Sunday 20 January 2013

தமிழைத் தின்ற சாதி (தருமபுரி வன்முறை பற்றிய குறிப்புகள்)

- ஸ்டாலின் ராஜாங்கம்

புகைப்படங்கள்: ஜெய்கணேஷ்

நவம்பர் 7ஆம் தேதி வன்னியர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்ட தருமபுரியின் மூன்று கிராமங்களுக்கு எழுத்தாளர் குழுவாக நவம்பர் 10ஆம் நாள் சென்றிருந்தோம். செப்பனிட முடியாத அளவுக்கு எல்லா வீடுகளும் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருந்தன. உடல்மீதான வன்முறையைத் தவிர்த்துவிட்டு வீடுகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய திட்டமிட்ட சம்பவம் இது. மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வற்றவில்லை. எங்கள் குழுவில் மறைமுகமாகவேனும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளாதவர் யாருமில்லை. வாழ்விடத்தை இல்லாமலாக்குவது சாகடிப்பதைவிட மோசமான வன்முறை. இந்நிலைமை பாதிக்கப்பட்டவனின் இருப்பையே அழிக்கிறது. உயிரை மட்டும் விட்டுவைப்பதன் மூலம் இழப்பு ஏற்படுத்திய வலியிலேயே அவனை உழலவைக்கும் உளவியல் தந்திரம் இது. எலி வளையானாலும் தனிவளை என்பது தமிழ்ப் பழ மொழி. தலித் ஒருவன் வீடு கட்டுவது அசாதாரணமானது. முதலீடும் உழைப்பும் கால அளவும் அளப்பரியன. குறைந்தபட்ச வசதிகளோடு ஒரு வீட்டைக் கட்டிவிடுவது தலித்தின் வாழ்நாள் சாதனையாகிவிடுகிறது. மூன்று கிராமங்களிலும் எல்லா வீடுகளும் சீர்குலைக்கப்பட்டிருப்பதோடு ஒரு வீட்டின் எல்லாப் பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு 1987இல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றுவரையிலும் தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துவதும் வீடுகளை அழிப்பதும் வன்னியர்களின் வன்முறை வடிவங்களாக இருந்து வருகின்றன.

மூன்று கிராமங்களில் கொண்டம்பட்டி என்னும் ஊரில் ஒரு வீட்டில் முழுக்கக் கருகல் நெடி. ஏறக் குறையப் பத்து மூட்டை நெல் தீக்கிரைக்கிரையாக்கப்பட்டுள்ளது. எரிந்து சிதைந்த வீட்டிற்கு வெளியே வீடிழந்த பெண் குத்துக்காலிட்டுக் கதறியழுதுகொண்டிருந்தார். அவருக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காததுதான் வியப்பு என்றார் ஒருவர். மறுபுறம் பக்கத்துக் கிராமங்களின் உறவினர்களும் ஆர்வலர்களும் திரட்டித் தந்த உணவையும் உடைகளையும் பெற்றுக்கொள்ளப் பாதிக்கப்பட்ட மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். வரிசையில் வந்துகொண்டிருந்த ஒரு பெண் என்ன நினைத்தாரோ அவற்றை வாங்க மறுத்துக் கதறியழுதார். இத்தகு அழிவுகளையும் வலிகளையும் புரிந்துகொள்ள ஒருவர் தலித்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது. ஆனால் தலித்துகளின் துயரக் குரலை எந்தவிதத்திலும் பொதுச் சமூகம் பொருட்படுத்துவதில்லை. இத்தகைய அழிவிற்குப் பின்னும் அம்மக்கள் யார்மீதும் சிறு கல்லும் எடுத்தெறியவில்லை. சாதியமைப்பின் பகுதியாகிய இத்தகைய ‘சகிப்புணர்வைப்’ பயன்படுத்திக் கொண்டு நம் சமூகம் தலித்துகளைத் தொடர்ந்து சுரண்டுகிறது.

நாங்கள் சென்றிருந்தபோது மூன்று கிராமங்களிலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மட்டும் இருந்தனர். அடுத்தடுத்துத் தலித் அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் அப்பகுதிக்கு வந்துவிட்டனர். சில நாட்கள் கழித்துச் சில அமைப்புகள் கண்டனம் வெளியிட்டன. எனினும் தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் இப்பிரச்சினையில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அல்லது தலித்துகளுக்கு முகம் காட்டி, வன்னியர்களுக்கும் பாதகமில்லாமல் பேச விரும்புகிறார்கள். தலித் ஆணும் வன்னியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதையொட்டி இப் பிரச்சினை ஏற்பட்டது. வன்னியர் சங்கமான பாட்டாளி மக்கள் கட்சியும் கொங்கு வேளாளக் கவுண்டர் அமைப்புகளும் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக விடுத்த சவாலைக் கண்டுகொள்ளாமலிருந்த தமிழகத்தின் பெருவாரியான அமைப்புகளையும் அறிவுஜீவிகளையும் தருமபுரிச் சம்பவம் பேசவைத்துள்ளது. இதற்கு மூன்று தலித் கிராமங்கள் அழிய வேண்டியுள்ளது. தலித்துகள்மீது நடந்த தாக்குதல் மட்டுமல்லாது சேதத்தின் அளவும் அரசியல் நெருக்கடியும் சேர்ந்தே இவ் விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன.

பெரியார் முன்னெடுத்த அரசியல் கருத்தாக்கத்திற்கே பெரிய நெருக்கடி என்ற முறையில் பெரியார் இயக்கங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ஏற்கனவே போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகம் தவிரத் தமிழகத்தில் கடந்தகாலங்களில் நடந்துவந்த பல்வேறு சாதி வன்முறைகளுக்கு உரிய எதிர்வினையை ஆற்றாத திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி போன்றோர் சம்பவப் பகுதிகளுக்கு வந்ததோடு, கலப்பு மணத்திற்கு ஆதாரவான மாநாடு, போராட்டங்களை அறிவித்துள்ளனர். எனினும் தருமபுரிப் பிரச்சினையைக் கண்டிக்க அவர்களுக்குப் பிராமண எதிர்ப்பு அடையாளமும் தேவைப்படுகிறது. ‘பிராமணர்கள் கபே’ எதிர்ப்பு மட்டுமே போதாது, பிற ஆதிக்கச் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் எனத் தலித் செயல்பாட்டாளர்கள் பேசத் தொடங்கிய பிறகே எல்லாச் சாதிப் பெயர்களையும் நீக்குவதென்னும் மாற்றம் ஏற்பட்டது. எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஆதிக்கச் சாதிகளின் எதிர்ப்பைச் சார்ந்து பல்வேறு ஆதிக்கச் சாதிகளும் கலப்பு மணத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ள நிலையில், கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் போராட்ட அறிவிப்பில் எதிர்ப்பிற்குரிய முதல் சாதியமைப்பாகப் பிராமணர் சங்கத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. பிராமணர் சங்கம் எதிர்க்கப்படக் கூடாதது என்பதும் நம் கருத்தல்ல. மாறாகப் பெரும்பான்மை வன்முறையை எதிர்ப்பதற்குப் புழக்கத்திலிருந்து வரும் அரசியல் நம்பிக்கை தேவைப்படுகிறது. இங்குப் புதிதாய் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள யாரும் தயாராயில்லை.

கலப்புத் திருமணத்துக்கு எதிரான காடுவெட்டி குருவின் பேச்சைக் கண்டிப்பதிலும் போராட்டம் நடத்துவதிலும் அக்கறை காட்டும் பெரியாரிய அமைப்புகளும் பல்வேறு முற் போக்கு அமைப்புகளும் கவுண்டர், வன்னியர் போன்ற பெரும்பான்மைச் சாதியினர் இம்முடிவுக்கு வந்தடைந்த விதத்தையும் அவர்களிடம் தீவிரம்பெற்றுள்ள தலித் வெறுப்பையும் ஆராய வேண்டும். இட ஒதுக் கீட்டுக்காகப் போராடிய சாதிகள் என்பது முதற்கொண்டு இன்றுவரையிலும் அச்சாதிகளிடம் இட ஒதுக்கீடும் அரசியல் அதிகாரமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அளவிலும் அச்சாதிகள் மத்தியிலும் செயல்பட்டுவந்த சாதி சாராத அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் தீண்டாமையையும் தலித்துகள் பற்றிக் கொண்டிருந்த சித்தரிப்புகளையும் பரிசீலிக்க வேண்டும். இத்தகு மாற்றங்களையெல்லாம் கொண்டு அதற்கேற்பச் சாதி மறுப்புச் சொல்லாடல்களைக் கட்டமைக்காதபட்சத்தில் இதுபோல் ஆண்டுக்கொரு காடுவெட்டி குருவை நாம் கண்டிக்க வேண்டிவரலாம். இந்திய அளவிலான பிராமண அதிகாரம் தகர்ந்துவிடவில்லையெனினும் வட்டார அளவிலான பெரும்பான்மை ஆதிக்கச் சாதி அதிகாரம் வலுவடைந்திருப்பதையும் தேவையெனில் அது பிராமண அதிகாரத்தோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதோடு பிராமணர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்கிறது. இவ்வாறு சாதி தரும் அதிகாரம் ஒடுக்கப்பட்ட சாதிகளை அமுக்கிவைப்பதோடு இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது. இந்திய ஜனநாயகத்திற்குச் சாதிப் பெரும்பான்மைவாதம் பெருந்தடையாக மாறும் என்ற அம்பேத்கரின் கவலை நடை முறையில் நிரூபணமாகிவருவதைப் பார்க்கிறோம்.

காடுவெட்டி குருவின் கலப்பு மண எதிர்ப்பு உரையோடு முரண்படும் அமைப்புகள் பலவும் சாதிப் பெரும்பான்மைவாதத்தைக் கண்டுணராதது மட்டுமல்ல அதையே கடந்த காலங்களில் சமூக நீதி என்று பேசியும் செயல்பட்டும்வந்துள்ளன என்பதுதான் சாதிசார்ந்து இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கிலெடுக்காமல் போவதற்கான முக்கியக் காரணமாகும். மொத்தத்தில் இன்றைக்குச் சாதி என்பது தீண்டாமையா பண்பாட்டு அடையாளமா அதிகாரமா அல்லது இவையெல்லாம் இணைந்த வடிவமா? இத்தகு அம்சங்களில் கூர்மையடைந்திருப்பதும் மழுங்கிப் போயிருப்பதும் எவையெவை? இப்படியெல் லாம் இன்றைய உலகமயமாதல் சூழலில் ஆழமாக அணுகிச் சாதியச் சொல்லாடலைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. அத்தகு அக்கறை நம் சூழலில் அழுத்தம் பெறாததாலேயே நம் சமூகம் சாதிய வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி, திராவிட அமைப்புகளில் பெரியாரிய அமைப்புகள் தவிரப் பிரதானக் கட்சிகள் வன்முறையை மட்டும் கண்டித்திருக்கின்றன. காடுவெட்டி குருவின் பேச்சையோ சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பையோ அவை பேசாமல் தவிர்த்துள்ளன. மதிமுக சார்பாகக் குழுவொன்று அக்கிராமங்களுக்குச் செல்லும் என்னும் வைகோவின் அறிக்கை சாதி, தலித், ஒடுக்குமுறை போன்ற எந்தச் சொல்லும் இடம்பெறாமல் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ராமதாஸின் சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பைவிடத் திராவிட அடையாளம்மீதான அவரது எதிர்ப்பே திராவிடக் கட்சிகளை அதிகம் கோபப்படுத்தியிருக்கிறது. ராமதாஸுக்கு எதிரான பெரியாரிய இயக்கங்களின் எதிர்ப்பில் இந்த அம்சத்திற்கும் இடமுண்டு. கடந்த நவம்பர் 18ஆம் தேதி மறைமலைநகர் திமுக இளைஞரணிக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி திராவிட அடையாளத்துக்கு எதிரான ராமதாஸின் விமர்சனத்தை மறைமுகமாகச் சாடியிருந்தாரே ஒழிய அவரது அண்மைக்காலச் சாதியப் பேச்சுக்கு எதிராக எந்தச் சொல்லும் உதிர்க்கவில்லை. திராவிட அடையாளத்தின் முக்கிய அம்சமாகக் கொள்ளப்பட்டிருந்த பிராமண எதிர்ப்பினூடான சாதிய எதிர்ப்பை மீண்டும் பேசிச் சாதி சார்ந்த ஓட்டுகளை இழப்பதை விடத் திராவிடமா தமிழனா எனப் பேசிவிடுவது கருணாநிதிக்குச் சுலபம். அதிகாரிகளால் வழங்க முடிந்திருக்கிற அரசு உதவித் தொகையை அமைச்சர் ஒருவரை அனுப்பி வழங்கச்செய்வதன் மூலம் தன் தரப்பை நிறுவிக்கொள்ளப் பார்க்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆதிக்க சாதிகள் பற்றியோ வட்டாரரீதியான பெரும்பான்மை சாதிகள் பற்றியோ வெளியாகும் தவறான சித்தரிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போராட்டமும் கண்டனங்களும் தெரிவிப்பது மட்டுமல்ல ஒரு அரசே அவற்றுக்கு ஆதரவாக எதிர்வினையில் ஈடுபடுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கோ வாழிடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டாலும் அந்த நியாயம் பொருந்துவதில்லை. ஓட்டு சாராத ‘தமிழ்த் தேசிய’ அமைப்புகள் பலவும் இதைக் குறித்துப் பேசுவதையே தவிர்த்துள்ளன. கண்டனம், எதிர்ப்பு என்ற வகையில் திராவிட இயக்கம் சாதகமாகத் தெரிகிறபோதிலும், தலித் அக்கறை என்ற அளவில் திராவிடத் தேசியத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் தூரம் அதிகமில்லை என்பதே உண்மை.

                                                                                  o

தர்மபுரி நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் நடந்த வன்முறை என்ற அளவில் இந்தப் பிரச்சினை அரசியல்ரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது. 1980களில் நக்சல்பாரி இயக்கம் செயல்பட்ட பகுதி இது. இரட்டைத் தம்ளர் ஒழிப்பு போன்ற தீண்டாமை ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்ட நக்சல்பாரிச் செயல்பாட்டாளர்கள் காவல் துறையால் கொல்லப்பட்டனர். அதேபோல வன்னியர்களைப் பொறுத்தவரை கடலூர், அரியலூர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய குழுக்கள் செயல்பட்டுள்ளன. இது போன்ற காலங்களில் அமுங்கிப் போயிருந்த சாதி உணர்வு 1987 வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது ஒன்று திரட்டப்பட்டது. வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டபோது, சிதறிக்கிடந்த தமிழ்த் தேசிய குழுக்களும் கட்சி சாராமல் செயல்பட்டுவந்த மார்க்சியர்களும் அக்கட்சியை ஆதரித்தனர். எஸ்சி - பிசி ஒற்றுமை மேடைகளில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாமக தேர்தல் கட்சியாக மாற்றம்பெற்றபோது, அது வன்னியர்களின் சாதி உணர்வை முன்னெடுத்தது. நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அதிகாரத்தை எட்டுவதற்காகச் சாதித் திரட்சியும் அதற்கான சாதி உணர்வும் பயன்படும் என்கிறபோது சாதி மறுப்பு போன்று சவாலான நிலைப்பாட்டை எடுக்காமல் சமூகத்தின் சாதியப் புத்தியைப் பயன்படுத்திக்கொள்வதோடு அதைக் கூர்மைப்படுத்தும் செயல்பாடுகளிலும் பாமக ஈடுபட்டது. அக்காலகட்டத்தில்தான் கடலூர் மாவட்டத்தில் தலித்துகள் மத்தியில் பரவிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் வன்னியர்களால் வன் முறையோடு எதிர்கொள்ளப்பட்டது.

தர்மபுரி வன்முறையில் கணக்கில்கொள்ள வேண்டிய மற்றுமொரு அரசியல் காரணி பாமக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி பற்றியதாகும். வன்னியர்களையும் தலித்துகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்களாகச் செயல்பட்ட இக்கட்சிகள் கடந்த பத்தாண்டுகளாக அரசியல் தளத்தில் இணைந்து செயல்பட்டதால் இச் சமூகங்களிடையே சாதகமான மாற்றங்கள் உருவாகும் என எதிர் பார்க்கப்பட்டது. தங்கள் கூட்டணிக்கான நியாயமாக அக்கட்சிகளும் சமூக நல்லிணக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தின. ஆனால் இக்கூட்டணி வெறும் தோற்றமே என்பதைத் தருமபுரி எதார்த்தம் காட்டியிருக்கிறது. வன்னியர்கள் மத்தியில் இக்கூட்டணி எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே அறிய முடிகிறது.

இவ்விரண்டு கட்சிகளின் அடையாளரீதியான கூட்டணி, உள்ளூர் நிலவரம் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு இத்தகைய அனுபவம் வியப்பானதாக இருக்க முடியாது. முரண்படும் இரண்டு வகுப்பினரின் கட்சிகள் என்ற முறையில் முரண்பாட்டுக்கான காரணம், அதைக் களைவதற்கான தொடர்முயற்சிகள் என்பதாக இக்கட்சிகளின் கூட்டுச் செயல்பாடுகள் அமையவில்லை. மாறாகத் மொழி போன்ற எளிதில் உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சினைகளின் அடிப்படையில் இக்கூட்டணி அமைந்தது. தமிழ் அடையாளம் என்னும் அளவில் கல்விமொழி, நிர்வாக மொழி என்றுகூட ஆக்கபூர்வமாக அமையாமல் சினிமா பெயர் மாற்றம், ஈழப் பிரச்சினை என்ற அளவில் உணர்ச்சிபூர்வமான செயல்களோடு நின்றுகொண்டன. சாதி மறுப்பு என்ற செயல்திட் டத்தோடு முரண்பட்டு வாழும் மக்கள் குழுவினரிடம் சென்று செயலாற்றும் சவாலான நிலைமையை அக்கட்சிகள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில் இக்கூட்டணி தேர்தலில் இரு பெரும்பான்மை வகுப்பினரின் ஓட்டுகளைத் திரட்டும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. எனவே சாதிய அமைப்பு ஒழுங்கில் எவ்வித உடைவையும் ஏற்படுத்தாமல் முற்றிலும் வேறொரு அடையாளத்தின் பெயரால் இக்கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் அரசியல் நம்பிக்கையான தமிழ் அடையாளம்தான் இக்கூட்டணிக்கான காரணமாக அமைந்தது. அக முரண்பாடுகளை மறைத்துப் பொது எதிரியொருவரைக் காட்டி ஒன்று திரளும் அரசியல் உத்தி, உணர்ச்சிபூர்வமாக ஒன்று திரளுதல் என்ற வகையில் தமிழ் அடையாளம் அவர்களுக்கு உதவ முடியும் எனக் கருதப்பட்டது. இரண்டு வகுப்பினரின் அரசியல் அதிகார நிலைப்பாடுகளோடு தமிழ் அடையாளத்தை இணைப்பதில் நிறைய முரண்பாடுகள் இருந்தன. தேர்தல் மூலமான அரசியல் அதிகாரம் என்னும்போது சாதியாகவும் பிறவேளைகளில் தமிழ் உள்ளிட்ட முற்போக்கு அடையாளமாகவும் மாறிவந்ததே ராமதாஸின் கடந்தகால வரலாறு. பெரும்பான்மை சாதி என்ற முறையில் வன்னியர்களின் கட்சி ஆளும் கட்சியாக மாற வேண்டுமானால் முதலில் திராவிடக் கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு பெரும்பான்மைச் சாதி ஒன்றோடு சேர வேண்டும். இந்த நிலைமையில் வன்னியர்களுக்கு அடுத்துப் பெரும்பான்மையான தலித்துகளோடு கூட்டு சேர ராமதாஸ் விரும்புகிறார். சொந்தச் சாதித் திரட்சியையும் விட்டுவிடாமல் மற்றுமொரு சாதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் அடையாளம் ராமதாஸுக்குக் கைகொடுத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரையில் திராவிடக் கட்சிகளின் பெரும்பான்மைவாத அரசியலால் புறக்கணிக்கப்பட்ட தலித்துகளின் குரலைப் பிரதிபலித்து எழுச்சிபெற்ற அமைப்பாகும். தலித்துகளைத் திரட்டுவதில் வேகம் காட்டிய அந்த இயக்கம் அரசியலில் தலித் சார்பான குரலெழுப்பும் குழுவாக மாறியது. எனினும் தேர்தல் கட்சியாக வடிவமெடுத்த இக்கட்சியும் பாமகவின் அரசியல் நோக்கத்தை ஒத்த பண்புக்கு இணங்கியது. பெருவாரியான மக்கள் திரட்சியின் நோக்கமான சாதி ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான செயல்பாடு என்பதை விடுத்துத் திருமாவளவனின் சொந்த விருப்பமான தமிழ் அடையாளம் கட்சியின் பிரதான முழக்கமாயிற்று. தமிழ் அடையாளமானது ராமதாஸைச் சார்ந்து வன்னியர்களிடம் பெற்றிருக்கும் அழுத்தத்தைவிடத் திருமாவளவனைச் சார்ந்து தலித்துகளிடம் பெற்றிருக்கும் அழுத்தம் அதிகம். எனவே இங்கே தமிழ் அடையாளம் அரசியல் நோக்கத்திற்கேற்பக் கையாளப்பட்டு உண்மையில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய சாதி மறுப்பு சார்ந்த செயல்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்நிலையில்தான் தருமபுரியில் தமிழைச் சாதி தின்று தீர்த்திருக்கிறது.

தமிழ் அடையாளத்தை முன்னெடு¢த்த காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்காக அதிக விலை கொடுத்திருக்கிறது. சாதி எதிர்ப்பை எதிர்கொள்வதில் ஏற்பட்டுவிட்ட சமரசங்களே அவை. மாவீரர் தினத்திற்குத் தன்னெழுச்சியாகப் போஸ்டர் ஒட்டும் அக்கட்சியினரிடமிருந்து தருமபுரிச் சம்பவத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எங்கும் சிறு சுவரொட்டியோ மறியலோகூட இல்லாமல் போனது இயல்பானதல்ல. தருமபுரியில் பத்திரிகையாளர் ஒருவர் வன்முறைக்குப் பிறகு வன்னியர்கள் பயப்படுவது எஸ்சி-எஸ்டி சட்டத்திற்கு மட்டுமே என்று என்னிடம் கூறியது பொய்யல்ல.

ஈழ அரசியல் விஷயத்திலும் ராமதாஸுடன் கசப்பான அரசியல் அனுபவம் என்ற முறையிலும் திருமாவளவன் அனுதாபம் தேடுவதை விடுத்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர் என்னும் முறையில் பொறுப்போடு கற்றுக்கொள்வதற்கான அனுபவங்களை இந்த அரசியல் சூழல் அவருக்குத் தந்திருக்கிறது. தர்மபுரி வன்முறைக்குப் பிறகு ராமதாஸை நோக்கிய சீறல், ஆர்ப்பாட்டம் என்பதைத் தாண்டி மற்ற எவற்றையும் அவர் செய்யத் தெரியாமல் இருப்பதையே பார்க்கிறோம். இப்பிரச்சினையை அவர் மைய நீரோட்ட அரசியல் லாபியில் வைத்தே பேச முனைகிறார். தலித் பிரச்சினைகளை உடனடி தேர்தல் நோக்கில் இல்லாமல் பரந்த அளவிலான அணுகுமுறையை நோக்கி எடுத்துச்செல்லும் தொலைநோக்கு எதுவும் அவரிடம் இல்லை. தர்மபுரிப் பிரச்சினையில் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்க விரும்பும் ஊடகங்கள் திருமாவளவனுக்கு ஆதரவாக நின்றுகொள்ள விரும்புகின்றன. வன்முறைக்கு பிறகான ராமதாஸ் கருத்துகளையும் திருமாவளவன் கருத்துகளையும் ஒப்பிட்டு திருமா வளவனின் பக்குவம் பற்றி பேசப்படுகிறதே ஒழிய சாதி எதிர்ப்பு அரசியல் பயணத்தில் திருமாவளவனின் கடந்தகால செயல்பாடுகளின் விளைவுகள், தர்மபுரி போன்ற பிரச்சினைகளின்போது சடங்காகிவிட்ட ஆர்ப்பாட்டங்கள் என்பதைத் தாண்டி இப்பிரச்சினைகளில் அவரின் ஆக்கபூர்வ அழுத்தம் என்னவாக அமையப்போகிறது என்ற விமர்சனக் கண்ணோட்டத்திலான அணுகுமுறை முன்வைக்கப்படவில்லை.

ஏறக்குறையப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணியைக் காட்டித் தலித்துகளை எதிர்கொள்ளும் அரசியல் முயற்சி எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது. கொங்கு வேளாளர் பேரவையின் மணிகண்டன் கலப்புத் திருமண எதிர்ப்பை வலியுறுத்தி மாநாடு அறிவித்திருப்பதும் ஏனைய சாதி இந்துச் சமூகங்களை ஒன்றிணைக்க முயல்வதாகக் கூறுவதும் சாதிச் சங்கத்தின் குரல் மட்டுமல்ல. தமிழகத்தில் கடந்தகால முற்போக்கு நடவடிக்கைகளின் பலனை அறுவடைசெய்து கொண்ட இயக்கங்களின் குரலாகவும் மாறியிருப்பதைப் பார்க்கிறோம். தர்மபுரி வன்முறை குறித்துக் கருத்து தெரிவித்த ராமதாஸ் வன்முறையை நியாயப்படுத்தியிருப்பதோடு தலித்துகளுக்கு எதிரான மற்ற சாதி இந்துச் சமூகங்களின் பிரதிநிதியாகவும் குரலெழுப்பத் தயாராகி நிற்பதையும் பார்க்க முடிகிறது. தர்மபுரி தலித் மக்களின் துயரம் இவர்களை அசைக்காதது மட்டுமல்ல அதைத் தலித் மக்களுக்கான எச்சரிக்கை யாகவும் சாதி இந்துக்களுக்கான முன்னு தாரணமாகவும் மாற்ற இவர்கள் தயாராகிவருகின்றனர். இச்சூழல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல உரிய முறையில் எதிர்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது. பிராமணர் x பிராமணர் அல்லாதார் என்ற எதிர்வைக் காட்டிக் கொண்டிருந்தாலும் நம் சூழல் தலித் x தலித் அல்லாதார் என்னும் எதிர்வாக மாறியிருப்பதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம். நம் விவாதத்தை வேரிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

நன்றி :  காலச்சுவடு

No comments:

Post a Comment