் சாதிகள் மட்டுமல்லாது எண்ணிக்கையில் சிறுபான்மை இந்து சாதி அமைப்புகளும் இதே கோரிக்கையை ஆங்காங்கு எழுப்பத் தொடங்கியுள்ளன. சாதி ஒதுக்கீடுகளும் பிரதிநிதித்துவமும் ‘சமூகநீதி’யாகிவிட்ட நம் சூழலில் தத்தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு சாதியும் தங்களின் எண்ணிக்கையைச் சிதறிவிடாமல் காக்க விரும்புகின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் பெரும் எழுச்சிபெற்றுவரும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல், ஆதிக்க சாதியினருக்குப் பெரும்பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காதல் திருமணங்கள் மூலம் சாதியமைப்பு சிதைவதைக் கண்டு சாதியமைப்புகள் வெளிப்படையாக இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளன. சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் அதை மேலும் இறுக்கமானதாக மாற்றுவதற்குமான முயற்சிகளை ஆதிக்க சாதி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இவை போன்ற நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் வாழும் தலித்துகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை. இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் அந்த அமைப்பு இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கு வெளிப்படையாகச் சவால்விட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அறிவு ஜீவிகளும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும் மௌனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அம்பேத்கர் 1916ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கருத்தரங்கில் இந்தியாவில் சாதியின் அமைப்பியக்கம் பற்றிச் சமர்ப்பித்த கட்டுரையில் சாதி முறையின் தோற்றுவாய்க்கும் அது நீடித்திருப்பதற்குமான காரணங்களில் முக்கியமானதாக அகமணமுறையைக் குறிப்பிட்டார். ஒத்த குழுவில் ஆண் பெண் விகிதத்தில் நிகழும் வித்தியாசம் அதையொட்டிப் பெண்கள்மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை ஏறுதல், ஆண்களின் துறவு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்தல் போன்ற போக்குகளை இதன் தொடர்ச்சியாக விவரித்தார். 1936இல் சாதிஒழிப்பு என்ற தலைப்பில் தயாரித்த உரையொன்றில் சாதி யொழிப்புக்கு உண்மையான வழி கலப்புமணம்தான் என்னும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். இதைத் தவிர வேறெதுவும் சாதியைப் பலவீனப்படுத்த முடியாது என்றும் இதைப் புரிந்துகொள்வதே நோயின் மூலத்தைக் கண்டறிவதாகும் என்றும் அறிவித்தார்.

சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல்வாதியைவிடத் தீரம்மிக்கவன். இச்சூழல் சார்ந்து ஏற்படும் சவாலான நிலையையும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சமூகத்தின் பொதுப் புத்தியாகிவிட்ட சாதியச் சூழலைச் சமரசமில்லாமல் எதிர்கொள்ளும் சீர்திருத்தவாதியென்று யாரையும் நம்மால் குறிப்பிட முடியவில்லை. அரசியல்வாதிகளிலிருந்து நூலிழை இடைவெளியிலேயே அறிவுலகமும் உலகமும் செயற்பட்டுவருகிறது.

பிராமணரல்லாதோரின் சாதியமைப்பு பற்றிய அறிவுத்துறை விவாதங்கள் சாதியமைப்பைப் பாதுகாப்பதில் அவற்றுக்குள்ள பங்களிப்பைக் குறித்து முறையாக விவாதிப்பதைத் தவிர்க்கின்றன. இந்த விஷயத்தில் எல்லோருமே மௌனம் காக்க விரும்புகிறார்கள். கலப்பு மணத்திற்கு எதிரான தற்போதைய சாதி இந்துக்களின் குரல்கள் அரசியல் தளத்தில் பேசப்பட்டு வந்த சாதி ஒழிப்பு அல்லது சாதி மறுப்பு என்னும் கருத்தியலை தீவிரமாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.

சாதி மறுப்புத் திருமணம் என்பது கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழக அளவில் இயக்கரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்த ஒன்று. பிராமண ஆதிக்கத்திற்கெதிராகத் தமிழகத்தில் உருவான பிராமணரல்லாத இயக்கத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்தது. இப்போது அந்த அடையாளத்தின் எச்சங்கள்கூட இல்லை. சாதி மறுப்பு கைவிடப் பட்டுச் சடங்கு மறுப்பு என்பதாகச் சுய மரியாதைத் திருமணங்களின் சீர்திருத்த எல்லை சுருங்கிவிட்டது. தாலி மறுப்பு, சடங்கு மறுப்பு போன்ற சாதியக் கட்டுமானத்தில் எந்த விரிசலையும் ஏற்படுத்தாத சுயமரியாதைத் திருமணங்களைக் கண்டு ஆதிக்கசாதியினர் ஒருபோதும் பதற்றமடைவதில்லை. அத்தகைய திருமணங்கள் சமூகக் கட்டமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதவரை அவற்றை வரவேற்பதிலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இருந்து வந்த சமூகப் பாதுகாப்பு பலவீனமடைந்ததற்குப் பின்னால் உள்ள அரசியல்ரீதியான காரணங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் சாதாரண மனிதர்களிடையே சாதி கடந்த காதல், கலப்பு மணங்கள் இயல்பான செயல்பாடுகளாக நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்திருமணங்கள் பற்றிய பிரகடனங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பதுமில்லை. சாதி கடந்த காதல், கலப்புமணத்திற்கு எதிரான ஆதிக்க சாதியினரின் வன் முறை சாதியத்தின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. சாதிக்கட்டுமானத்தை மீறும் சொந்தக் குழந்தைகளைக் கொலைசெய்தாவது சாதியின் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஆதிக்க சாதியினர் தயங்குவதே இல்லை. அதைப் பற்றிய பெருமிதமும் சாதிய மனத்தின் ஒரு கூறு என்றே சொல்லலாம். நாகரிகச் சமுதாயம் சாதிய வன்முறைகளுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் எதிராக இருப்பதுதான் சாதியத்திற்குப் பெரிய சிக்கல். முன்புபோல அவற்றை எளிமையாகச் செய்ய முடியவில்லை. ஆகவேதான் அதற்குச் சட்ட அங்கீகாரத்தைக் கோருகிறார்கள். இதற்கு முதல் காரணம் சமூக அடிநிலைச் சக்திகளான தலித்துகளுக்குக் கல்விரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. நவீன வாழ்வு சார்ந்த மாற்றங்கள் மற்றொரு முக்கியக் காரணம். இதன் விளைவாகக் காதலும் கலப்பு மணங்களும் திட்டமிடப்படாத, இயல்பான போக்காக வளர்ந்து வரு கின்றன. காதல், திருமணம், குடும்பம் சார்ந்த மதிப்பீடுகளும் கருத்தியல்களும் வேகமாக மாறிவருகின்றன.

சாதி கடந்த திருமணங்களுக்கு ஆதரவாக இருந்துவந்த, முன்பு சாதி ஒழிப்பை ஒரு வேலைத்திட்டமாகக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இவ்விசயத்தில் மேற்கொண்டு வரும் மௌனம் பரீசிலிக்கத்தக்கது.

சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எழுந்துள்ள இக்குரல்களில் தீவிர தலித் எதிர்ப்பு வேர்கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதனால்தான் திராவிட இயக்க அமைப்புகளோ தமிழ்த் தேசிய அமைப்புகளோ சாதியமைப்புகளின் கலப்புமண எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்கொள்ளவில்லை. பெரியார் திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மேற்படி கூட்டம் நடந்த மண்டபத்துக்கு வெளியே அதைக் கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களைத் தமிழகக் காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பிரச்சினைகளின்போது அவற்றைக் கண்டனம் செய்வதன் மூலம் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சடங்காக மாறிவிட்ட சூழலில் குறிப்பிட்ட பிரச்சினையின் கருத்தியல் பின்னணியையும் அது ஏற்படுத்தி வரும் மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்வது அவசியம். இதற்கான விவாதங்களை அறிவுஜீவிகள் மட்டுமே உருவாக்க முடியும். மேற்கண்ட சாதியினர் சாதியமைப்பால் பயன்படுத்தப்படுகிறவர்கள் என்ற கருத்தைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இன்றைய சாதியமைப்பின் நலன்களைப் பாதுகாப்பதில் இவர் களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இந்நிலையில் பிராமணரல்லாத சாதிகளின் குரலாகச் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் கருத்தியல் பின்னணிகளைப் பேசுவதில் ஈடுபட்டு வந்த எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ் உள்ளிட்ட திராவிட சார்பு மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள் தற்போதைய சூழலில் இயக்கக் கருத்தியல் குறுக்கீடுகளை நிகழ்த்த வேண்டியது அவசியம்.

ஒரு காலக்கட்டத்தில் திராவிட இயக்கத்தால் சாதி மறுப்புத் திருமணங்கள் கொள்கையளவில் வற்புறுத்தப்பட்டிருந்தாலும் அந்த இயக்கத்தின் மையச் சக்திகளாக விளங்கிய ஆதிக்க சாதிகள் அதை ஏற்கவில்லை. சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட சமபந்தி போஜனம், கலப்புமணம் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் ஆதரவில்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியைத் தன்னுடைய சாதி ஒழிப்பு (1936) என்னும் நூலில் எழுப்பும் அம்பேத்கர் இவ்விரண்டு கொள்கைகளும் இந்துக்களின் புனிதமான நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருப்பதானாலேயே அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிறார். இங்கிருக்கும் ஒவ்வொரு சாதியினரும் தங்களை இந்துக்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இந்து மதத்தின் மொத்தப் பிரதிநிதியாகப் பிராமணர்கள் காட்டப்பட்டு எதிர்க்கப்பட்டாலும் பிற இந்து சாதிகளிடம் இந்து மனோபாவமே செயற்படுகிறது. ஓர் இந்துவுக்கு சாதியே முதல் அடையாளம். கலப்புமணம் பற்றிப் பேசும் அம்பேத்கர் சாதியைப் போற்றும் மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களை எதிர்க்க வேண்டும் என்கிறார்.

சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது, அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும் என்றார். இங்குச் சாஸ்திரத்தின் குறியீடான பிராமணன் மட்டுமே புறக்கணிக்கப்பட்டான். மாறாக சாஸ்திரம் கற்பிக்கும் சாதி அதிகாரம் புறக்கணிக்கப்படவில்லை. ஒவ்வொரு சாதி இந்துவின் உளவியலிலும் சாதி என்னும் அதிகாரம் இவ்வாறுதான் குடிகொண்டிருக்கிறது. அதுதான் இன்றைய எதிர்ப்பின் கருத்தியல் அடிப்படை. இவ்விடத்தில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வந்த சாதி அமைப்புகளே இப்போது கலப்புமண எதிர்ப்பிலும் ஒருசேரக் குரலெழுப்புகின்றன. கலப்புமண எதிர்ப்பைக் கூர்மையாக்கும் கொங்கு வேளாளர் அமைப்பும் தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரிவரும் தேவரினப் பாதுகாப்புப் பேரவை போன்ற பிற சாதி அமைப்புகளும் அணிசேர்க்கத் தொடங்கியுள்ளதை இங்குக் கவனிக்க வேண்டும். மறுபுறம் தம் சாதி பற்றி இந்த அமைப்புகள் உருவாக்கிப் பரப்பிவரும் பிம்பங்கள் கூர்ந்து கவனக்கத்தக்கவை. தம்மை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு ஒவ்வொரு சாதிக்கும் இருக்கிறது. அதற்கான வரலாற்றுச் சான்றுகளை அவை தேடுகின்றன. ஆனால் இட ஒதுக்கீடு முதலான சலுகைகளைக் கோருவதற்காகத் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றன. தீரன் சின்னமலையைக் கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என நிறுவுவதில் வெற்றி பெற்றுவிட்ட கொங்கு வேளாளர் அமைப்புகள் தம்மை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வருகின்றன. ஆதாயங்களுக்காகத் தம்மைத் தலித்துகளைவிட மோசமாக ஒடுக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வதற்கும் தயங்குவதில்லை. பலவேளைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணையாகத் தங்களுக்கும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றனர்.

பெரியாரியத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் சாதி கடந்த திருமணத்திற்கெதிரான இத்தகைய அமைப்புகளின் நடவடிக்கைகளைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்குக் காரணமுண்டு. வாக்கு வங்கி அரசியல் முக்கியக் காரணம். சாதி ஆதிக்கத்தையும் தங்களுடைய நலனையும் ஒருசேரத் தக்கவைத்துக்கொண்ட இக்கட்சிகள் இச்சாதியினரையோ சாதி அமைப்புகளையோ பகைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது. இந்நிலையை உருவாக்கியது இக்கட்சிகளே. அரசியல் பெரும்பான்மைக்காக எண்ணிக்கை சிதையாமல் காப்பது, சிறு சிறு குழுக்களை ஒன்றாக்குவது என்றெல்லாம் சாதிப் பெரும்பான்மை வாதம் கூர்மை பெற்று வருகிறது. தமிழகத்தில் மதச் சார்புடைய கட்சி செல்வாக்குப் பெறமுடியாமல் போகலாம். ஆனால் சாதியைப் பகைத்துக்கொள்ளும் எந்தக் கட்சியும் இங்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதே கசப்பான உண்மை.


(நவம்பர் 2012 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை)

Wednesday, 16 May 2012

சுகுமாரனின் 'சுதாரிப்பு'

கோ.சுகுமாரன்
எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்திராத புதுச்சேரி கோ.சுகுமாரன் எழுதிய சிறுபதிவொன்றை முகநூலில் (Facebook) காணமுடிந்தது. ஏப்ரல் 14ந்தேதி நெய்வேலி விருதுகள் வழங்கும் விழாவில் "பெரியார் பிறக்காத உ.பி.யில் தலித் முதலமைச்சராக முடிகிறது. ஆனால் பெரியார் பிறந்த தமிழக மண்ணில் முதல்வராக முடியவில்லை" என்று திருமாவளவன் பேசியதான ஒரு கூற்றை மட்டும் எடுத்துக்காட்டி மறுப்பு எழுதியிருக்கிறார். அண்மையில் பேட்டியொன்றிலும் (ஆழம் மே 2012) திருமாவளவன் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர் அல்லாத பெரும்பான்மை இடைநிலைச் சாதிகளின் அதிகாரத் தளத்தில் தேர்தல் அரசியல் சார்ந்து இயங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியும் மேற்கண்ட பெரும்பான்மைவாதத்திற்குக் கட்டுப்படவேண்டியிருப்பதால் சமரசத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அது அவ்வப்போது கருத்தியல் தளத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் விழிப்புணர்ச்சியைக் கூட முடக்கும் எத்தனம்தான் சுகுமாரனின் இப்பதிவு.

முதலில் அவர் திருமாவளவனின் இக்கூற்றை எடுத்துக்காட்டி பிரச்சினைக்குரியதாகக் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறு உண்மை கூட பெரியார் என்னும் திருவுரு மீதான விமர்சனமாக மாறிவிடக்கூடாது என்ற அச்சம் அவருக்கிருக்கிறது. இதேபோல்தான் முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆராதிப்பதற்காக அக்கட்சி சமத்துவப் பெரியார் என்ற பட்டத்தைத் தந்தபோது அச்சீரழிவைப் பற்றி ஒருவரி கூட விமர்சிக்காமல் சமத்துவப் பெரியார் என்ற பெயரைப் பற்றி மட்டுமே அவர் வல்லினம் இதழில் விமர்சித்து எழுதியிருந்தார். அதாவது கருணாநிதியைச் சமத்துவப் பெரியார் என்று சொன்னால் பெரியார் ஈ.வே.ரா. 'சமத்துவமற்றவரா?' என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் எழுதியிருந்தார்.

முன்பு பெரியார் - திராவிட இயக்கம் பற்றி விமர்சனம் செய்ததாக வெவ்வேறு காரணங்களின் பெயரால் திருமாவளவனைக் கொத்தித் தீர்த்த பலரும், தலித் பிரச்சினைகளுக்கு அழுத்தம் தராமல் தமிழ் அரசியல், எந்தவொன்றிலும் தனித்துக் கருத்து கூறாமல் பொத்தாம்பொதுவான பிராமண எதிர்ப்பு கருத்து நிலை என்றெல்லாம் வந்துவிட்ட பின்னால் அவரை அது சார்ந்து விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டனர். திருமாவளவனையோ தலித் கட்சிகளையோ விமர்சிப்பதில் ஈழத்தை ஆதரிப்பவரும், ஆதரிக்காதவரும் ஒன்றுபடும் புள்ளி இது. யாரும் சீரழியும் போது வராத மறுப்பு சீரடையும் போது வந்துவிடுகிறது.

காஞ்சி மடத்தைப் பற்றிப் பேசுவோர் கிராமக் கோயில்களில் தலித்துகள் நுழையமுடியாமலிருப்பதைப் பேசுவதில்லை என்று முன்பொருமுறை திருமாவளவன் கூறியிருந்தபோது "இரண்டும் ஒன்றா?" எனக் கேட்டு அக்கூற்றைப் பிராமண ஆதரவு கொண்டது என்ற அளவிற்கு மாற்றியிருந்தார் ஓர் அறிவுஜீவி. மேலிருப்பவரை மட்டுமே எதிரியாகக் காட்டிக்கொண்டு கீழிருக்கும் தலித்துகளுக்குச் சமத்துவம் அளிக்காததுதான் இன்றைய பிராமணரல்லாத அரசியல் என்கிற பொருள் கொண்டது திருமாவின் அவ்விமர்சனம்.

பிராமணர் அடையாளங்களை மட்டுமே எதிரியாகக் காட்டும்போது இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் பொத்தாம்பொதுவாகப் பேசி தப்பித்துக்கொள்பவர்களுக்கு, பதிலளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். ஆனால் இப்படியொரு விமர்சனம் செய்தாலே பிராமணர் ஆதரவு என்றாக்கிவிடும் எளிமைப்படுத்தல்தான் இங்கிருக்கிறது. "தலித்துகள் பேசும் கருத்து பிராமண ஆதரவாகிவிடக் கூடாது என்பதற்காக பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கத்தைப் பேசாமல் அவர்களையும் அரவணைத்துப் பேசவேண்டும்; இவ்வாறு பேசினாலும் அவர்கள் கிராமந்தோறும் வெட்டிக்கொண்டே இருப்பார்கள். தலித்துகள் செத்துக்கொண்டே இருக்கவேண்டும்" என்பதுதான் நியதியாக இருக்கிறது.

கிராமப்புறக் கோயில்களின் தலித் புறக்கணிப்பு போன்றவற்றை அவ்வப்போதான கூற்றுகளாக உதிர்க்காமல் செயல்திட்டமாகக் கொண்டுசெல்லாமலிருப்பது அக்கட்சியின் குறைபாடுகளாக இருந்தாலும் எப்போதாவது இப்படியொரு கேள்வியை எழுப்புவதையும் மறுக்கவேண்டுமா? தலித்துகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் சார்பாக உண்மையறியும் குழு செல்வது மட்டுமே உண்மையறிதலாகிவிடாது. அவர்களை ஒடுக்கிய / ஒடுக்கும் சக்திகள், அதில் நடந்துள்ள சமகால மாற்றங்கள், சாதிமுறையால் பலன்பெறும் சாதிகள் - அவற்றிற்குக் கிடைக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் பரிசீலனை செய்வதும் உண்மையறிதல்தான்.

திருமாவளவன்
திருமாவளவனின் கூற்று பெரியாரை விமர்சிப்பதாகக் கருதி சுகுமாரன் அதை மறுத்திருக்கிறார். பெரியார் பணியாற்றியும் கூட அம்மண்ணில் தலித்துகளுக்கு எதிரான மனோபாவத்தை மாற்ற முடியாத அளவிற்கு அது ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்று நேர்மறையாகக் கூட இதை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சுகுமாரன் உண்மையை அறிபவராயிற்றே. தலித்துகள் அதிகாரம் பெறாமலிருப்பதற்குப் பெரியார் காரணமல்ல. மாறாக தலித்துகளே காரணம் என்று கூறி அவர்களையே குற்றவாளியாக்கியிருக்கிறார்.

தலித்துகள் உட்சாதிகளாகவே இருக்கிறார்கள், தலித் அரசியல் தலைமைகள் அவர்களை ஒருங்கிணைக்கவில்லை என்று கூறி, குறிப்பாக திருமாவளவனையே சுட்டிவிட்டு, ஆனால் உ.பி.யில் தலித்துகளை மாயாவதி ஒருங்கிணைத்ததாலேயே முதல்வரானார் என்கிறார். மற்றெந்த காரணத்தையும் அவர் கூறவில்லை. சுகுமாரனின் இப்பதிவிற்கு "முதல்வர் பதவிக்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?" என்று பின்னூட்டமிட்டு, அதைத்தான் சுகுமாரனும் கேட்கிறார் என்று சுகுமாரனை ஆமோதித்து பின்நவீன 'அறிஞர்' ஒருவரின் கூற்றும் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் தலித் சாதி ஒருங்கிணைப்பு பற்றி பல்வேறு தலித் தலைவர்களின் நிலைபாடும், முயற்சியும், வரையறையும் என்ன? தலித் சாதிகளின் ஒருங்கிணைவில் தலித் அல்லாதோரின் தலையீடும் பங்களிப்பும் என்ன? போன்றவற்றை விரிவாகப் பேசும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் வெளிப்படும். அவ்வாறு வெளிப்பட்டால் தலித் ஒருங்கிணைப்பில் தலித் தரப்பு குறைபாடு மட்டுமல்ல, தலித் அல்லாத தரப்பின் குறைபாடும் தெரியவரலாம். எனவே என்னுடைய குறிப்பு அதை விடுத்து சுகுமாரனின் மறுப்பில் அடங்கியுள்ள வேறுசில பிரச்சினைப்பாடுகளைச் சொல்ல முயற்சிக்கிறது.

தலித்துகளின் அதிகாரம் பற்றிய கருத்தில் தலித்துகளின் ஒற்றுமைக்குறைவை மட்டுமே காரணம் காட்டி தலித் அதிகாரத்திற்கு எதிராக உள்ள மற்ற பிரச்சினைகளைப் பேசாமல் விடுவது அல்லது மறைப்பது நியாயமல்ல. அதிலும் தலித்துகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதும் யாரும் தங்கள் தரப்பின் குறைபாடுகளை விவாதிக்காமல் தலித்துகளையே குறைகூறுவது தலித் மக்களுக்கு நன்மை செய்வதாகாது என்பதைப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை.

முதலில் சுகுமாரனும் அவரை ஆதரிப்போரும் திருமாவளவனின் கூற்றை எளிமைப்படுத்தி, தாங்கள் பதிலளிப்பதற்கு ஏதுவாகக் குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் கூற்று பெரியாரை மட்டுமே காரணமாக்கியிருக்கிறது என்று கொள்வதைக் காட்டிலும், அவர் நடத்திய அரசியல் பணிகளின் விளைவு, அவருடைய அரசியல் வாரிசுகளின் தலித் பற்றிய மனோபாவம், அவருடைய கருத்தியல் மற்றும் பணி, சாதி எதிர்ப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்றெல்லாம் அதை விவரிக்கமுடியும். அதில் எந்தப் பெரியார் புறக்கணிப்பும் இல்லை. பெரியாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் அவர் மீதான சிறு விமர்சனமாகவும் அது அமைந்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்த அளவிலான விமர்சனத்தைக் கூட ஒடுக்கப்பட்டோர் அரசியல் இயக்கம் முன்வைக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது மோசமான மனோபாவம். 

இங்கு செல்வாக்கு செலுத்திவரும் பிராமண எதிர்ப்புவாதம் பிராமணரல்லாத சாதிகளின் பெரும்பான்மையை வலியுறுத்துகிறது. இப்பெரும்பான்மைவாதம் ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள எண்ணிக்கைப் பெரும்பான்மை இடைநிலை சாதியினரை வலிமையாக்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்துவந்த நிலவுடைமை, பிராமண இந்து மதத்திற்கான ராணுவ சேவை போன்றவற்றால் சமூக அதிகாரம் பெற்றிருந்த பிராமணரல்லாத சாதியினருக்கு, திராவிட இயக்கம் பேசிய கருத்தியல் "அரசியல் அதிகாரத்தை"க் கொண்டுவந்திருக்கிறது. வட்டார அளவில் தலித்துகளை ஒடுக்கிவந்த பெரும்பான்மை இடைநிலைச் சாதியினருக்குக் கிடைத்த இந்த அரசியல் அதிகாரம் தலித்துகளை அதிக பலத்தோடு ஒடுக்குபவர்களாக மாற்றியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகாலத்தில் அரசியல் தளத்தில் நடந்துள்ள மாற்றம் இது. இதற்குப் பிராமணரல்லாத அரசியல் பெரும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. பிராமணரை அகற்றமுடிந்த இவர்களால் சாதி என்கிற அளவில் தங்களுக்குக் கீழிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளை அரவணைக்க முடிவதில்லை.

தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களில் மட்டுமல்ல; உள்ளாட்சி பிரதிநிதித்துவம், கட்சிகளின் கிளை, ஒன்றிய, வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகங்களிலும் கோலோச்சிவரும் பிற சாதியினர் தலித்துகளைப் புறக்கணித்து வருகின்றனர். இப்போக்கைப் பிரதிபலிப்பதில் திராவிடக் கட்சிகளும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களும் முதன்மை; தற்போதிருக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் மட்டுமே தலித்துகளுக்குப் பாதுகாப்பு. இச்சலுகைகள் கிடைத்ததில் திராவிட இயக்கங்களுக்கு எவ்விதப் பங்கும் இருந்ததில்லை. மாறாக இச்சலுகைகள் அமுல்படுத்தப்படாமல் இருப்பது இவர்கள் ஆட்சியிலேதான். தற்போது பெரியாரிடமிருந்து திராவிடக் கட்சிகள் வேறுபட்டு இருந்தாலும் இவர்கள் அதிகாரம் பெற்றிருப்பதும், அதிகாரத்தைத் தக்க வைப்பதும் அவர் உருவாக்கிய பிராமண எதிர்ப்புக் கருத்தியல் மற்றும் பணியின் விளைவுதான் என்பதை மறுக்கமுடியாது. இவ்விடத்தில் பெரியாரை முற்றிலுமாகப் புறக்கணிப்பது நம் நோக்கமில்லை என்றாலும் அவரை விமர்சிக்காமல் செல்லவேண்டும் என்று கோருவது நியாயமல்ல.

பிராமணர்களால் ஒதுக்கப்பட்டவர்களென்று அரசியல் நியாயம் கோரிய பிராமணரல்லாதார் தற்காலத்தில் அதிகாரம் பெற்று, பிராமணர்களைக் கட்டுப்படுத்தியிருப்பதோடு, தலித்துகளையும் ஒடுக்குகிறார்கள் என்கிற உண்மை, மாற்றத்திற்குட்படாத பிராமணரல்லாதோர் என்ற கருத்தியலால் தற்கால அதிகாரத்துவத்தை மறைக்கப்படுகிறது. அதே வேளையில் கிராம அளவில் இந்த பிராமணரல்லாத சூத்திரச் சாதியினரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறவர்களாக இருந்தும் தலித் கட்சிகளால் இம்முரண்பாடு அரசியல் தளத்திற்குக் கொண்டுவரப்படும்போது நாமெல்லாம் பிராமணரல்லாதார் / திராவிடர் / தமிழர் என்ற அடையாளங்களால் முடக்கப்படுகிறார்கள். 

எனவே  இந்த பிராமணரல்லாதார் என்ற அரசியலின் வரலாறு, அதில் தலித்துகள் இருத்தி வைக்கப்பட்ட இடம் போன்றவற்றையெல்லாம் பேசும்போது பெரியாரும் அதில் வருவார். அவர் பேசி வந்த பிராமணரல்லாதார் அரசியலால் அவர் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். அதை மீறுவதற்கு அவர் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செய்ததாகக் கூறமுடியாது. தன்னுடைய அரசியல் வரலாற்றில் குறிப்பான தலித் பிரச்சினை என்ற அளவில் ஒரு போராட்டத்தைக் கூட அவர் நடத்தியதில்லை. மற்றபடி அவர் நடத்திய வேறு சில போராட்டங்களை மொத்தத்தில் பார்க்கும்போது அது தலித்துகளுக்கும் சாதகமானதாக அமைந்திருந்தது என்று வேண்டுமானால் கூறலாம். 

பெரியார்
பெரியார் சூத்திரர்களின் இழிவு பற்றிப் பேசி வந்த அதே காலத்தில்தான் கிராம அளவில் சூத்திரர்களால் திணிக்கப்பட்ட பிணக்குழி தோண்டுதல், செத்த மாடெடுத்தல், பறையடித்தல் போன்றவற்றை எதிர்த்து தலித்துகள் போராடியபோது மௌனமாக இருந்தார். கருத்து ரீதியாகச் சூத்திர சாதி முதலாளிகளைச் சாதகமாகப் பார்த்த அவரால் தலித் சாதித் தொழிலாளிகளைத் திரட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திட்டமட்டுமே முடிந்தது. எனவே தமிழகத்தில் நடைபெற்ற சமூகநீதி அரசியல் என்பது பிராமணரல்லாதார் என்ற பெயரால் தன்னைச் சாதுர்யமாகப் பாதுகாத்துக் கொண்டு தலித்துகளையும் மேலெழ முடியாமல் தடுத்துவருகிறது. சாதியுணர்வு அரசியல்மயப்படுத்தப்பட்டு, கண்ணுக்குத் தெரியாமல் இறுக்கமடைந்துள்ளது. அரசியல்மயமாகாத இடத்தை விட அரசியல்மயப்பட்ட இந்த இடம் இன்னும் ஆபத்தானது.

பெரியார் போன்றோர் பணியாற்றாத உ.பி.யில்  சாதி இந்துக்களை எதிர்கொள்வது தமிழகத்தைவிட எளிமையாக இருக்கலாம். அங்கு தலித்துகளைக் கட்டுப்படுத்த பிம்பங்களோ கருத்தியல்களோ இல்லை. இந்த அர்த்தத்தில்தான் திருமாவளவன் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய வாசிப்பிற்கே அதிக சாத்தியம். சுகுமாரன் கொண்டிருந்த அர்த்தத்தை இங்கிருந்தும் மறுக்கமுடியும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சூத்திரசாதியினரின் வன்முறை பற்றி சுகுமாரனோ, அவருடைய நண்பர்களோ அறியாதவர்கள் என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அவர்களே பேசியிருக்கிறார்கள். ஆனால் சூத்திரர்களின் ஏகபோகம், வன்முறை பற்றிய சிக்கல் வரும்போது அதை ஒத்துக்கொள்வதோ, கடுமையாகக் கண்டனம் செய்வதோ மட்டும் அதற்கு எதிராகச் செயல்பட்டதாக முடியாது. இச்சூழலைக் காப்பாற்றிவரும் / மௌனமாக்கிவரும் அரசியல் சூழல், கருத்தியல் எவையெவையெனப் பேசுவதும் தேவை. ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி அறிவுஜீவியைப் போல் பேசியிருப்பதும், அறிவுஜீவியென்போர் அரசியல்வாதியைப் போல் வாதத்தை எளிமைப்படுத்தி ஒற்றையான பதிலைச் சொல்வதும்தான் நம் அறிவுச்சூழலின் கதி போலும்!

சுகுமாரனின் மறுப்பில் சூத்திர சாதியின் பெரும்பான்மைவாதம், தலித்துகளின் மீதான அரசியல் புறக்கணிப்பு பற்றி ஒருவரி விமர்சனம் கூட கிடையாது. உ.பி.யில் மாயாவதியின் வெற்றி தலித் ஒருங்கிணைப்பால் மட்டுமல்ல. தலித்துகளை நேரடியாக ஒடுக்கும் பெரும்பான்மை சாதியைக் குறிப்பாக அடையாளம் காட்டி, அப்பெரும்பான்மை சாதியைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் தலைமையில் பிற எண்ணிக்கைச் சிறுபான்மையினரை ஒன்று சேர்த்ததால் பெற்ற வெற்றி அது என்பதை அவர் கூறவில்லை. கூறவிரும்பவும் மாட்டார்.  தமிழகத்தில் ஒரு தலித் கட்சியை அப்படி விடுவார்களா? எப்பாடுபட்டாவது அக்கட்சியைப் பெரும்பான்மைவாதக் கருத்தியலுக்குள் உள்ளடக்காமல் விடமாட்டார்கள். இப்போது கூட ஒரு சிறு விமர்சனத்திற்குதான் இத்துணை மறுப்பு.

அதே போல தமிழகத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மை இல்லாத சாதிகளின் கூட்டு, அதற்கான தலித் கட்சிகளின் முயற்சி என்பதெல்லாம் எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதோடு அப்படியான முயற்சி கூட இல்லை. மேலும் உ.பி.யில் தலித் உட்சாதிகளிடம் முரண்பாடே இல்லையென்பதும் சரியல்ல. எனவே, திருமாவளவனின் கூற்றை மறுப்பதற்கு நியாயமற்ற காரணத்தையும் அர்த்தத்தையும் கைக்கொண்டது தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள சுகுமாரனுக்குப் பயன்பட்டிருக்கிறது எனலாம். இதையெல்லாம் எழுதினால் சுகுமாரனின் மனித உரிமைச் செயற்பாடுகளை மறந்துவிட்டு எழுதுகிறார்கள் என்று பதில்கள் வரும். ஒருவரை விமர்சிக்கிறோம் என்று சொன்னால் அவரது பிற செயற்பாடுகளையும் மறுக்கிறோம் என்று எதிர்கொள்வது தமிழ்ச்சூழலில் விமர்சனத்திற்கு எதிராகக் கையாளப்படும் ஓர் கவசம் மட்டுமே.

- ஸ்டாலின் ராஜாங்கம்