Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Sunday, 20 January 2013

தர்மபுரி வன்முறை: மாறும் அரசியல் முகங்கள்


ஸ்டாலின் ராஜாங்கம்

நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.


ராமதாஸ்
தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்முதலில் வெளிப்படையாகச் சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். லண்டனிலிருந்து திரும்பிய திருமாவளவன் உடனடியாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்டுவிட்டு சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வன்முறைக்கு பாமகவே காரணம் எனக் குற்றம்சாட்டினார். திருமாவளவனின் நேரடிக் குற்றச்சாட்டு ராமதாஸைப் பதற்றத்திற்குள்ளாக்கியது. வருத்தம் தெரிவிப்பதற்குப் பதில் வன்னியர்களின் வன்முறையை வெளிப்படையாக ஆதரித்தார். அதற்கான நியாயங்களை அடுக்க முற்பட்டார். நடந்த வன்முறைக்கு பாமக காரணமல்ல என்றதோடு தலித்துக்கள்மீது குற்றம் சுமத்துவதற்கும் அவர் தயங்கவில்லை. தன்னை விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் கடுமையாகச் சாடினார். வன்முறைக்குப் பிறகு திருமாவளவன், ராமதாஸ் இருவருமே பொறுமை காப்பதுபோல் தோன்றியது. இருவருக்கும் இடையிலான கடந்தகால அரசியல் உறவுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். சூழலில் ஏதாவது சாதகமான மாற்றம் உருவாகக்கூடும் என இருவருமே நம்பியிருக்கலாம். ஆனால் கள நிலவரமும் சாதிசார்ந்த முரண்பாடுகளும் இப்போது அவர்கள் இருவரையும் எதிரெதிராக நிறுத்தியுள்ளன. பாமகவின் செய்பாடுகளால் தமிழகத்தில் சாதிய வன்முறைக்கான களம் தயார் செய்யப்பட்டுவிட்டது. அந்த வகையில் ராமதாஸின் சமீபத்திய செயல்பாடுகள் மற்ற சாதிவெறியர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் ராமதாஸை ஆதரிக்கவில்லை என்றாலும் இப் பிரச்சினையில் பூடமாகவே போகும் போக்கில் கருத்து தெரிவிக்கின்றன. ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கான ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ஒடுக்கும் சாதிகளுக்கு முரணில்லாத வகையிலேயே இக்கட்சிகள் நடந்துகொள்ள விரும்புகின்றன. வெகு சில இடதுசாரித்தன்மையுடைய தமிழ்த் தேசிய இயக்கங்களைத் தவிர ஈழப் பிரச்சினைக்குப் பின்பு தலையெடுத்த புதிய தமிழ்த் தேசிய அமைப்புகளிடம் வலதுசாரித் தன்மையே மேலோங்கி இருக்கிறது.

தலித் வெறுப்பைக் கொண்டிருக்கும் தலித் அல்லாத சாதிகளைக் கலப்புமண எதிர்ப்பு, வன்கொடுமை தடுப்புச் சட்ட எதிர்ப்பு போன்ற வற்றின் மூலம் ராமதாஸ் ஒருங்கிணைக்க முயல்கிறார். இதற்கு முன்பு தலித்துகள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டபோதெல்லாம் தலித் இயக்கங்களே எழுச்சிபெற்று வந்துள்ளன. ஆனால் தர்மபுரி வன்முறைக்கெதிரான தலித் இயக்கங்களின் செயல்பாடுகள் ஒரு எல்லைக்குமேல் அரசியல்ரீதியாக விரிவடையவில்லை. ஆனால் பாமக உள்ளிட்ட சாதிய அமைப்புகளின் அரசியல் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ராமதாஸின் இம்முயற்சிக்குக் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை என்னும் பெயரில் கோவைப் பகுதியில் செயல்படும் புதிய அமைப்பைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ஆதரவளிக்கவில்லை என்பதே உண்மை. ராமதாஸ் கூட்டிய தலித் அல்லாத சாதிகளின் கூட்டத்திற்குப் பெரும்பான்மைச் சாதிகளிலிருந்து அவற்றைப் பிரதி நிதித்துவப்படுத்தும் சக்திகள் என்று யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு இரண்டு காரணங்களைக் சொல்லலாம். பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு ராமதாஸைப் போன்ற வலுவான தலைமை எதுவும் இல்லை. ராமதாஸின் தலித் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பிற சாதித் தலைவர்கள் மறுப்பவர்கள் அல்ல என்றாலும் ராமதாஸின் அரசியல் தலைமைமீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் விடுத்த அறிக்கையில் இப்பிரச்சினை ராமதாஸின் சொந்த அரசியல் நோக்கம் பாற்பட்டது என்று கூறியிருந்ததைக் கவனிக்க வேண்டும். ஆனால் தனக்கு வன்னியர்களின் ஆதரவு பெருகியிருப்பதாக ராமதாஸ் நம்புகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகள் மூலமாகவே வன்னியர்களை ஓரணியில் திரட்ட முடியும் என்று ராமதாஸ் கருதுகிறார். ஓட்டு வங்கி அரசியல் கட்சிகளுக்குப் பொதுவாக உள்ள பலவீனங்கள் விடுதலைச் சிறுத்தைகளிடமும் உள்ளன. ராமதாஸ் அவற்றைச் சுட்டிக்காட்டி அக் கட்சியை ஒரு சமூகவிரோதக் கட்சியாகக் கட்டமைக்க முயல்கிறார். தலித்துகளைப் படிக்கவைப்பதற்கும் ஒழுங்காக வேலைக்குச் செல்வதற்கும் அறிவுரை வழங்குமாறு திருமாவளவனுக்கு அறிவுரை வழங்குமளவுக்கு ஒருகாலத்தில் பெரியாரியவாதியாகவும் பிறகு அம்பேத்காரியவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்ட ராமதாஸ் ஞானம் பெற்றிருக்கிறார். ராமதாஸ் தலித்துகள் பற்றி எந்த அளவிற்கு அருவருப்பான கருத்துகளைக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது தற்போதைய இத்தகைய சாதிவெறிப் பேச்சுகளே சான்று. உண்மையில் தலித் மக்களின் பிரச்சினைகளை விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அரசியல் கட்சியின் எல்லைக்குள் வைத்து குறுக்கிப் பார்க்க முடியாது. தருமபுரியில் தாக்குதலுக்குள்ளான தலித்துகள் அனைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் என்று கூறுவதற்கு எந்த நியாயமும் இல்லை. வன்னியர்-தலித் கலப்புமணம் மட்டுமல்ல பல்வேறு சாதிகளுக்கிடையேயான கலப்பு மணமும் இங்கு நீண்ட காலமாக நடந்து வந்திருக்கின்றன. இந்நிலையில் ராமதாஸ் தலித்துகளின் பிரச்சினையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாகக் காட்டுவது தலித்துகளை அவமதிக்கும் செயல். அவர் கட்டமைக்க விரும்பும் தலித் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு. அதே வேளையில் தருமபுரி வன்முறைக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகளின் நடவடிக்கைகள் கூட்டணி அரசியலின் தேவைகளுக்கு உட்பட்டு அமைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இன்றைய சூழல்சார்ந்த அரசியல் நிலைப்பாட்டுக்குச் சில காரணங்கள் உண்டு. அதிகாரம், அதிகாரத்திற்கான வழி என்பவற்றைத் தேர்தல் என்பதாக மட்டுமே அது புரிந்திருக்கிறது. மேலும் சாதிச் சமன்பாடுகளை ஒருங்கிணைப்பதில் தலித்துகளின் கட்சியாக அது சந்திக்கும் சவால், சமகாலச் சூழலில் தாக்கம் செலுத்திவரும் அரசியல் நிலைபாடுகளை எதிர்கொள்வதிலுள்ள சிக்கலும் முக்கியமானதே. குறிப்பாகத் திராவிட இயக்கங்கள் அடையாள அளவில் தலித்துகளை உள்ளடக்கியும் அதிகார அளவில் விலக்கியும் நடத்திவரும் அரசியலைக் கருத்தியல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்கொள்வதிலுள்ள சிக்கலே அது. பாமகவோடு அடையாள அளவில் இணைந்து நின்று மோசமான பாடத்தைப் பெற்றிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அடுத்தடுத்து தேர்தல் கூட்டணிக்காகத் தொடர்ந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியைச் சார்ந்தேயிருக்கும் அரசியலை அது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சராசரி அரசியல் கட்சிக்கான குணாம்சங்களோடு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் சமரசங்களுக்கு அக்கட்சி ஆளாகியிருக்கிறது. எனவே தற்போது சில தொகுதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டணி, அதைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவிலான போராட்டம், நிகழ்ச்சிகள் என்ற அளவில் அக்கட்சியின் எல்லை குறுகிவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தலித் பிரச்சினைகள் விரிந்த பார்வையில் தலித் அரசியல் அதிகாரம் பெறுவதை நோக்கி எடுத்துச் செல்லப்படத்தக்க வகையில் கையாளப்பட வேண்டியவை. அதைத் தேர்தல் நோக்கம் போன்ற உடனடி லாப நட்ட கணக்குகளைச் சார்ந்து மட்டும் பார்க்க முடியாது.

தருமபுரி வன்முறையை ஒட்டி ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுள் முக்கியமானது திராவிட இயக்கங்களின் தலித் ஆதரவு நிலைப்பாடு. வருத்தம் தெரிவித்த அதிமுகவைத் தவிர திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளன. பெரியார் திராவிடர் கழகமும் தற்போதைய திராவிடர் விடுதலை கழகமும் தலித் பிரச்சினைகளில் ஏற்கனவே அக்கறை செலுத்தி வந்தவையே. திமுகவோடு சேர்ந்தியங்கும் திராவிடர் கழகம் தலித் பிரச்சினையொன்றில் வெளிப்படையாகத் தன் கண்டனத்தை இப்போதுதான் வெளியிட்டது. தருமபுரியிலேயே மாநாடு ஒன்றையும் நடத்தியது. திராவிட இயக்கங்கள் இப்பிரச்சினையில் குறிப்பான நிலைபாட்டிற்கு வந்திருக்கின்றன.

திராவிட இயக்கங்களின் இத்தகு ஆதரவு நிலைபாட்டை ஒட்டி திராவிட இயக்கங்களே தலித்துகளின் நிரந்தர அரண் என்ற கருத்து எழத் தொடங்கியுள்ளது. திராவிட இயக்கங்களின் தலித் ஆதரவு அரசியல் மட்டத்தோடு மட்டுமே நிற்கும் நிலையில் திராவிட இயக்கங்களின் தலையீட்டை வரவேற்க வேண்டிய அதே வேளையில் அதற்கான காரணங்களையும் இதிலிருக்கும் வரையறைகளையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. இத்தலையீடு அரசியல் ரீதியானதாக மட்டுமே இருக்குமானால் பாமகவுடனான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறவைப் போன்று தற்காலிகமானதாகவே முடியும். மாறாகத் தலித் எழுச்சியின் வழி உருவாகியிருக்கும் கருத்தியல் மாற்றங்களையும் கணக்கில் கொண்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்புவது முக்கியமானது. இந்தக் கேள்வி அரசியல் தளத்தில் இல்லாமல் போகலாம் ஆனால் கருத்தியல் தளத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் தலித் இயக்கங்களின் எழுச்சி திராவிடர் இயக்கங்களின் போதாமையால் எழுந்தது மட்டுமல்ல திராவிடக் கட்சிகளின் அரசியலாலும் அடையாளத்தாலும் சாதிமயமாகிவிட்ட மொத்த சூழலுக்கும் எதிராக முளைவிட்ட கலகம் அது. அடுத்து சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதில் தலித் இயக்கங்கள் கிளப்பிவிட்ட புதிய எதார்த்தங்கள் திராவிட இயக்கக் கருத்தியல் வரையறைகளைத் தாண்டியது.

இந்நிலையில் தலித் இயக்கங்களின் கடந்தகால அரசியல் உறவு தந்த அனுபவங்களின் அடிப்படையில் இக்கேள்விகள் தவிர்க்க இயலாதவை. ஆனால் இங்கு இது போன்ற கேள்விகளும்கூட எழுப்பப்படக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தர்மபுரி வன்முறை சம்பவத்திற்கு எதிராகக் கிடைக்கும் ஆதரவும் இல்லாமல் போய்விடும் என்று காரணம் கூறப்படுகிறது. விமர்சனம் இல்லாமல் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதே அரசியல் ஆதரவுக்கான நிர்ப்பந்தமாக இருக்குமானால் அரசியல் ஆரோக்கியம் பேணுபவர்கள் என்று நம்மைச் சொல்லிக்கொள்வதில் எந்த நியாமும் இல்லை. தருமபுரி வன் முறைக்கு எதிரான திராவிட இயக்கக் குரல்களில் கலப்புமண ஆதரவு, ராமதாஸ் எதிர்ப்பு, தலித் ஆதரவு ஆகிய மூன்றும் பேசப்படுகின்றன. கடந்த காலங்களில் திராவிடர் கழகத்தின் நிலைபாடுகளுள் ஒன்றாகயிருந்த கலப்புமணம் பற்றிய மறுபேச்சைத் தொடங்குவது அவர்களுக்கு கடினமானதல்ல. அடுத்து திராவிடக் கட்சிகளையும் மொழி அடையாள நோக்கில் திராவிட அடையாளத்தையும் தொடர்ந்து சாடிவரும் ராமதாஸை வன்மையாக எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ள திராவிட இயக்கம் அவருக்கு எதிரான வாய்ப்பாகவும் இச்சூழலில் நிற்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றன. ராமதாஸ் இறுகப் பற்றியிருக்கும் சாதிப் பெரும்பான்மைவாதம் பற்றியோ அப் பெரும்பான்மைவாதத்திற்குக் கருத்தியல் வலிமைதந்த பிராமண எதிர்ப்பு அரசியல் பற்றியோ எந்தவிதப் பரிசீலனையும் இல்லாமல் இதை ராமதாஸ் எதிர்ப்பு பிரச்சினையாகவே பார்ப்பதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற சனநாயக முறை சார்ந்து உருவான சாதிப்பெரும்பான்மை வாதத்தைக் கருத்தியில் சார்ந்து பிராமணர்களை மட்டுமே ஆதிக்க சாதிகளாகக் காட்டிப் பிற சாதிகளைக் காப்பாற்றின என்பதால் இச்சூழல்மீது திராவிட இயக்கங்கள் கருத்துகூற வேண்டியவையாக உள்ளன. ஆனால் அத்தகைய பேச்சே இல்லை.

மாறாக இப்போக்கு ராமதாஸ் என்னும் அரசியல்வாதியின் தவறான நிலைப்பாடாக சொல்லப்பட்டு அவ்விடத்தில் தலித் சார்பாக நின்றுகொள்கிறார்கள். தலித் ஆதரவு என்பதுகூட தலித்துகளிடம் செல் வாக்குப் பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அருகே வைத்துக்கொள்வதாகவே இருக்கிறது. மேலும் திராவிட, தலித் கட்சிகளின் இக்கூட்டுக் குரல் திமுக கூட்டணி அரசியல் நலனோடும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

திராவிட கட்சிகளின் இந்த அளவிலான தலித் ஆதரவு நிலைப்பாட்டிற்குக்கூடக் கடந்த இருபதாண்டுக் கால தலித் அரசியல் எழுச்சியும் ஒரு காரணம். பிராமணரல்லாத சூத்திர சாதிகளின் வன்முறைக்கு எதிராக அடித்தட்டு மக்களை அரசியல்மயப்படுத்தியதின் மூலம் பிராமணரல்லாதார் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தலித் இயக்கத்தை அரவணைப்பதன் மூலம் அதன் தனித்த சொல்லாடலை உள்ளிழுத்து அதைத் தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதார் அடையாளத்தின் அங்கமாக்கிவிடும் அபாயம் இதிலிருக்கிறது. சாதிவன்முறை இவர்களால் கண்டிக்கப்பட்டாலும் பிராமணரல்லாதோரின் சாதிவெறி பிராமண சூழ்ச்சியின் விளை வாகவே சொல்லப்பட்டு இன்றைய சாதிமுரண்பாடுகளுக்கு ஏதாவதொரு வகையில் பிராமண ‘டச்’ தரப்படுகிறது. சமகால அரசியல் தேவை என்ற முறையிலும் அரசியல் தனிமைப்படுத்தலுக்கு எதிரான உடனடி ஆதரவு என்ற முறையிலும் திராவிடக் கட்சிகளின் இக்கூட்டணி திருமாவளவனுக்குத் தேவைப்படும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் அவரின் கூட்டணி நிலைப்பாடு திராவிட அரசியலின் குரலாக ஒலிப்பதையும் தவிர்க்க முடியாத தாக்கிவிடலாம். இவ்விடத்தில் தலித்துகளை ஒடுக்கும் சூத்திரர்கள் மீதான கோபம் மடைமாற்றப்பட்டு சூத்திர சாதிகளின் சமகால அதிகாரம் பற்றிய ஸ்தூலமான எதார்த்தம் மறைக்கப்படும் நிலைமை கேள்வியில்லாமல் தங்கி நிற்கும்.

திருமாவளவன்
இந்நிலையில் அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள திராவிட இயக்கம் மற்றும் தலித் அமைப்பு சார்ந்த இக்கூட்டணிக்கான கருத்தியல் முகம் போன்று அ. மார்க்ஸ் எழுதி வருகிறார். இதைக் குறித்து அவர் தனது முகப் புத்தகத்தில் இரண்டு முக்கியக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். ஒன்று, தலித் அல்லாத சாதிகளைக் கொண்டு தான் ஏற்படுத்த விரும்பும் சமூகக் கூட்டணி பற்றி ராமதாஸின் கூற்று குறித்தது. ராமதாஸின் தமிழியம் சாதிய நோக்கம் கொண்டதாக இருப்பதால் அவரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் திராவிடம்தான் பார்ப்பன எதிர்ப்பு குணம் கொண்டது என்பதால் சரியானது என்று அவர் வாதாடுகிறார். அதோடு இக்கருத்திற்குத் திராவிட இயக்கத்தை விமர்சித்துவரும் தலித் அறிவுஜீவிகளும் பதிலளிக்க வேண்டும் என்று கூறுகிறார். தலித் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது இந்த இரண்டு அடையாளங்களின் தற்போதைய மோதலும் உள்ளீடு அற்றது. எண்ணிக்கை பெரும்பான்மை பலம்கொண்ட சாதிகளுக்குகிடையேயான அதிகார மோதலே அது. சாதி உணர்வை வெவ்வேறு வகைகளில் மறைத்துக்கொள்ளும் அடையாளங்கள் என்ற வகையில் இரண்டுமே விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டியவை. திராவிடமும் தமிழியமும் சாதிப் பெரும்பான்மை வாதத்தையே நியாயமாக்குகின்றன. இந்நிலையில் தமிழியத்தின் சாதியப் பண்பைக் காட்டி தலித்துகளைத் திராவிட இயக்கக் கருத்தியல் பக்கம் இழுக்கும் நோக்கம்தான் அ. மார்க்ஸிடம் இருக்கிறது.

அ. மார்க்ஸ் தரும் மற்றொரு குறிப்பு டிசம்பர் ஒன்பதாம் தேதி கி. வீரமணி தருமபுரியில் நடத்திய சாதித் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை தொடர்பானது. திமுக, திக ஆகிய கட்சிகளோடு சேர்ந்து தன் கட்சியும் மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என்று கூறிய திருமாவளவனின் கூற்றை எடுத்துக் காட்டிச் சிலாகிக்கும் அவர் திராவிட இயக்கங்களோடு தலித் இயக்கம் கொண்டுள்ள கூட்டணி இயற்கையானது என்று குறிப்பிடுகிறார். அத்தகைய கூட்டணி தொடர வேண்டுமென்று அங்குப் பேசியதோடு இடையில் சில காலம் ஏதோ பெரியாரும் திராவிட இயக்கமும் தலித்துகளுக்கு எதிரானது என்பதுபோலச் சிலர் சுயலாபங்களுக்காகப் பரப்பிவந்த கருத்தைத் தருமபுரி கலவரம் உடைத்துள்ளது என்கிறார். தருமபுரி வன்முறையை எதிர்கொள்வதும் தமிழியத்தை எதிர்கொள்ளும் திராவிட ஆதரவும் ஒன்றே என்பதைப் போல் அவரால் காட்டப்பட்டாலும் உண்மையில் அவர் பேச விரும்புவது தருமபுரியை பற்றியல்ல. மாறாக அவரின் நீண்ட நாளைய அறிவுஜீவி ஈகோவைச் சமன்செய்யும் வாய்ப்புப் பற்றியே. அதாவது கடந்த காலத்தில் பெரியாரை அ. மார்க்ஸ் மாற்று சிந்தனையாளராக முன்னெடுத்ததும் ரவிக்குமார் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் முற்றிலுமாகப் புறக்கணித்து விமர்சித்ததையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. பெரியார் பற்றிய விமர் சனத்தை ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழியாக முன்வைத்தார். பெரியார் மற்றும் திராவிட இயக்க விமர்சனத்திற்கு தலித் இயக்கத்ங்களின் கருத்தியல் குரலாக ரவிக்குமார் விளக்கியதைப் போன்று திராவிடம் பெரியார் ஆதரவிற்கான கருத்தியல் குரலாக அ. மார்க்ஸ் இங்கே வெளிப்படுகிறார். இதன் மூலம் தன் பழைய கருத்தியல் நிலைபாட்டைத் தூசுதட்ட முடியாத அரசியல் நலனோடு பிணைந்திருக்கும் ரவிக்குமாரின் கடந்த கால விமர்சனங்களைத் தகர்ப்பது அவருக்கு எளிமையாகிவிடுகிறது. திமுகவுடனான கூட்டணி, தர்மபுரி வன்முறைக்கு எதிரான ஆதரவு என்ற வகைகளில் திராவிட இயக்கங்களோடு கூட்டைப் பேணும் திருமாவளவன் இடம்பெற்றுள்ள மேடையிலேயே இதை செய்யும்போது இக்கூற்று இரண்டு தரப்பின் ஒப்புதலையும் பெற்றதாகிவிடுகிறது. தன் தரப்பிற்காகக் காத்திருந்து வாய்ப்பைப் பயன்படுத்தும் அரசியல்வாதி நிலையில் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து தலித்துகளுக்கு ஆதரவளிக்கும் இயக்கங்கள் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வலுப்பெற்று வந்திருக்கும் தலித் கருத்தியலை முடக்குவதற்கான வாய்ப்பாக இதை மாற்ற முயல்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் சனநாயகம் சார்ந்து உருவாகியிருக்கும் சாதிப் பெரும்பான்மை வாதம் திராவிட இயக்கத்தால் சமூக நீதி என்னும் பெயரால் வளர்த்தெடுக்கப்பட்டது. இப்பெரும்பான்மை வாதம் தலித்துகளின் அரசியல் எழுச்சியை இன்றளவும் கட்டுப்படுத்தி வருகிறது. திராவிட இயக்கத்தின் பார்ப்பன எதிர்ப்புக் கருத்தை எவ்வித விவாதமும் இல்லாமல் அது சாதி எதிர்ப்புதான் என்று ஒற்றைச் சொல்லால் நியாயப்படுத்திவிட்டு அ. மார்க்ஸ் நகர்ந்துவிடப் பார்க்கிறார். ஆனால் தமிழகப் பிராமண எதிர்ப்பு இயக்கம் உள்ளடக்கத்தில் பிராமண வெறுப்பைப் பேசிய சூத்திர எழுச்சியே என்பதை விமர்சனபூர்வமாக ஒத்துக்கொண்டால் அவருடைய தற்போதைய இந்த அவசரமான கருத்துகளிலுள்ள பிரச்சினையைப் புரிந்துகொள்ளலாம். எம்எல்ஏ, எம்பி ஆகிய அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டுமல்ல அரசுசார்ந்த திட்டங்கள், பொது ஏலம், அரசு மூலதனம் போன்றவையும் பெரும்பான்மைச் சாதியினருக்கானதாக ஆக்கப்பட்டுவிட்டது. இவையாவும் திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சிகளில் நடந்தவையே.

மேலும் இன்றைய சாதிமுரண்பாடு என்பதே ஒவ்வொரு வட்டாரத்தின் பெரும்பான்மை சாதிக்கும் அங்கிருக்கும் தலித்துகளுக்குமானதே. அதோடு சாதியின் தோற்றம் தொடங்கி இன்றைய சாதிய அதிகாரப் பரிமாற்றம் வரையிலும் பலன்பெற்ற/ பெறும் பல்வேறு சாதிகளின் பங்கும் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் பிராமண எதிர்ப்பு என்னும் ஒற்றை அணுகுமுறையால் தலித்துகளைக் கட்டுப்படுத்த நினைப்பது என்பது தான் சார்ந்த அறிவுஜீவித நிலைப்பாட்டின் அரிப்பே தவிர வேறல்ல.

திராவிட இயக்கம் பற்றிய மார்க்சின் விமர்சனம் ரவிக்குமார் சார்ந்தது மட்டுமல்ல தன் சக அறிவுஜீவியை எதிர்கொள்வதற்கான விமர்சனம். தலித் இயக்கத்திற்கான கருத்தியல் தேவையாகவும் இருப்பதை அறிந்து கொண்டு செயற்பட்டது மட்டுமே ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். மேலும் அன்பு பொன்னோவியம், தி. பெ. கமலநாதன் போன்ற தலித் முன்னோடிகளும் திராவிட இயக்கத்தை விரிவாக விமர்சித்து எழுதியுள்ளனர். தலித்துகளின் இத்தகைய விமர்சனத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக ரவிக்குமாரைக் காட்டி தலித்துகள் வளர்த்தெடுத்து வந்த கருத்தியல் தொடர்ச்சி அனைத்தையும் பொய்யென்று பேசுவது தலித்துகள்மீது தொடுக்கப்படும் உள்நோக்கம் கொண்ட தாக்குதல் என்றே சொல்ல வேண்டும். 1990களில் தமிழகக் கிராமப்புற தலித்துகளின் குரலாக எழுந்த தலித் அமைப்புகளின் எழுச்சியோடு உருப்பெற்ற கருத்தியலே அது. தலித் மக்களை அணி திரட்டிய திருமாவளவனின் ஆரம்ப கால பேச்சு ஒன்றில்கூட பிராமணர் மீதான தாக்குதலைக் கேட்டுணர முடியாது. பிராமணர்களை எதிரியாகக் காட்டவேண்டிய எதார்த்தம் ஏதும் உள்ளுர் அளவில் இல்லாததால் இந்நிலை. இந்த உண்மையை ஒத்துக்கொள்வதற்கும் இந்நிலைமையே தலித் அமைப்புகளின் குரலாக நீடிப்பதிலும் திராவிட இயக்க ஆதரவாளர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. பெரியார், திராவிட இயக்க விமர்ச்சனத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்ந்த தளத்திலும் வெளியிலும் முன்வைத்தபோது ரவிக்குமார்மீதும் கட்சிமீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் கொஞ்சமல்ல. ஆனால் திராவிட இயக்கம், பெரியார் சிந்தனைகளைத் தொகுப்பதற்கும் பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் தலித்துகளுக்காக இரட்டைக் குவளை முறை ஒழிப்பு முதலான நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தியதற்கும் அந்த விமர்சனமே காரணமாகியது. ரவிக்குமார்மீதான அ. மார்க்ஸ் உள்ளிட்டோரின் ஆத்திரம் திருமாவளவன்மீதான தாக்குதலாகவும் இருந்தது. இத்தகு எதிர்வினைகள் பற்றித் தனிநூலே எழுத முடியும். வெகுஜன கட்சியாக இயங்க வேண்டிய திருமாவளவன் நம் சூழல் உருவாக்கிய எதிர்ப்புக்கு பணிந்துபோனதோடு ரவிக்குமாரும் அக்கட்சியில் சட்டமன்ற உறுப்பினராகித் தான் மேற்கொண்ட விமர்சனங்களுக்கு மருதலாகி நின்றுவிட்டார். ஒருவகையில் தலித் இயக்கத்திற்கான கருத்தியல் தளத்தின் தொடக்க முயற்சி இவ்வாறு நீர்த்துப்போனது என்றே சொல்ல வேண்டும்.

திராவிட இயக்கம் பற்றிய விமர்சனம் கைவிடப்பட்டு தேர்தல் சார்ந்த உறவுகளுக்கேற்ப முழுமையாகத் தன்னை தகவமைத்துக்கொண்ட பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமீது தொடுத்து வந்த தாக்குதல் முற்றாகக் கைவிடப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகுதான் அக்கட்சி பெரிய அளவில் சமரசங்களைச் சந்தித்ததோடு தலித் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டிய நிலையிலிருந்தும் பிறழ்ந்தது. அவர்கள் விரும்பும் அரசியல் சட்டகத்திற்குள் தலித்துகள் இருந்துகொண்டால் போதும் என்று மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி அவர்களின் எந்தவித நடவடிக்கைகளும் பிரச்சினையாகப் பார்க்கப்படுவதில்லை. சுப. வீரபாண்டியன் போன்ற திராவிட கட்சி ஆதரவு அறிவாளிகள் அந்த அரசியல் சட்டகத்தைத் தலித்துகள் தாண்டி விடாமல் பார்த்துக் கொள்வதற்காகவே தலித் அரங்குகளில் இயங்குகிறார்கள். பெரியார் பிறக்காத உத்தரப் பிரதேசத்தில் தலித் ஒருவர் முதல்வராக முடிகிறது. தமிழகத்தில் அது முடியவில்லை என்ற வெகு எதார்த்தமான திருமாவளவனின் கூற்றுகூட இங்கே உடனே மறுக்கப்படுகிறது. அண்மையில் ஆனந்த விகடனில் அவரளித்த கேள்வி பதில் பகுதியில் பெரியார் பிறந்த தமிழகத்தில் தலித் முதல்வராக முடியவில்லை என்பதைக்கூடச் சொல்ல முடியவில்லை என்று கூறியிருந்தமை நம் சூழலில் தலித்துகளின் அரசியல் விமர்சனம் பிராமணரல்லாத அரசியல் சட்டகத்தால் கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதாக இருந்தது. அரசியலில் மட்டுமல்லாது கருத்தியல் தளத்திலும் செல்வாக்குப் பெற்றுள்ள திராவிட இயக்கத்தின் இத்தகைய ஏகபோகத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவதே நடைமுறை அரசியலுக்குப் பயன்படும் என்ற நிலையிருக்கும் திருமாவளவனைச் சாட்சியாக வைத்துக்கொண்டு தலித்துகள் நடத்திவந்த கருத்தியல் தனித்துவத்தை முடக்க நினைப்பது நியாயமல்ல. இங்கே தலித் அல்லாத அறிவுஜீவிகள் தலித் பிரச்சினைகளைப் பேசுவதில்லை என்றும் யாரும் சொல்லிவிட முடியாது. அதோடு தலித்துகளுக்காக நாங்களே எழுதுவோம், பேசுவோம், தலித்துகள் அதையெல்லாம் கேட்டுச் செயற்பட்டால் போதுமானது என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டியிருக்கிறது.
நன்றி : காலச்சுவடு

தமிழைத் தின்ற சாதி (தருமபுரி வன்முறை பற்றிய குறிப்புகள்)

- ஸ்டாலின் ராஜாங்கம்

புகைப்படங்கள்: ஜெய்கணேஷ்

நவம்பர் 7ஆம் தேதி வன்னியர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்ட தருமபுரியின் மூன்று கிராமங்களுக்கு எழுத்தாளர் குழுவாக நவம்பர் 10ஆம் நாள் சென்றிருந்தோம். செப்பனிட முடியாத அளவுக்கு எல்லா வீடுகளும் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருந்தன. உடல்மீதான வன்முறையைத் தவிர்த்துவிட்டு வீடுகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய திட்டமிட்ட சம்பவம் இது. மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வற்றவில்லை. எங்கள் குழுவில் மறைமுகமாகவேனும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளாதவர் யாருமில்லை. வாழ்விடத்தை இல்லாமலாக்குவது சாகடிப்பதைவிட மோசமான வன்முறை. இந்நிலைமை பாதிக்கப்பட்டவனின் இருப்பையே அழிக்கிறது. உயிரை மட்டும் விட்டுவைப்பதன் மூலம் இழப்பு ஏற்படுத்திய வலியிலேயே அவனை உழலவைக்கும் உளவியல் தந்திரம் இது. எலி வளையானாலும் தனிவளை என்பது தமிழ்ப் பழ மொழி. தலித் ஒருவன் வீடு கட்டுவது அசாதாரணமானது. முதலீடும் உழைப்பும் கால அளவும் அளப்பரியன. குறைந்தபட்ச வசதிகளோடு ஒரு வீட்டைக் கட்டிவிடுவது தலித்தின் வாழ்நாள் சாதனையாகிவிடுகிறது. மூன்று கிராமங்களிலும் எல்லா வீடுகளும் சீர்குலைக்கப்பட்டிருப்பதோடு ஒரு வீட்டின் எல்லாப் பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு 1987இல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றுவரையிலும் தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துவதும் வீடுகளை அழிப்பதும் வன்னியர்களின் வன்முறை வடிவங்களாக இருந்து வருகின்றன.

மூன்று கிராமங்களில் கொண்டம்பட்டி என்னும் ஊரில் ஒரு வீட்டில் முழுக்கக் கருகல் நெடி. ஏறக் குறையப் பத்து மூட்டை நெல் தீக்கிரைக்கிரையாக்கப்பட்டுள்ளது. எரிந்து சிதைந்த வீட்டிற்கு வெளியே வீடிழந்த பெண் குத்துக்காலிட்டுக் கதறியழுதுகொண்டிருந்தார். அவருக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காததுதான் வியப்பு என்றார் ஒருவர். மறுபுறம் பக்கத்துக் கிராமங்களின் உறவினர்களும் ஆர்வலர்களும் திரட்டித் தந்த உணவையும் உடைகளையும் பெற்றுக்கொள்ளப் பாதிக்கப்பட்ட மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். வரிசையில் வந்துகொண்டிருந்த ஒரு பெண் என்ன நினைத்தாரோ அவற்றை வாங்க மறுத்துக் கதறியழுதார். இத்தகு அழிவுகளையும் வலிகளையும் புரிந்துகொள்ள ஒருவர் தலித்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது. ஆனால் தலித்துகளின் துயரக் குரலை எந்தவிதத்திலும் பொதுச் சமூகம் பொருட்படுத்துவதில்லை. இத்தகைய அழிவிற்குப் பின்னும் அம்மக்கள் யார்மீதும் சிறு கல்லும் எடுத்தெறியவில்லை. சாதியமைப்பின் பகுதியாகிய இத்தகைய ‘சகிப்புணர்வைப்’ பயன்படுத்திக் கொண்டு நம் சமூகம் தலித்துகளைத் தொடர்ந்து சுரண்டுகிறது.

நாங்கள் சென்றிருந்தபோது மூன்று கிராமங்களிலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மட்டும் இருந்தனர். அடுத்தடுத்துத் தலித் அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் அப்பகுதிக்கு வந்துவிட்டனர். சில நாட்கள் கழித்துச் சில அமைப்புகள் கண்டனம் வெளியிட்டன. எனினும் தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் இப்பிரச்சினையில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அல்லது தலித்துகளுக்கு முகம் காட்டி, வன்னியர்களுக்கும் பாதகமில்லாமல் பேச விரும்புகிறார்கள். தலித் ஆணும் வன்னியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதையொட்டி இப் பிரச்சினை ஏற்பட்டது. வன்னியர் சங்கமான பாட்டாளி மக்கள் கட்சியும் கொங்கு வேளாளக் கவுண்டர் அமைப்புகளும் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக விடுத்த சவாலைக் கண்டுகொள்ளாமலிருந்த தமிழகத்தின் பெருவாரியான அமைப்புகளையும் அறிவுஜீவிகளையும் தருமபுரிச் சம்பவம் பேசவைத்துள்ளது. இதற்கு மூன்று தலித் கிராமங்கள் அழிய வேண்டியுள்ளது. தலித்துகள்மீது நடந்த தாக்குதல் மட்டுமல்லாது சேதத்தின் அளவும் அரசியல் நெருக்கடியும் சேர்ந்தே இவ் விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன.

பெரியார் முன்னெடுத்த அரசியல் கருத்தாக்கத்திற்கே பெரிய நெருக்கடி என்ற முறையில் பெரியார் இயக்கங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ஏற்கனவே போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகம் தவிரத் தமிழகத்தில் கடந்தகாலங்களில் நடந்துவந்த பல்வேறு சாதி வன்முறைகளுக்கு உரிய எதிர்வினையை ஆற்றாத திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி போன்றோர் சம்பவப் பகுதிகளுக்கு வந்ததோடு, கலப்பு மணத்திற்கு ஆதாரவான மாநாடு, போராட்டங்களை அறிவித்துள்ளனர். எனினும் தருமபுரிப் பிரச்சினையைக் கண்டிக்க அவர்களுக்குப் பிராமண எதிர்ப்பு அடையாளமும் தேவைப்படுகிறது. ‘பிராமணர்கள் கபே’ எதிர்ப்பு மட்டுமே போதாது, பிற ஆதிக்கச் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் எனத் தலித் செயல்பாட்டாளர்கள் பேசத் தொடங்கிய பிறகே எல்லாச் சாதிப் பெயர்களையும் நீக்குவதென்னும் மாற்றம் ஏற்பட்டது. எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஆதிக்கச் சாதிகளின் எதிர்ப்பைச் சார்ந்து பல்வேறு ஆதிக்கச் சாதிகளும் கலப்பு மணத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ள நிலையில், கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் போராட்ட அறிவிப்பில் எதிர்ப்பிற்குரிய முதல் சாதியமைப்பாகப் பிராமணர் சங்கத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. பிராமணர் சங்கம் எதிர்க்கப்படக் கூடாதது என்பதும் நம் கருத்தல்ல. மாறாகப் பெரும்பான்மை வன்முறையை எதிர்ப்பதற்குப் புழக்கத்திலிருந்து வரும் அரசியல் நம்பிக்கை தேவைப்படுகிறது. இங்குப் புதிதாய் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள யாரும் தயாராயில்லை.

கலப்புத் திருமணத்துக்கு எதிரான காடுவெட்டி குருவின் பேச்சைக் கண்டிப்பதிலும் போராட்டம் நடத்துவதிலும் அக்கறை காட்டும் பெரியாரிய அமைப்புகளும் பல்வேறு முற் போக்கு அமைப்புகளும் கவுண்டர், வன்னியர் போன்ற பெரும்பான்மைச் சாதியினர் இம்முடிவுக்கு வந்தடைந்த விதத்தையும் அவர்களிடம் தீவிரம்பெற்றுள்ள தலித் வெறுப்பையும் ஆராய வேண்டும். இட ஒதுக் கீட்டுக்காகப் போராடிய சாதிகள் என்பது முதற்கொண்டு இன்றுவரையிலும் அச்சாதிகளிடம் இட ஒதுக்கீடும் அரசியல் அதிகாரமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அளவிலும் அச்சாதிகள் மத்தியிலும் செயல்பட்டுவந்த சாதி சாராத அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் தீண்டாமையையும் தலித்துகள் பற்றிக் கொண்டிருந்த சித்தரிப்புகளையும் பரிசீலிக்க வேண்டும். இத்தகு மாற்றங்களையெல்லாம் கொண்டு அதற்கேற்பச் சாதி மறுப்புச் சொல்லாடல்களைக் கட்டமைக்காதபட்சத்தில் இதுபோல் ஆண்டுக்கொரு காடுவெட்டி குருவை நாம் கண்டிக்க வேண்டிவரலாம். இந்திய அளவிலான பிராமண அதிகாரம் தகர்ந்துவிடவில்லையெனினும் வட்டார அளவிலான பெரும்பான்மை ஆதிக்கச் சாதி அதிகாரம் வலுவடைந்திருப்பதையும் தேவையெனில் அது பிராமண அதிகாரத்தோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதோடு பிராமணர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்கிறது. இவ்வாறு சாதி தரும் அதிகாரம் ஒடுக்கப்பட்ட சாதிகளை அமுக்கிவைப்பதோடு இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது. இந்திய ஜனநாயகத்திற்குச் சாதிப் பெரும்பான்மைவாதம் பெருந்தடையாக மாறும் என்ற அம்பேத்கரின் கவலை நடை முறையில் நிரூபணமாகிவருவதைப் பார்க்கிறோம்.

காடுவெட்டி குருவின் கலப்பு மண எதிர்ப்பு உரையோடு முரண்படும் அமைப்புகள் பலவும் சாதிப் பெரும்பான்மைவாதத்தைக் கண்டுணராதது மட்டுமல்ல அதையே கடந்த காலங்களில் சமூக நீதி என்று பேசியும் செயல்பட்டும்வந்துள்ளன என்பதுதான் சாதிசார்ந்து இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கிலெடுக்காமல் போவதற்கான முக்கியக் காரணமாகும். மொத்தத்தில் இன்றைக்குச் சாதி என்பது தீண்டாமையா பண்பாட்டு அடையாளமா அதிகாரமா அல்லது இவையெல்லாம் இணைந்த வடிவமா? இத்தகு அம்சங்களில் கூர்மையடைந்திருப்பதும் மழுங்கிப் போயிருப்பதும் எவையெவை? இப்படியெல் லாம் இன்றைய உலகமயமாதல் சூழலில் ஆழமாக அணுகிச் சாதியச் சொல்லாடலைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. அத்தகு அக்கறை நம் சூழலில் அழுத்தம் பெறாததாலேயே நம் சமூகம் சாதிய வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி, திராவிட அமைப்புகளில் பெரியாரிய அமைப்புகள் தவிரப் பிரதானக் கட்சிகள் வன்முறையை மட்டும் கண்டித்திருக்கின்றன. காடுவெட்டி குருவின் பேச்சையோ சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பையோ அவை பேசாமல் தவிர்த்துள்ளன. மதிமுக சார்பாகக் குழுவொன்று அக்கிராமங்களுக்குச் செல்லும் என்னும் வைகோவின் அறிக்கை சாதி, தலித், ஒடுக்குமுறை போன்ற எந்தச் சொல்லும் இடம்பெறாமல் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ராமதாஸின் சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பைவிடத் திராவிட அடையாளம்மீதான அவரது எதிர்ப்பே திராவிடக் கட்சிகளை அதிகம் கோபப்படுத்தியிருக்கிறது. ராமதாஸுக்கு எதிரான பெரியாரிய இயக்கங்களின் எதிர்ப்பில் இந்த அம்சத்திற்கும் இடமுண்டு. கடந்த நவம்பர் 18ஆம் தேதி மறைமலைநகர் திமுக இளைஞரணிக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி திராவிட அடையாளத்துக்கு எதிரான ராமதாஸின் விமர்சனத்தை மறைமுகமாகச் சாடியிருந்தாரே ஒழிய அவரது அண்மைக்காலச் சாதியப் பேச்சுக்கு எதிராக எந்தச் சொல்லும் உதிர்க்கவில்லை. திராவிட அடையாளத்தின் முக்கிய அம்சமாகக் கொள்ளப்பட்டிருந்த பிராமண எதிர்ப்பினூடான சாதிய எதிர்ப்பை மீண்டும் பேசிச் சாதி சார்ந்த ஓட்டுகளை இழப்பதை விடத் திராவிடமா தமிழனா எனப் பேசிவிடுவது கருணாநிதிக்குச் சுலபம். அதிகாரிகளால் வழங்க முடிந்திருக்கிற அரசு உதவித் தொகையை அமைச்சர் ஒருவரை அனுப்பி வழங்கச்செய்வதன் மூலம் தன் தரப்பை நிறுவிக்கொள்ளப் பார்க்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆதிக்க சாதிகள் பற்றியோ வட்டாரரீதியான பெரும்பான்மை சாதிகள் பற்றியோ வெளியாகும் தவறான சித்தரிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போராட்டமும் கண்டனங்களும் தெரிவிப்பது மட்டுமல்ல ஒரு அரசே அவற்றுக்கு ஆதரவாக எதிர்வினையில் ஈடுபடுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கோ வாழிடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டாலும் அந்த நியாயம் பொருந்துவதில்லை. ஓட்டு சாராத ‘தமிழ்த் தேசிய’ அமைப்புகள் பலவும் இதைக் குறித்துப் பேசுவதையே தவிர்த்துள்ளன. கண்டனம், எதிர்ப்பு என்ற வகையில் திராவிட இயக்கம் சாதகமாகத் தெரிகிறபோதிலும், தலித் அக்கறை என்ற அளவில் திராவிடத் தேசியத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் தூரம் அதிகமில்லை என்பதே உண்மை.

                                                                                  o

தர்மபுரி நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் நடந்த வன்முறை என்ற அளவில் இந்தப் பிரச்சினை அரசியல்ரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது. 1980களில் நக்சல்பாரி இயக்கம் செயல்பட்ட பகுதி இது. இரட்டைத் தம்ளர் ஒழிப்பு போன்ற தீண்டாமை ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்ட நக்சல்பாரிச் செயல்பாட்டாளர்கள் காவல் துறையால் கொல்லப்பட்டனர். அதேபோல வன்னியர்களைப் பொறுத்தவரை கடலூர், அரியலூர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய குழுக்கள் செயல்பட்டுள்ளன. இது போன்ற காலங்களில் அமுங்கிப் போயிருந்த சாதி உணர்வு 1987 வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது ஒன்று திரட்டப்பட்டது. வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டபோது, சிதறிக்கிடந்த தமிழ்த் தேசிய குழுக்களும் கட்சி சாராமல் செயல்பட்டுவந்த மார்க்சியர்களும் அக்கட்சியை ஆதரித்தனர். எஸ்சி - பிசி ஒற்றுமை மேடைகளில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாமக தேர்தல் கட்சியாக மாற்றம்பெற்றபோது, அது வன்னியர்களின் சாதி உணர்வை முன்னெடுத்தது. நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அதிகாரத்தை எட்டுவதற்காகச் சாதித் திரட்சியும் அதற்கான சாதி உணர்வும் பயன்படும் என்கிறபோது சாதி மறுப்பு போன்று சவாலான நிலைப்பாட்டை எடுக்காமல் சமூகத்தின் சாதியப் புத்தியைப் பயன்படுத்திக்கொள்வதோடு அதைக் கூர்மைப்படுத்தும் செயல்பாடுகளிலும் பாமக ஈடுபட்டது. அக்காலகட்டத்தில்தான் கடலூர் மாவட்டத்தில் தலித்துகள் மத்தியில் பரவிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் வன்னியர்களால் வன் முறையோடு எதிர்கொள்ளப்பட்டது.

தர்மபுரி வன்முறையில் கணக்கில்கொள்ள வேண்டிய மற்றுமொரு அரசியல் காரணி பாமக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி பற்றியதாகும். வன்னியர்களையும் தலித்துகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்களாகச் செயல்பட்ட இக்கட்சிகள் கடந்த பத்தாண்டுகளாக அரசியல் தளத்தில் இணைந்து செயல்பட்டதால் இச் சமூகங்களிடையே சாதகமான மாற்றங்கள் உருவாகும் என எதிர் பார்க்கப்பட்டது. தங்கள் கூட்டணிக்கான நியாயமாக அக்கட்சிகளும் சமூக நல்லிணக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தின. ஆனால் இக்கூட்டணி வெறும் தோற்றமே என்பதைத் தருமபுரி எதார்த்தம் காட்டியிருக்கிறது. வன்னியர்கள் மத்தியில் இக்கூட்டணி எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே அறிய முடிகிறது.

இவ்விரண்டு கட்சிகளின் அடையாளரீதியான கூட்டணி, உள்ளூர் நிலவரம் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு இத்தகைய அனுபவம் வியப்பானதாக இருக்க முடியாது. முரண்படும் இரண்டு வகுப்பினரின் கட்சிகள் என்ற முறையில் முரண்பாட்டுக்கான காரணம், அதைக் களைவதற்கான தொடர்முயற்சிகள் என்பதாக இக்கட்சிகளின் கூட்டுச் செயல்பாடுகள் அமையவில்லை. மாறாகத் மொழி போன்ற எளிதில் உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சினைகளின் அடிப்படையில் இக்கூட்டணி அமைந்தது. தமிழ் அடையாளம் என்னும் அளவில் கல்விமொழி, நிர்வாக மொழி என்றுகூட ஆக்கபூர்வமாக அமையாமல் சினிமா பெயர் மாற்றம், ஈழப் பிரச்சினை என்ற அளவில் உணர்ச்சிபூர்வமான செயல்களோடு நின்றுகொண்டன. சாதி மறுப்பு என்ற செயல்திட் டத்தோடு முரண்பட்டு வாழும் மக்கள் குழுவினரிடம் சென்று செயலாற்றும் சவாலான நிலைமையை அக்கட்சிகள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில் இக்கூட்டணி தேர்தலில் இரு பெரும்பான்மை வகுப்பினரின் ஓட்டுகளைத் திரட்டும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. எனவே சாதிய அமைப்பு ஒழுங்கில் எவ்வித உடைவையும் ஏற்படுத்தாமல் முற்றிலும் வேறொரு அடையாளத்தின் பெயரால் இக்கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் அரசியல் நம்பிக்கையான தமிழ் அடையாளம்தான் இக்கூட்டணிக்கான காரணமாக அமைந்தது. அக முரண்பாடுகளை மறைத்துப் பொது எதிரியொருவரைக் காட்டி ஒன்று திரளும் அரசியல் உத்தி, உணர்ச்சிபூர்வமாக ஒன்று திரளுதல் என்ற வகையில் தமிழ் அடையாளம் அவர்களுக்கு உதவ முடியும் எனக் கருதப்பட்டது. இரண்டு வகுப்பினரின் அரசியல் அதிகார நிலைப்பாடுகளோடு தமிழ் அடையாளத்தை இணைப்பதில் நிறைய முரண்பாடுகள் இருந்தன. தேர்தல் மூலமான அரசியல் அதிகாரம் என்னும்போது சாதியாகவும் பிறவேளைகளில் தமிழ் உள்ளிட்ட முற்போக்கு அடையாளமாகவும் மாறிவந்ததே ராமதாஸின் கடந்தகால வரலாறு. பெரும்பான்மை சாதி என்ற முறையில் வன்னியர்களின் கட்சி ஆளும் கட்சியாக மாற வேண்டுமானால் முதலில் திராவிடக் கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு பெரும்பான்மைச் சாதி ஒன்றோடு சேர வேண்டும். இந்த நிலைமையில் வன்னியர்களுக்கு அடுத்துப் பெரும்பான்மையான தலித்துகளோடு கூட்டு சேர ராமதாஸ் விரும்புகிறார். சொந்தச் சாதித் திரட்சியையும் விட்டுவிடாமல் மற்றுமொரு சாதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் அடையாளம் ராமதாஸுக்குக் கைகொடுத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரையில் திராவிடக் கட்சிகளின் பெரும்பான்மைவாத அரசியலால் புறக்கணிக்கப்பட்ட தலித்துகளின் குரலைப் பிரதிபலித்து எழுச்சிபெற்ற அமைப்பாகும். தலித்துகளைத் திரட்டுவதில் வேகம் காட்டிய அந்த இயக்கம் அரசியலில் தலித் சார்பான குரலெழுப்பும் குழுவாக மாறியது. எனினும் தேர்தல் கட்சியாக வடிவமெடுத்த இக்கட்சியும் பாமகவின் அரசியல் நோக்கத்தை ஒத்த பண்புக்கு இணங்கியது. பெருவாரியான மக்கள் திரட்சியின் நோக்கமான சாதி ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான செயல்பாடு என்பதை விடுத்துத் திருமாவளவனின் சொந்த விருப்பமான தமிழ் அடையாளம் கட்சியின் பிரதான முழக்கமாயிற்று. தமிழ் அடையாளமானது ராமதாஸைச் சார்ந்து வன்னியர்களிடம் பெற்றிருக்கும் அழுத்தத்தைவிடத் திருமாவளவனைச் சார்ந்து தலித்துகளிடம் பெற்றிருக்கும் அழுத்தம் அதிகம். எனவே இங்கே தமிழ் அடையாளம் அரசியல் நோக்கத்திற்கேற்பக் கையாளப்பட்டு உண்மையில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய சாதி மறுப்பு சார்ந்த செயல்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்நிலையில்தான் தருமபுரியில் தமிழைச் சாதி தின்று தீர்த்திருக்கிறது.

தமிழ் அடையாளத்தை முன்னெடு¢த்த காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்காக அதிக விலை கொடுத்திருக்கிறது. சாதி எதிர்ப்பை எதிர்கொள்வதில் ஏற்பட்டுவிட்ட சமரசங்களே அவை. மாவீரர் தினத்திற்குத் தன்னெழுச்சியாகப் போஸ்டர் ஒட்டும் அக்கட்சியினரிடமிருந்து தருமபுரிச் சம்பவத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எங்கும் சிறு சுவரொட்டியோ மறியலோகூட இல்லாமல் போனது இயல்பானதல்ல. தருமபுரியில் பத்திரிகையாளர் ஒருவர் வன்முறைக்குப் பிறகு வன்னியர்கள் பயப்படுவது எஸ்சி-எஸ்டி சட்டத்திற்கு மட்டுமே என்று என்னிடம் கூறியது பொய்யல்ல.

ஈழ அரசியல் விஷயத்திலும் ராமதாஸுடன் கசப்பான அரசியல் அனுபவம் என்ற முறையிலும் திருமாவளவன் அனுதாபம் தேடுவதை விடுத்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர் என்னும் முறையில் பொறுப்போடு கற்றுக்கொள்வதற்கான அனுபவங்களை இந்த அரசியல் சூழல் அவருக்குத் தந்திருக்கிறது. தர்மபுரி வன்முறைக்குப் பிறகு ராமதாஸை நோக்கிய சீறல், ஆர்ப்பாட்டம் என்பதைத் தாண்டி மற்ற எவற்றையும் அவர் செய்யத் தெரியாமல் இருப்பதையே பார்க்கிறோம். இப்பிரச்சினையை அவர் மைய நீரோட்ட அரசியல் லாபியில் வைத்தே பேச முனைகிறார். தலித் பிரச்சினைகளை உடனடி தேர்தல் நோக்கில் இல்லாமல் பரந்த அளவிலான அணுகுமுறையை நோக்கி எடுத்துச்செல்லும் தொலைநோக்கு எதுவும் அவரிடம் இல்லை. தர்மபுரிப் பிரச்சினையில் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்க விரும்பும் ஊடகங்கள் திருமாவளவனுக்கு ஆதரவாக நின்றுகொள்ள விரும்புகின்றன. வன்முறைக்கு பிறகான ராமதாஸ் கருத்துகளையும் திருமாவளவன் கருத்துகளையும் ஒப்பிட்டு திருமா வளவனின் பக்குவம் பற்றி பேசப்படுகிறதே ஒழிய சாதி எதிர்ப்பு அரசியல் பயணத்தில் திருமாவளவனின் கடந்தகால செயல்பாடுகளின் விளைவுகள், தர்மபுரி போன்ற பிரச்சினைகளின்போது சடங்காகிவிட்ட ஆர்ப்பாட்டங்கள் என்பதைத் தாண்டி இப்பிரச்சினைகளில் அவரின் ஆக்கபூர்வ அழுத்தம் என்னவாக அமையப்போகிறது என்ற விமர்சனக் கண்ணோட்டத்திலான அணுகுமுறை முன்வைக்கப்படவில்லை.

ஏறக்குறையப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணியைக் காட்டித் தலித்துகளை எதிர்கொள்ளும் அரசியல் முயற்சி எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது. கொங்கு வேளாளர் பேரவையின் மணிகண்டன் கலப்புத் திருமண எதிர்ப்பை வலியுறுத்தி மாநாடு அறிவித்திருப்பதும் ஏனைய சாதி இந்துச் சமூகங்களை ஒன்றிணைக்க முயல்வதாகக் கூறுவதும் சாதிச் சங்கத்தின் குரல் மட்டுமல்ல. தமிழகத்தில் கடந்தகால முற்போக்கு நடவடிக்கைகளின் பலனை அறுவடைசெய்து கொண்ட இயக்கங்களின் குரலாகவும் மாறியிருப்பதைப் பார்க்கிறோம். தர்மபுரி வன்முறை குறித்துக் கருத்து தெரிவித்த ராமதாஸ் வன்முறையை நியாயப்படுத்தியிருப்பதோடு தலித்துகளுக்கு எதிரான மற்ற சாதி இந்துச் சமூகங்களின் பிரதிநிதியாகவும் குரலெழுப்பத் தயாராகி நிற்பதையும் பார்க்க முடிகிறது. தர்மபுரி தலித் மக்களின் துயரம் இவர்களை அசைக்காதது மட்டுமல்ல அதைத் தலித் மக்களுக்கான எச்சரிக்கை யாகவும் சாதி இந்துக்களுக்கான முன்னு தாரணமாகவும் மாற்ற இவர்கள் தயாராகிவருகின்றனர். இச்சூழல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல உரிய முறையில் எதிர்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது. பிராமணர் x பிராமணர் அல்லாதார் என்ற எதிர்வைக் காட்டிக் கொண்டிருந்தாலும் நம் சூழல் தலித் x தலித் அல்லாதார் என்னும் எதிர்வாக மாறியிருப்பதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம். நம் விவாதத்தை வேரிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

நன்றி :  காலச்சுவடு

Monday, 19 November 2012

கலப்புமண எதிர்ப்பு அரசியல் - விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

- ஸ்டாலின் ராஜாங்கம்

2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டை என்னும் கிராமத்தில் சாதிமீறிக் காதலித்த காரணத்திற்காகத் தலித்தான முருகேசன் வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி ஆகிய இருவரையும் ஊரின் ஆதிக்க சாதியினர் கொடூரமாகக் கொலைசெய்தனர். வன்னியர்களின் இக்கொடூரச் செயலுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் மறைமுகமான ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டது. இக்கொடூரக் கொலையில் ஈடுபட்ட ஊர்க்காரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அக்கட்சி சட்டரீதியாக உதவியதாகவும் கூறப்பட்டது. புகாரை அந்தக் கட்சி இதுவரை மறுக்கவில்லை. ஆனால் கடந்த 2012 ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் பெண்களைப் பிற சாதி ஆண்கள் காதலிக்கவோ மணக்கவோ அனுமதிக்கக் கூடாது என அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி குரு பேசிய சாதிமறுப்புத் திருமணம் குறித்த அக்கட்சியின் நிலைபாடு தெளிவாகிவிட்டது. புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலை விவகாரத்தில் அக்கட்சியின் மௌனத்திற்கான காரணத்தையும் குரு இதன் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்.

அரசியல் மேடையொன்றில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக இது வெளிப்படையாக விடுக்கப்பட்ட அறைகூவல். வடமாவட்டங்களில் அரசியல் ஆதரவோடும் சாதி வெறியோடும் ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகளைக் குறித்து இமையம் எழுதியுள்ள ‘பெத்தவன்’ என்ற தேர்ந்த சிறுகதையும் (உயிர்மை, செப்டம்பர் 2012) அண்மையில் வெளியாகியுள்ளது.

இதேபோலக் கடந்த சில வருடங்களாகக் கொங்கு மண்டலத்தின் ஆதிக்க சாதியான கொங்குவேளாளர் அமைப்புகளில் சில வெளிப்படையாகச் சாதி மறுப்புத் திரு மணத்திற்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளன. சாதி கடந்த காதல், திருமணங்களைக் கொலை உள்ளிட்ட கொடூரமான வழிமுறைகளின் மூலம் தடைசெய்துவரும் அச்சாதியினர் அரசியல்ரீதியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு சாதிமறுப்புத் திருமணங்களுக்கெதிரான தம் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு அரசின் அங்கீகாரத்தை வெளிப்படையாகக் கோரத் தொடங்கியுள்ளனர். ஆதிக்க சாதியினரிடமிருந்து தலித்துகளைப் பாதுகாக்கும் தலித் வன் கொடுமைச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி கடந்த பல வருடங்களாக அரசை வலியுறுத்திவரும் சில கொங்கு வேளாளர் அமைப்புகள் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி கோவையில் நடத்திய கூட்டமொன்றில் கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடைசெய்ய வேண்டுமென்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகச் செய்திகள் வந்தன. கலப்பு மணச் சட்டத்தை ரத்துசெய்யும்படி அரசைக் கோரியுள்ள இந்த அமைப்புகள் தமக்கென இணையதளம் ஒன்றையும் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.

கொங்குப் பகுதியின் முதன்மை ஆதிக்க சாதியினரான கொங்கு வேளாளர்களை அரசியல்ரீதியில் ஒன்றிணைக்கவும் சாதி அடையாளத்தை ஓட்டுவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் தொடர்ச்சியே இது போன்ற நடவடிக்கைகள். சமூக மாற்றத்தின் காரணமாக இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காதல், கலப்பு மணங்களைக் கண்டு ஆதிக்கச் சாதிகள் பதற்றமடைந்திருப்பதன் அடையாளமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். எண்ணிக் கையில் பெரும்பான்மைச் சாதிகள் மட்டுமல்லாது எண்ணிக்கையில் சிறுபான்மை இந்து சாதி அமைப்புகளும் இதே கோரிக்கையை ஆங்காங்கு எழுப்பத் தொடங்கியுள்ளன. சாதி ஒதுக்கீடுகளும் பிரதிநிதித்துவமும் ‘சமூகநீதி’யாகிவிட்ட நம் சூழலில் தத்தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு சாதியும் தங்களின் எண்ணிக்கையைச் சிதறிவிடாமல் காக்க விரும்புகின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் பெரும் எழுச்சிபெற்றுவரும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல், ஆதிக்க சாதியினருக்குப் பெரும்பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காதல் திருமணங்கள் மூலம் சாதியமைப்பு சிதைவதைக் கண்டு சாதியமைப்புகள் வெளிப்படையாக இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளன. சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் அதை மேலும் இறுக்கமானதாக மாற்றுவதற்குமான முயற்சிகளை ஆதிக்க சாதி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இவை போன்ற நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் வாழும் தலித்துகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை. இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் அந்த அமைப்பு இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கு வெளிப்படையாகச் சவால்விட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அறிவு ஜீவிகளும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும் மௌனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அம்பேத்கர் 1916ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கருத்தரங்கில் இந்தியாவில் சாதியின் அமைப்பியக்கம் பற்றிச் சமர்ப்பித்த கட்டுரையில் சாதி முறையின் தோற்றுவாய்க்கும் அது நீடித்திருப்பதற்குமான காரணங்களில் முக்கியமானதாக அகமணமுறையைக் குறிப்பிட்டார். ஒத்த குழுவில் ஆண் பெண் விகிதத்தில் நிகழும் வித்தியாசம் அதையொட்டிப் பெண்கள்மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை ஏறுதல், ஆண்களின் துறவு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்தல் போன்ற போக்குகளை இதன் தொடர்ச்சியாக விவரித்தார். 1936இல் சாதிஒழிப்பு என்ற தலைப்பில் தயாரித்த உரையொன்றில் சாதி யொழிப்புக்கு உண்மையான வழி கலப்புமணம்தான் என்னும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். இதைத் தவிர வேறெதுவும் சாதியைப் பலவீனப்படுத்த முடியாது என்றும் இதைப் புரிந்துகொள்வதே நோயின் மூலத்தைக் கண்டறிவதாகும் என்றும் அறிவித்தார்.

சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல்வாதியைவிடத் தீரம்மிக்கவன். இச்சூழல் சார்ந்து ஏற்படும் சவாலான நிலையையும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சமூகத்தின் பொதுப் புத்தியாகிவிட்ட சாதியச் சூழலைச் சமரசமில்லாமல் எதிர்கொள்ளும் சீர்திருத்தவாதியென்று யாரையும் நம்மால் குறிப்பிட முடியவில்லை. அரசியல்வாதிகளிலிருந்து நூலிழை இடைவெளியிலேயே அறிவுலகமும் உலகமும் செயற்பட்டுவருகிறது.

பிராமணரல்லாதோரின் சாதியமைப்பு பற்றிய அறிவுத்துறை விவாதங்கள் சாதியமைப்பைப் பாதுகாப்பதில் அவற்றுக்குள்ள பங்களிப்பைக் குறித்து முறையாக விவாதிப்பதைத் தவிர்க்கின்றன. இந்த விஷயத்தில் எல்லோருமே மௌனம் காக்க விரும்புகிறார்கள். கலப்பு மணத்திற்கு எதிரான தற்போதைய சாதி இந்துக்களின் குரல்கள் அரசியல் தளத்தில் பேசப்பட்டு வந்த சாதி ஒழிப்பு அல்லது சாதி மறுப்பு என்னும் கருத்தியலை தீவிரமாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.

சாதி மறுப்புத் திருமணம் என்பது கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழக அளவில் இயக்கரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்த ஒன்று. பிராமண ஆதிக்கத்திற்கெதிராகத் தமிழகத்தில் உருவான பிராமணரல்லாத இயக்கத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்தது. இப்போது அந்த அடையாளத்தின் எச்சங்கள்கூட இல்லை. சாதி மறுப்பு கைவிடப் பட்டுச் சடங்கு மறுப்பு என்பதாகச் சுய மரியாதைத் திருமணங்களின் சீர்திருத்த எல்லை சுருங்கிவிட்டது. தாலி மறுப்பு, சடங்கு மறுப்பு போன்ற சாதியக் கட்டுமானத்தில் எந்த விரிசலையும் ஏற்படுத்தாத சுயமரியாதைத் திருமணங்களைக் கண்டு ஆதிக்கசாதியினர் ஒருபோதும் பதற்றமடைவதில்லை. அத்தகைய திருமணங்கள் சமூகக் கட்டமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதவரை அவற்றை வரவேற்பதிலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இருந்து வந்த சமூகப் பாதுகாப்பு பலவீனமடைந்ததற்குப் பின்னால் உள்ள அரசியல்ரீதியான காரணங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் சாதாரண மனிதர்களிடையே சாதி கடந்த காதல், கலப்பு மணங்கள் இயல்பான செயல்பாடுகளாக நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்திருமணங்கள் பற்றிய பிரகடனங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பதுமில்லை. சாதி கடந்த காதல், கலப்புமணத்திற்கு எதிரான ஆதிக்க சாதியினரின் வன் முறை சாதியத்தின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. சாதிக்கட்டுமானத்தை மீறும் சொந்தக் குழந்தைகளைக் கொலைசெய்தாவது சாதியின் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஆதிக்க சாதியினர் தயங்குவதே இல்லை. அதைப் பற்றிய பெருமிதமும் சாதிய மனத்தின் ஒரு கூறு என்றே சொல்லலாம். நாகரிகச் சமுதாயம் சாதிய வன்முறைகளுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் எதிராக இருப்பதுதான் சாதியத்திற்குப் பெரிய சிக்கல். முன்புபோல அவற்றை எளிமையாகச் செய்ய முடியவில்லை. ஆகவேதான் அதற்குச் சட்ட அங்கீகாரத்தைக் கோருகிறார்கள். இதற்கு முதல் காரணம் சமூக அடிநிலைச் சக்திகளான தலித்துகளுக்குக் கல்விரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. நவீன வாழ்வு சார்ந்த மாற்றங்கள் மற்றொரு முக்கியக் காரணம். இதன் விளைவாகக் காதலும் கலப்பு மணங்களும் திட்டமிடப்படாத, இயல்பான போக்காக வளர்ந்து வரு கின்றன. காதல், திருமணம், குடும்பம் சார்ந்த மதிப்பீடுகளும் கருத்தியல்களும் வேகமாக மாறிவருகின்றன.

சாதி கடந்த திருமணங்களுக்கு ஆதரவாக இருந்துவந்த, முன்பு சாதி ஒழிப்பை ஒரு வேலைத்திட்டமாகக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இவ்விசயத்தில் மேற்கொண்டு வரும் மௌனம் பரீசிலிக்கத்தக்கது.

சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எழுந்துள்ள இக்குரல்களில் தீவிர தலித் எதிர்ப்பு வேர்கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதனால்தான் திராவிட இயக்க அமைப்புகளோ தமிழ்த் தேசிய அமைப்புகளோ சாதியமைப்புகளின் கலப்புமண எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்கொள்ளவில்லை. பெரியார் திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மேற்படி கூட்டம் நடந்த மண்டபத்துக்கு வெளியே அதைக் கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களைத் தமிழகக் காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பிரச்சினைகளின்போது அவற்றைக் கண்டனம் செய்வதன் மூலம் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சடங்காக மாறிவிட்ட சூழலில் குறிப்பிட்ட பிரச்சினையின் கருத்தியல் பின்னணியையும் அது ஏற்படுத்தி வரும் மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்வது அவசியம். இதற்கான விவாதங்களை அறிவுஜீவிகள் மட்டுமே உருவாக்க முடியும். மேற்கண்ட சாதியினர் சாதியமைப்பால் பயன்படுத்தப்படுகிறவர்கள் என்ற கருத்தைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இன்றைய சாதியமைப்பின் நலன்களைப் பாதுகாப்பதில் இவர் களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இந்நிலையில் பிராமணரல்லாத சாதிகளின் குரலாகச் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் கருத்தியல் பின்னணிகளைப் பேசுவதில் ஈடுபட்டு வந்த எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ் உள்ளிட்ட திராவிட சார்பு மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள் தற்போதைய சூழலில் இயக்கக் கருத்தியல் குறுக்கீடுகளை நிகழ்த்த வேண்டியது அவசியம்.

ஒரு காலக்கட்டத்தில் திராவிட இயக்கத்தால் சாதி மறுப்புத் திருமணங்கள் கொள்கையளவில் வற்புறுத்தப்பட்டிருந்தாலும் அந்த இயக்கத்தின் மையச் சக்திகளாக விளங்கிய ஆதிக்க சாதிகள் அதை ஏற்கவில்லை. சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட சமபந்தி போஜனம், கலப்புமணம் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் ஆதரவில்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியைத் தன்னுடைய சாதி ஒழிப்பு (1936) என்னும் நூலில் எழுப்பும் அம்பேத்கர் இவ்விரண்டு கொள்கைகளும் இந்துக்களின் புனிதமான நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருப்பதானாலேயே அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிறார். இங்கிருக்கும் ஒவ்வொரு சாதியினரும் தங்களை இந்துக்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இந்து மதத்தின் மொத்தப் பிரதிநிதியாகப் பிராமணர்கள் காட்டப்பட்டு எதிர்க்கப்பட்டாலும் பிற இந்து சாதிகளிடம் இந்து மனோபாவமே செயற்படுகிறது. ஓர் இந்துவுக்கு சாதியே முதல் அடையாளம். கலப்புமணம் பற்றிப் பேசும் அம்பேத்கர் சாதியைப் போற்றும் மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களை எதிர்க்க வேண்டும் என்கிறார்.

சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது, அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும் என்றார். இங்குச் சாஸ்திரத்தின் குறியீடான பிராமணன் மட்டுமே புறக்கணிக்கப்பட்டான். மாறாக சாஸ்திரம் கற்பிக்கும் சாதி அதிகாரம் புறக்கணிக்கப்படவில்லை. ஒவ்வொரு சாதி இந்துவின் உளவியலிலும் சாதி என்னும் அதிகாரம் இவ்வாறுதான் குடிகொண்டிருக்கிறது. அதுதான் இன்றைய எதிர்ப்பின் கருத்தியல் அடிப்படை. இவ்விடத்தில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வந்த சாதி அமைப்புகளே இப்போது கலப்புமண எதிர்ப்பிலும் ஒருசேரக் குரலெழுப்புகின்றன. கலப்புமண எதிர்ப்பைக் கூர்மையாக்கும் கொங்கு வேளாளர் அமைப்பும் தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரிவரும் தேவரினப் பாதுகாப்புப் பேரவை போன்ற பிற சாதி அமைப்புகளும் அணிசேர்க்கத் தொடங்கியுள்ளதை இங்குக் கவனிக்க வேண்டும். மறுபுறம் தம் சாதி பற்றி இந்த அமைப்புகள் உருவாக்கிப் பரப்பிவரும் பிம்பங்கள் கூர்ந்து கவனக்கத்தக்கவை. தம்மை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு ஒவ்வொரு சாதிக்கும் இருக்கிறது. அதற்கான வரலாற்றுச் சான்றுகளை அவை தேடுகின்றன. ஆனால் இட ஒதுக்கீடு முதலான சலுகைகளைக் கோருவதற்காகத் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றன. தீரன் சின்னமலையைக் கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என நிறுவுவதில் வெற்றி பெற்றுவிட்ட கொங்கு வேளாளர் அமைப்புகள் தம்மை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வருகின்றன. ஆதாயங்களுக்காகத் தம்மைத் தலித்துகளைவிட மோசமாக ஒடுக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வதற்கும் தயங்குவதில்லை. பலவேளைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணையாகத் தங்களுக்கும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றனர்.

பெரியாரியத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் சாதி கடந்த திருமணத்திற்கெதிரான இத்தகைய அமைப்புகளின் நடவடிக்கைகளைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்குக் காரணமுண்டு. வாக்கு வங்கி அரசியல் முக்கியக் காரணம். சாதி ஆதிக்கத்தையும் தங்களுடைய நலனையும் ஒருசேரத் தக்கவைத்துக்கொண்ட இக்கட்சிகள் இச்சாதியினரையோ சாதி அமைப்புகளையோ பகைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது. இந்நிலையை உருவாக்கியது இக்கட்சிகளே. அரசியல் பெரும்பான்மைக்காக எண்ணிக்கை சிதையாமல் காப்பது, சிறு சிறு குழுக்களை ஒன்றாக்குவது என்றெல்லாம் சாதிப் பெரும்பான்மை வாதம் கூர்மை பெற்று வருகிறது. தமிழகத்தில் மதச் சார்புடைய கட்சி செல்வாக்குப் பெறமுடியாமல் போகலாம். ஆனால் சாதியைப் பகைத்துக்கொள்ளும் எந்தக் கட்சியும் இங்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதே கசப்பான உண்மை.


(நவம்பர் 2012 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை)

Wednesday, 7 November 2012

டி. எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம் (எம். சி. ராஜாவை முன்வைத்துச் சில குறிப்புகள்)

- ஸ்டாலின் ராஜாங்கம்

நீதிக்கட்சி முன்னோடிகளைச் சொல்லும்போது நடேச முதலியார், தியாகராயச் செட்டியார், டி. எம். நாயர் ஆகிய மூவரைப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இம் மூவரைக் குறித்து விவரிக்கும்போது திராவிடச் சங்கம் தொடங்கியவரான நடேச முதலியாருக்கும் பிராமணரல்லாதார் அறிக்கையை வெளியிட்டவரான தியாகராயச் செட்டியாருக்கும் தரப்படும் அழுத்தம் டி. எம். நாயருக்குத் தரப்படுவதில்லை. டி. எம். நாயரின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் உரிய அளவில் சொல்லப்படாமல் பெயரளவிலான இடமே தரப்படுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றம் பற்றி இன்றைக்குத் தரப்படும் சித்தரிப்பிற்கு நாயரின் பங்களிப்பு பற்றிய செய்திகள் தோதாக அமைவதில்லை என்பதே இதற்குக் காரணம். தற்போதைய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பற்றிய அறிவிப்பிலும் அதையொட்டி வெளியாகும் எழுத்துக்களிலும் இக்குறையே தென்படுகிறது. நீதிக்கட்சியின் தோற்றத்தையும் அதன் பிந்தைய திசை மாற்றத்தையும் புரிந்துகொள்ள டி. எம். நாயரின் பணிகளை ஆராய்வது மட்டுமே உரிய வழியாக இருக்க முடியும். குறிப்பாகத் திராவிட இயக்க நூற்றாண்டு அறிவிப்புமீதான தலித்தரப்பு விமர்சனத்தைப் புரிந்துகொள்ள டி. எம். நாயர் வழிநடத்திய நீதிக்கட்சியின் பணிகளை அறிய வேண்டியுள்ளது.

டி.எம்.நாயர்
நீதிக்கட்சியைத் தோற்றுவிப்பதற்கான தொடக்கக் கூட்டமாக அறியப்படும் சென்னை வேப்பேரிக் கூட்டம் 1916ஆம் ஆண்டின் கடைசி நவம்பர் 20ஆம் தேதி நடந்தது. இக் கூட்டத்தில் நீதிக்கட்சி மூலவர்களாக அறியப்படும் இம்மூவர் உள்ளிட்ட 26 பேர் கலந்துகொண்டனர். 1916ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட இக்கட்சி 1917ஆம் ஆண்டில் சில கூட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. நீதிக்கட்சிக்கு முன்பு நடேச முதலியார் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டு நடத்திய திராவிடச் சங்கம் பிராமணரல்லாதோரின் கல்வி மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது. அதன் செயற்பாடு பெயரளவிலேயே அமைந்திருந்தது. அடுத்து வந்த நீதிக்கட்சியின்தொடக்கம்கூட முதலில் சிறப்பாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதற்கான நோக்கத்தைப் பிராமணரல்லாதார் அனைவரிடமும் எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்நிலை சற்றொப்ப 1909ஆம் ஆண்டின் நிலையை ஒத்ததாகவே இருந்தது என்கிறார் கு. நம்பியாரூரன். எனவே நீதிக் கட்சியைக் கருத்தியல் மற்றும் மக்கள் திரட்சிநோக்கி வடிவமைக்கும் பணி பிந்தைய ஆண்டுகளிலேயே நடந்தது. இந் நிலையில் 1917, 1918, 1919 ஆகிய மூன்றாண்டுகளின் நீதிக்கட்சிக்கான பூர்வாங்கப் பணிகள் டி. எம். நாயருடையதாகவே இருந்தன. இதனாலேயே கட்சியின் முதல் மூன்றாண்டுக் காலத்தை நாயரின் சகாப்தம் என்கிறார் ராஜாராமன். (The Justice Party; A Historical Perspective 1916 - 1937) 1920ஆம் ஆண்டு கட்சி ஆட்சிக்கு வரும்வரையிலும் நாயரின் கருத்தியலிலிருந்தும் பணிகளிலிருந்தும்தான் கட்சி இயங்கியது. ஆனால் அதிகாரத்தை எட்டுவதற்கான முயற்சியாகவே அவற்றிற்கு எதிரான பேச்சுகளும் செயற்பாடுகளும் அமைகின்றன என்ற வழக்கத்தின்படி நீதிக்கட்சியும் ஆட்சிக்கு வந்த பின்பு அதுவரையில் தான் கட்டமைக்க முயன்ற கருத்தியலைக் கைவிட்டதோடு அப்பணிகளில் ஈடுபட்டு வந்த டி. எம். நாயர் 1919ஆம் ஆண்டிலேயே இறந்தும் போனார்.

நீதிக்கட்சிக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டதால் மட்டுமல்ல அவை எத்தகையனவாகக் கட்டமைக்கப்பட்டன என்பதாலும் தான் நாயருடைய மூன்றாண்டு காலம் முக்கியத்துவம் பெறுகிறது. பிராமணரல்லாதார் அடையாளத்தின் உள்ளடக்கம், அப்பகுப்பில் உள்ளடங்கும் வகுப்பினர் குறித்தெல்லாம் நாயர் கொண்டிருந்த எண்ணங்களைப் பிற பிராமணரல்லாத தலைவர்கள் கொண்டிராதது மட்டுமல்ல ஆட்சிக்கு வந்த பின்பு கட்சி நாயர் காலத்தின் கருத்துகளை முற்றிலுமாகப் புறக்கணித்தே இயங்கியது.

தாராவத் மாதவன் நாயர் (1868-1919) எனப்படும் டி. எம். நாயர் இங்கிலாந்தில் மருத்துவம் பயின்ற காது, மூக்கு, தொண்டை நிபுணர். ஆங்கிலேயர் வழி அறிமுகமான அரசியல் நிர்வாகச் சீர்திருத்தத்தின் மீது அழுத்தமான நம்பிக்கைகொண்டிருந்த அவர் அப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் செய்தார். 1904ஆம் ஆண்டு முதல் 12 வருடங்கள் சென்னை நகராட்சியின் உறுப்பினராகத் திருவல்லிக் கேணிப் பகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டுப் பணியாற்றிய அவர் 1912இல் நகராட்சி பிரதிநிதிகள் சார்பாக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915இல் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் ஆனார். தாம் பங்கேற்ற பல்வேறு தளங்களிலும் தீவிரமான இடையீடு செய்பவராகவும் விவாதங்களில் ஈடுபடுபவராகவும் நாயர் இருந்தார். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த அவர் அம்மொழியில் எழுத்தாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். அரசியல் அமைப்புகளைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார்.

தன்னுடைய தமிழன் இதழில் டி. எம். நாயர் பற்றி நேர்மறையான பதிவுகளை எழுதிய (1910 ஜனவரி) அயோத்திதாசர் சென்னை முனிசிபல் உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டுவதோடு இந்துக்களுடைய தராதரம் பற்றி ஆங்கில இதழொன்றில் அவர் விமர்சித்து எழுதியதையும் குறிப்பிட்டு விட்டு நாயரின் இப்பண்புக்குக் காரணம் இவர் இங்கிலாந்து சென்று படித்து ஆங்கிலேயர்களின் அரசியல் கண்ணோட்டத்தை உள்வாங்கியதால்தான் ஆங்கிலேயர்களைப் போன்று எவ்விதப் பாகுபாடும் பாராமல் செயற்படுவதாக அறிகிறோம் என்கிறார். ஆங்கிலேயர்களின் நவீன அரசியல் சீர்திருத்தங்களை இங்கிருந்த பிராமணிய அதிகாரத்திற்கு எதிராக வரவேற்ற அயோத்திதாசர் டி. எம். நாயரின் நற்பணிகளுக்கு பின்னணியாய் இருப்பதும் அப் பண்புகளே என்று சிலாகிப்பதைப் பார்க்க முடிகிறது. ஏறக்குறைய டி. எம். நாயரைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய மதிப்பீடாக இதைக் கொள்ளலாம். நாயர் பற்றிய பிறபதிவுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. பிராமணரல்லாதார் கட்சியின் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் வகையில் நாயர் செய்த முதல் காரியங்களில் ஒன்று, கல்விக் கொள்கையின் அநீதிகள் என்னும் தலைப்பில் ஜஸ்டிஸ் இதழில் தொடர் கட்டுரைகளை எழுதியதாகும் என்று எம். சி. ராஜாவும் அயோத்திதாசரைப் போன்று நாயருடைய எழுத்துக்களைப் பற்றிப் (1922 நவம்பர் சட்டமன்ற உரை) பாராட்டியுள்ளார்.

திராவிடம் என்ற சொல்லை அமைப்பு என்ற அளவில் முதலில் கையாண்டவரான நடேச முதலியாருக்குமுக்கியத்துவம் அளிப்பது திராவிட இயக்க மரபுக்குத் தமிழ் மற்றும் திராவிட அழுத்தம் தருவதற்கே. நீதிக்கட்சியை உருவாக்கியதில் நடேச முதலியாரும் தியாகராயச் செட்டியாரும் கூட்டாளிகளாக இருந்திருப்பினும் கட்சியின் அமைப் பொழுங்குக்குப் பெரும்பான்மையும் நாயரே பொறுப்பாவார். நீதிக் கட்சியை வடிவமைத்ததில் உள்ளூர்த் தாக்கங்களைவிட மேற்கத்திய அரசியல் மதிப்பீடுகளின் தாக்கமே அவரிடம் மிகுதியும் செல்வாக்கு செலுத்தின. நீதிக்கட்சி கொள்கையில் பிரிட்டீஷ் ஜனநாயகவாதிகளின் மரபும் பிரெஞ்சுத் தீவிரவாதிகளின் மரபும் மணம் பரப்புவதைக் காணலாம். அதனால்தான் கட்சியின் பெயர் South Indian Liberal Federation என வைக்கப்படலாயிற்று என்று முரசொலிமாறன் குறிப்பிடுவது (திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1, 1991) கவனிக்கத்தக்கது. நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிளாட்ஸ்டன் என்ற ஆங்கிலேய அரசியல் அறிஞரின் லிபரலிசக் கோட்பாடுகளால் கவரப்பட்டவர் என்கிறார் பெ. சு. மணி (நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் - ஆய்வு, 2007).

பிரெஞ்சு நாட்டின் Radical Rebudilican Party என்ற அமைப்பின் தாக்கம் நாயருக்கு இருந்தது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அமைப்பின் பெயர் நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைக்கப்படுவதற்கு அக்கட்சி ஆங்கிலத்தில் நடத்திய Justice என்ற ஏடுதான் காரணம். தென்னிந்திய நலவுரிமைச்சங்கத்தைத் தொடங்குவதென்று முடிவுசெய்யப்பட்ட முதல் கூட்டத்திலேயே கட்சிக்கான முதல் பணியாகப் பத்திரிகை தொடங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. கட்சி நடத்திய தமிழ் மற்றும் தெலுங்கு ஏடுகளுக்கு முறையே பக்தவச்சலம் பிள்ளையும் பார்த்தசாரதி நாயுடுவும் ஆசிரியர்களாயிருக்க 26. 02. 1917இல் தொடங்கப்பட்ட ஆங்கில ஏடான யிustவீநீமீக்கு நாயரே ஆசிரியராக இருந்தார். நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் என்ற முறையில் நாயரின் ஜஸ்டிஸ்தான் கட்சியின் கொள்கைகளைப் பூர்வாங்கமாகப் பிரதிபலித்தன. ஒருமுறை நாயர் எழுதிய கட்டுரைகளுக்காக அவர்மீது அன்னி பெசண்ட் மானநட்ட வழக்கு தொடுத்தார் என்ற அளவிற்கு அந்த ஏடு தீவிரமாக இயங்கியது. இந்த ஏட்டிற்கான பெயரை நாயர் பிரெஞ்சு நாட்டு கிளமென்சோ (Georges Clemenceau 1841-1929) 1880 முதல் நடத்திய La Justice என்ற ஏட்டின் பெயரைத் தழுவி அமைத்திருந்தார் என்ற அளவிற்கு அவருக்குத் தாக்கமிருந்தது. 1881இல் இந்து சட்டத்திற்கான தனது பணியில் ஜே. எச். நெல்சன் என்ற ஆங்கிலேயர் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பகுப்புசார்ந்த சொற்களைப் பயன்படுத்தியது முதல் 1916ஆம் ஆண்டுவரை பலரும் அச் சொல்லை ஆங்காங்குப் பயன்படுத்தி வந்தனர் என்றாலும் பிரெஞ்சு நாட்டு ராடிக்கல் ரிபப்ளிகன் பார்ட்டி பயன்படுத்திய பிரபுகள் அல்லாதார் என்ற சொல்லின் தாக்கமும் சேர்ந்து தான் நாயரிடம் பிராமணரல்லாதார் என்ற அடையாளமாக உறுதிபெற்றது. கட்சியின் மூலத்தில் நடேச முதலியாருக்குப் பங்கிருந்தாலும் கூட்டு நிறுவனர்களாக நாயரும் தியாகராயச் செட்டியாரும்தான் அறிவிக்கப்பட்டனர். சென்னை டவுன்ஹால் கூட்டத்தில் திரு. வி. . எழுப்பிய கேள்வியொன்றிற்குப் பதிலளித்த நாயர்காங்கிரஸில் விளையும் தீமை கண்டு நண்பர் தியாகராயருடன் சேர்ந்து ஜஸ்டிஸ் கட்சியை அமைத்தேன்என்று கூறியதிலிருந்து கட்சியின் பிரதான நிறுவனர்களில் நடேசர் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என்பதை அறிகிறோம். சங்கத்தின் முதல் மாநாட்டில் (15.12.1919) பேசிய தியாகராயர்அவர் காட்டிய வழியின்படியே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம்என்று நாயரின் தலைமையைச் சுட்டிப் பேசினார். பின்னாளில் தியாகராயச் செட்டியாருக்கும் நடேச முதலியாருக்கும் பனிப்போர் இருந்தது என்பதும் நடேச முதலியார் கட்சியால் புறக் கணிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

எம்.சி.ராஜா
டி. எம். நாயர் பெற்றிருந்த நவீனச் சிந்தனைகளை உள்ளீடாகக் கொண்ட அரசியலறிவு நீதிக்கட்சியின் வடிவத்தில் மட்டுமல்லாது பிராமணரல்லாதார் அடையாள உள்ளடக்கத்திலும் பிரதிபலித்தது. பிராமணரல்லாதார் பிரிவில் பல்வேறு வகுப்பினரையும் உள்ளடக்குவதில் நாயர் ஆர்வம் காட்டினார். குறிப்பாக ஆதிதிராவிடர்களையும் இசுலாமியர்களையும் இணைத்துப் பேசினார். ஆனால் டாக்டர் நாயரைத் தவிர்த்துப் பெரும்பாலான பார்ப்பனரல்லாத தலைவர்கள் பஞ்சமர்களை நீக்கியே பார்த்தனர் என்கிறார் கு. நம்பியாரூரன். திராவிட இயக்கத்தின் தொடக்கம் பற்றிய ஆய்வுகள் செய்துள்ள யூஜின் இர்ஷிக், கு. நம்பியாரூரன் ஆகிய இருவரும் நாயரின் இப்பண்பு பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். பின்னாளில் நீதிக்கட்சி ஆட்சியும் நீதிகட்சித் தலைவர்களும் எடுத்த தலித் விரோத நிலைப்பாடுகளை விமர்சித்த எம். சி. ராஜா கடைசிவரையிலும் நாயர் பற்றி மட்டுமே சாதகமான கருத்தைக் கொண்டிருந்தார் என்பது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. நாயர் மட்டும் இவ்வியக்கத்தின் தலைவராக இன்று இருந்திருந்தால் இவ்வியக்கத்திலும் ஆட்சியிலும் ஜனநாயக முறையைப் பாதுகாத்திருப்பார் (4 ஜூலை 1937, வட ஆற்காடு மாவட்ட ஆதிதிராவிட மாநாடு) எனக் குறிப்பிட்ட எம். சி. ராஜா பிறிதோரிடத்தில் 1917இல் பிராமணரல்லாதார் கட்சி தொடங்கியபோது நாயர் தமது அரசியல் திட்டத்தின் முதல் படியாகத் தீண்டாமை ஒழிப்பை முன்வைத்தார் (எம். சி. ராஜா சிந்தனைகள், எழுத்து வெளியீடு, மதுரை) என்று நினைவுகூர்ந்தார்.

நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு முன்பும் சமகாலத்திலும் சென்னை நகரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் அமைப்புகள் இருந்தன. 1980 தொடங்கித் திராவிட மகா ஜனசபா, ஆதிதிராவிட ஜனசபா, பறையர் மகாசபை போன்ற பெயர்களில் அமைப்புகள் செயற்பட்டு வந்தன. இந்த அமைப்புகள் சார்பாக நடந்த கூட்டங்கள், அரசுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், இதழ்கள் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு மட்டுமல்லாது பிராமணர் எதிர்ப்பு, இடஒதுக்கீடு, திராவிடர் அடையாளத்தின் மீதான உரிமை கோரல் போன்றவையும் வலியுறுத்தப்பட்டன. ஏறக்குறைய பிந்தைய பிராமண எதிர்ப்பு அமைப்புகளின் முன்னோடி முயற்சிகளாக இவையே அமைந்திருந்தன. இந்நிலையில்தான் 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் பிராமணர் எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதரவளிப்பவர்களாக ஆதிதிராவிடர்களும் அவர் தம் அமைப்புகளும் இருந்தனர்.

முரசொலிமாறன் சொல்வதைப் போன்று நீதிக்கட்சிக்கு இவர்கள் ஆதரவைப் பெறுவதற்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஏனெனில் அந்தச் சமுதாயமும் வெகு காலமாகவே திராவிட உணர்வு பெற்றிருந்தது. மேலும் அச்சமூகம் பிராமணர் எதிர்ப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் அரச ஆதரவையும் பேசிவந்தது. இக்காலக்கட்டத்தில்சென்னை நகரில் ஆதிதிராவிட ஜனசபா, பறையர் ஜனசபா ஆகிய இரு அமைப்புகள் முன்னணியில் இருந்தன. இவ்விரு அமைப்புகளும் முறையான கூட்டங்கள் நடத்திச் சுதந்திரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனஎன்பதை 1916, 1917ஆம் ஆண்டுகளின் மெயில் ஏட்டுச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கு. நம்பியாரூரன் எடுத்துக்காட்டுகிறார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடு ஒன்றை சென்னை நகர ஆதிதிராவிடர் அமைப்புகள் நடத்தின. இக்கூட்டம் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம் (The Spur Tank Meeting) என்று அழைக்கப்படுகிறது. பெரும் மக்கள்திரள் என்ற முறையிலும் நாயரின் ஆவேசமான உரை என்ற விதத்திலும் இக்கூட்டம் நீதிக்கட்சி வளர்ச்சியிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. தலைவர்கள் மட்டுமே கூடும் கூட்டங்களைக் கண்ட நீதிக்கட்சியைப் பெருவாரியான மக்கள் திரட்சி நோக்கி அணியப்படுத்தியது இக்கூட்டமே. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் நடந்த கூட்டங்களைக் கவனித்தால் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம். 14. 03. 1917இல் இசுலாமிய அமைப்பு சார்பான உள்ளரங்குக் கூட்டம் 19. 08. 1917இல் கோயம்புத்தூரில் நடந்த முதல் பிராமணரல்லாதார் மாநாடு, 1917 அக்டோபரில் கொள்கை வெளியீடு உள்ளிட்ட வெகுசில கூட்டங்களே நடந்திருந்தன. இவை எவையும் வெகுமக்கள் கூட்டங்கள் அல்ல. நீதிக்கட்சியின் பெருவாரியான வெற்றிக்கு ஆதிதிராவிட மக்களும் அதன் தலைவர்களும் காரணம் என்று கூறும் முனைவர் கோ. தங்க வேலு நீதிக்கட்சியென்பது ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை அளிக்கும் கட்சியெனத் தம்மக்களிடையே ஆதிதிராவிடத் தலைவர்கள் கூறி அவர்களை அடித்தளத் தொண்டர்களாக்கியதோடு பொதுமக்களைச் சந்தித்தறியாத நீதிக்கட்சித் தலைவர்களைப் பொதுமக்கள் அறியும்படி செய்தனர் என்று விளக்குவது இங்கு எடுத்துக்காட்டத்தக்கது.

தன்னுடைய பிற்கால உரைகளில் இம்மாநாட்டின் சாதனையை எம். சி. ராஜா பலமுறை நினைவுகூர்ந்தார். ‘தனித்தொகுதி வேண்டும்; அம்பேத்கர் தான் எங்கள் பிரதிநிதிஎன்பதை வலியுறுத்தி 1931ஆம் ஆண்டு அக்டோபரில் அதே சென்னை எழும்பூர் ஏரி மைதானத்தில் 20,000 பேர் கூடிய மாநாட்டில் பேசிய எம். சி. ராஜா இம்மாநாட்டைக் காணும்போது சுமார் 13 வருடங்களுக்கு முன்பு நம்மை ஆழ்ந்த நித்திரையிலிருந்து தட்டியெழுப்பி இவ்வளவு உன்னத நிலையில் இருக்கத் தூண்டிய நாயர் தலைமை வகித்து நடத்திய கூட்டத்தின் ஜனக்கூட்டத்தைப் போல் இருக்கிறது என்றும் 1937 ஜூலையில் நடந்த வடார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாட்டில் பேசும்போது 1917இல் நான் சென்னையில் கூட்டியிருந்த ஆதிதிராவிடர்களின் கூட்டத்தை நினைத்துப்பார்க்கிறேன். ஆதிதிராவிடர்களிடையே உரையாற்றிய நாயர் இம்மக்களை விழித்தெழுந் திருமாறு வேண்டுகோள் விடுத்தார். அங்ஙனம் எழுந்து நிற்காவிடின் என்றென்றுமாக வீழ்ந்துபோவோம் என்றும் எச்சரித்தார் என்றும் எம்.சி. ராஜா ஸ்பர்டாங்க் கூட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவராக எம். சி. ராஜா தன்னைக் குறிப்பிடுவதையும் பார்க்கலாம். நீதிக்கட்சி அரசியல்ரீதியாகத் தங்களுக்குக் கடமைப்பட்டிருப்பதை டி. எம். நாயரோடு தங்களுக்கிருந்த தொடர்பைச் சுட்டுவதன் மூலம் எம். சி. ராஜா நினைவுபடுத்தி வந்தார்.

ஸ்பர்டாங்க் கூட்டத்தில் நாயர் நிகழ்த்திய ஆவேச உரை பிராமணரல்லாதார் அடையாளத்தில் தலித்துகளை இருத்துவதில் ஆர்வம் காட்டியது. ஆனால் இம்மாநாட்டில் பேசிய பஞ்சமர் மகாசபைத் தலைவர் அன்சஸ், பிராமணரல்லாதாரும் நீதிக்கட்சியினரும் எண்ணங்கள் மீது அதிருப்தியை வெளியிட்டார். அதாவது பிராமணரல்லாதார் வேறுபாடு பாராமல் பஞ்சமர்களைச் சகோதரர்களாக ஏற்காதவரையில் அவர்கள் பஞ்சமர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றார். மேலும் அன்னிபெசண்ட்டின் ஹோம்ரூல் தலைமையைப் போல பிராமணரல்லாதார் தலைமைமீதும் தங்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்றார். இவ்வாறு டி.எம். நாயர் போன்றோரைஅழைத்து கூட்டம் நடத்திய போதிலும் தங்களின் இருப்பு பற்றிய கேள்விகளோடும் விவாதங்களோடும்தாம் தலித்துகள் அரசியல் உறவை மேற்கொண்டனர். உயர்வகுப்பு பார்ப்பனரல்லாத இந்துகளுக்குப் பஞ்சமர்களின் நாணயத்தின் மீது அய்யம் இருந்தது. பஞ்சமர் அமைப்புகளை நடத்திய தலைவர்களுக்கும் நீதிக்கட்சிக்கு ஆதரவளிப்பதில் விருப்பம் இல்லை என்பதை யூஜின் இர்ஷிக்கும் நம்பியாரூரனும் கூடக் குறிப்பிட்டுள்ளனர்.

முதலில் எழும்பூர் ஏரி மைதானத்தில் இம்மாநாடு நடத்துவதற்கு மைதானத்தில் விளையாட வரும் உயர்வகுப்பினர் தடை ஏற்படுத்தியபோது அத்தடைவிலக்கப்பட்டு மாநாடு நடப்பதற்கு டி.எம்.நாயர் உதவினார். மாநாட்டில் பேசிய டி. எம். நாயர் பஞ்சமர்கள் இது போன்று அடக்கப்படுவார்களானால் அதை மீறுவதற்கானவழி வன்முறையற்றதாகவே இருக்குமென்று எதிர் பார்க்க முடியாது என்றதோடு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் தன்கையிலுள்ள ஊன்றுகோல் பேசத் தயங்காது என்றும் பேசினார். டி. எம். நாயரின் ஆங்கில உரையைச் சோமசுந்தரம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. அன்னி பெசண்ட்டின் ஹோம்ரூல் கட்சிக்கு எதிர்வினையாகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவரான டி. எம். நாயர் ஹோம்ரூல் இயக்கத்திற்கு எதிரான கோபத்தைத் தம் ஆவேசப் பேச்சின் மூலம் கூர்மைப்படுத்தினார். நாயரைப் பின்னாளில் நினைவுகூர்ந்த எம். சி. ராஜா அப்போது நாம் ஒற்றுமையுடனிருந்து ஹோம்ரூல் ஆட்சியாரை விரட்டி அடித்தோம் என்று இதைக் குறிப்பிட்டார். இவ்வாறு பலவகைகளில் இக்கூட்டம் நீதிக்கட்சிக்குக் கை கொடுத்தது. மேலும் இந்தியர்களுக்கு அதிகாரத்தில் பங்களிப்பது குறித்த மாண்டேகு அறிக்கை (1917) வெளி யான சூழலில் நீதிக்கட்சிக்கு பெரும்மக்கள் திரண்ட இக்கூட்டம் பேருதவியாக இருந்தது. பஞ்சமர்கள் தங்களது ஆதரவை நீதிக்கட்சியினருக்கும் மற்றும் முஸ்லிம்கள் இந்தியக் கிறிஸ்தவர்கள் ஆகிய அமைப்பினருக்கும் வழங்கினர். அதோடு நீதிக்கட்சி நடத்தும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் சுதந்திரமாகப் பங்கேற்றனர் என்கிறார் கு. நம்பியாரூரன். தலித்துகள் மற்றும் இசுலாமியர்களைச் சாதகமாகப் பார்த்த நாயரின் நோக்கு நீதிக் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கத்திற்கும் உதவியது. ஸ்பர்டாங்க் கூட்டத்தின் உரை தலித்துகளின் பிரச்சினைகளைப் பேசியதைவிடப் பிராமணர்களைத் தாக்கிப் பேசுவதிலேயே அதிகம் கவனம் செலுத்தியது. நாயர் உருவாக்கிக் காட்ட விரும்பிய பிராமணரல்லாத கூட்டணியின் எதிரியாகப் பிராமணர்களை நிறுத்தினார். இரா. நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ள 12 பக்க உரையிலும் அதாவது 350 வரிகளில் 7 வரிகளிலும் .திருநாவுக்கரசு நூலில் 836 வரிகளில் 4 வரிகளிலும் தான் நாயர் தலித்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதைப் பற்றிக் கூறும் அன்புபொன்னோவியம்தாழ்த்தப்பட்டோர்களைப் பற்றி எழுதநேரும் போதெல்லாம் நீதிக்கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் ஸ்பர்டாங்க் சாலை கூட்டத்தின் டாக்டர் நாயரின் உரையைக் குறிப்பிடுவார்கள். அதில் நாயர் தாழ்த்தப்பட்டோர்களைப் பற்றியும் தீண்டாமையைப் பற்றியும் மிகத் தீவிரமாகப் பேசியதாக மிகைப்பட எழுதுவார்கள். டாக்டர் நாயர் அக் கூட்டத்தில் பிராமணர்களைப் பற்றி கேலியாகப் பேசியதும் அன்னி பெசண்ட் அம்மையாரை நையாண்டி செய்ததும்தான் செய்திகளே தவிர தாழ்த்தப்பட்டோர்கள் பற்றியல்ல என்பதை படிப்போர் உணரலாம்என்று கூறுவது சரியே. எனினும் ஏற்கனவே அரசியல் உணர்வோடு செயலாற்றி வந்தவர்கள் என்ற முறையிலும் பரந்த அரசியல் கூட்டணி என்ற அரசியல் நோக்கத்திற்காகவும் தலித்துகளை அரவணைப்பதைத் தவிர்க்க முடியாததாக டி. எம். நாயர் உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இது நவீன அரசியல் வடிவத்தின் அம்சமே.

பிராமணரல்லாதார் தரப்புக்குப் பெரும் உற்சாகத்தை அளித்த டி. எம். நாயரின் ஸ்பர்டாங்க் உரை கடும் எதிர்வினையை உண்டாக்கியது. அக்கூட்டத்தில் பிராமணர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கூட்டத்திற்கு அவர்கள் வந்திருந்தார்களா? யார் யாருக்கு இடையே மோதல் நடந்தது என்பதை அறிய முடியவில்லை. வன்முறை பற்றி மங்கலான குறிப்புகளே கிடைக்கின்றன. ஆனால் தாக்குதல் நடைபெற்றதை இக்குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. யான் ஒரு துண்டு அறிக்கை வரைந்து விடுத்தேன். அதனால் கலகம் விளைந்தது. ஐஸ்டிஸ் கட்சி யாருக்கும் சுய ஆட்சியாருக்கும் சண்டை மூண்டது. அங்கே எழுந்த மூர்க்க சக்திக்கு நாயர் தமது பேச்சில் வரவேற்புக் கூறினார். அது ஸ்பர்டாங்க் கூட்டத்துக்கு இன்பம் மூட்டியது, அவ்வின்பம் சென்னையை விழிக்கச் செய்தது. விழிப்பு சுய ஆட்சி இயக்கத்துக்கு ஆக்கம் தேடியது (பக் : 212) என்று மட்டுமே திரு. வி. . குறிப்பிடுகிறார்.

கோ.வடிவேலு செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த லோகோபகாரி இதழ் காவல் துறையினர் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்தாகவும் அவர்கள் உடனடியாகத் தலையிட்டிருந்தால் இந்த அநியாயத்தைப் பஞ்சமர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்றும் கண்டித்தது. இந்த வன் முறைக்கு எதிராக வந்த கருத்துகளுள் முக்கியமானது பாரதியாருடையது. சென்னைப் பட்டணத்தில் நாயகர் கஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித்தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம் என்று பாரதியார் கூறுவது ஸ்பர்டாங்க் கூட்டத்தைப் பற்றியேயாகும். பறையர்களை அவமதிப்பாக நடத்தும் பிராமணரல்லாதோரின் நீதிக்கட்சியால் பறையர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்படுகிறார்கள் என்னும் தேசியவாத புரிதலைக் கொண்டிருந்த பாரதியார் தான் விவரிக்கும் அரசியல் நோக்கத்திற்கேற்ப இக்கூட்டத்தை நீதிக்கட்சி நடத்தியதாகவும் பறையர்கள் தூண்டிவிட்டதாகவும் எழுதிக் காட்டுகிறார். ஆனால் இக்கூட்டம் நீதிக்கட்சி ஏற்பாடு செய்த கூட்டமல்ல. அது முழுக்க தலித்துகள் முன்னின்று நடத்திய கூட்டம்.

 டி. எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் கூட்டம் பற்றிக் குறிப்பிடும் பெரும்பாலான திராவிட இயக்க வரலாற்றுப்பதிவுகளும்கூடப் பொத்தாம் பொதுவாகப் பஞ்சமர் மாநாடு என்றே குறிப்பிடுன்றனவேயொழிய இக்கூட்டத்தை நடத்தியவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தரவில்லை. சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் கருவூலத்தில் பஞ்சமர் கூட்டம் என்ற குறிப்போடு நாயர் பேசும் படம் இடம்பெற்றுள்ளது. நீதிகட்சி பற்றி ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய ராஜாராமனும் . பி. ராலானும் ஸ்பர்டாங்க் கூட்டம் பற்றிப் பல்வேறு தகவல்களை தருகின்றபோதிலும் கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களென்று யாரையும் குறிப்பிடவில்லை. திராவிட இயக்க வரலாறு எழுதிய மாறன், நெடுஞ்செழியன் ஆகியோர் நூல்களில் நாயர் உரையாற்றும் படத்தோடு உரையில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தம்முடைய நூலில் பன்னிரண்டு பக்க அளவில் டி. எம். நாயரின் உரையை வெளியிட்டுள்ள இரா. நெடுஞ்செழியன் கூட்டம் பற்றித் தரும் தகவல்கள் பிழையானவையாக இருக்கின்றன. கூட்டம் இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் நடந்ததென்றும் எம். சி. ராஜா நன்றி கூறினார் என்றும் தியாகராயரும் கலந்துகொண்டார் என்றும் கூறுகிறார். இம்மூன்று தகவல்களும் உறுதிப்படுத்தப்படாதவை. இக்கூட்டம் நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமான சென்னை வேப்பேரி கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே தலித் தலைவரான எம். சி. ராஜா முன் முயற்சியால் நடத்தப்பட்டதாகும். ஆங்கிலக் கல்வி பயின்று நாயரைப் போன்றே நவீனத்துவ அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வெள்ளையரின் நிர்வாகத்தை ஆதரித்துச் செயற்பட்ட எம். சி. ராஜா 1916இல் சென்னை ஆதிதிராவிட மகாஜனசபாவில் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்த அமைப்போடு பிற ஆதிதிராவிட அமைப்புகளும் சேர்ந்து இக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. டி. எம். நாயரின் செயற்பாடுகளை அறிந்து வந்த எம். சி. ராஜா நாயர் நீதிக்கட்சியை உருவாக்கியபோது தம்முடைய வகுப்பினரையும் அவர் தம் கோரிக்கைகளையும் அவர் மூலம் பிராமணரல்லாத அரசியலில் பொருத்த முயன்றார். ஆனால் டி. எம். நாயரின் மரணத்தோடு சீர்திருத்த நோக்கு நீதிக்கட்சியில் அமுங்கிப் போனது. பிராமணரல்லாத அரசியலில் தம் கோரிக்கைகளை இணைப்பதில் தலித்துகள் தோல்வி கண்டனர். கட்சியின் பூர்வாங்கப் பணிகளின் போது தேவைப்பட்ட தலித்துகள் கட்சியின் ஆட்சிக்காலத்தில் புறக் கணிக்கப்பட்டனர். நீதிக்கட்சி பதவியிலமர்ந்தவுடன் தலித்துகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதோடு பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டன. இரண்டாண்டின் முடிவிற்குள் சென்னை புளியந்தோப்பு கலவரத்தை (1921) ஒட்டி, பறையர்களைச் சென்னையை விட்டே அப்புறப்படுத்த வேண்டுமென்று தியாகராய செட்டியார் தலைமையிலான நீதிக்கட்சி அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நீதிக்கட்சியிடமிருந்து விலகி நின்றதோடு அந்த ஆட்சி கலைந்தபோது இறைவனுக்கு நன்றி என்று எம். சி. ராஜா கூறும் நிலைமை தான் உருவாகியிருந்தது.

நன்றி : காலச்சுவடு