Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, 14 May 2014

நூற்றாண்டை நினைவு கூருதலின் அரசியல் : கால்டுவெல்லும் அயோத்திதாசரும்

ஸ்டாலின் ராஜாங்கம்

தி.மு..தலைவர் மு.கருணாநிதிகால்டுவெல்லின் இருநூறாவது பிறந்த தினமான மே 7-ம் நாள் அவரைப்  போற்ற வேண்டும் என்று மே  4-ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ், திராவிடன் போன்ற அடையாளங்கள் உருவாக கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூல்தான் வித்திட்டது என்கிற வகையில் அதன் ஆசிரியரான கால்டுவெல்லை கருணாநிதியின் இந்த அறிக்கை நினைவு கூறுகிறது. குறிப்பான பிரச்சினைகள் அடிப்படையில் அல்லாமல் தங்களை எல்லோருக்குமான அமைப்பாகவும் தலைவராகவும் காட்டிக்கொள்ள விரும்பும் யாரும் பயன்படுத்துவதாக தமிழ் அடையாளம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் இங்கொரு சமய நம்பிக்கையின் இடத்தைப் பிடித்திருக்கிறது. கால்டுவெல்லின் கருத்துகள் மீது எதிரும் புதிருமான பல்வேறு பார்வைகள் வந்துவிட்ட நிலையிலும், அதைக் கணக்கிலெடுக்காமல் பழைய தமிழ் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே கருணாநிதியின் கால்டுவெல் பற்றிய அறிக்கை அமைந்திருந்தது.

அதேவேளையில் கருணாநிதியின் தமிழ் உரிமை கோரல்களை எதிர்கொள்ளவும் தன்னை அவ்விடத்தில் நிறுவிக் கொள்ளவும் .தி.மு. தலைவர் ஜெயலலிதா முயற்சித்து வருவதும் வெளிப்படை. எனவே கருணாநிதியின் கால்டுவெல் பற்றிய அறிக்கைக்கு அடுத்த நாள் மே 5-ந்தேதி முதல்வரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதாவது கால்டுவெல்லின் 200-வது பிறந்த தினம் அரசுவிழாவாக கொண்டாடப்படும் என்றது அவரின் அறிக்கை. கருணாநிதியின் அறிக்கையைப் பார்த்து இதைச் செய்ததாக சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சி.எஸ்.. திருநெல்வேலி மண்டலப் பேராயர் வைத்த கோரிக்கையை ஏற்று இதை நடத்தவதாக அறிவித்திருந்தார். அன்றே மே 7-ந்தேதி கால்டுவெல் சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிப்பார் என்கிற தி.மு..வின் செய்திக் குறிப்பும் வெளியானது. தேர்தல் உள்ளிட்ட அதிகாரத் தேவைகளுக்காகச் சாதி உள்ளிட்ட உள்ளூர் உணர்ச்சிகளைப் பயன்படுத்தத் தயங்காத இக்கட்சிகள் இப்போது திராவிடம் மற்றும் தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றும் முனைப்பில் இந்த போட்டிகளில் உடுபடுகின்றன.

திராவிடக் கருத்தியல் மற்றும் திராவிட இயக்கம் போன்றவற்றிற்கு உரிமை
அயோத்திதாச பண்டிதர்
கோருவதற்காகவே கால்டுவெல்லின் (1814-1891) இருநூறாவது பிறந்த தினம் நினைவு கூறப்படுகிறதென்றால் இதே காரணத்துக்காக நினைவு கூற வேண்டிய மற்றொரு நாளும் இதே காலத்தில் வந்தது. நவீன காலத் தமிழகத்தின் முன்னோடி சிந்தனையாளர்களுள் ஒருவரான அயோத்திதாசரின் (1845-1914) நினைவு நூற்றாண்டு தினம்தான் அது. அவர் 1914-இம்இண்டு மே 5-ந்தேதி மரணமடைந்தார் என்ற வகையில் மே 5 அவரின் நூற்றாண்டு நினைவு நாளாகும். கால்டுவெல்லும் அயோத்திதாசரும் நேரடியாக தொடர்புடையவர்கள் இல்லை. இனால், திராவிட இயக்கக் கருத்தியலின் தோற்றுவாயோடு தொடர்புடையவர் என்ற முறையில் கால்டுவெல் போலவே அயோத்திதாசரையும் நினைவு கூர நியாயமிருக்கிறது.

கருணாநிதியின் அறிக்கையில் சொல்லப்படுவதைப் போலதிராவிட மொழிகள்’ என்ற சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர் கால்டுவெல் அல்ல. அண்மையில் இது தொடர்பான பல்வேறு புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. திராவிட உறவுமுறை என்கிற அரிய நூலை எழுதிய டிரவுட்மன் செய்த ஆய்வின்படி கால்டுவெல்லின் நூல் (1856) வெளியாவதற்கு முன்னரே 1816-இல்திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை எல்லிஸ் (1777-1819) வெளியிட்டார். ஆங்கிலேய அரசாங்க நிர்வாகியான எல்லீஸ் மொழியியல் நோக்கில் தொடங்கிய திராவிடமொழிகள் குறித்த இக்கருத்தாக்கத்தை கிறித்துவ மறை பரப்பாளரான கால்டுவெல், பின்னாளில் திராவிட மொழிகளைப் பேசி வாழ்ந்த குழுக்கள் குறித்த விரிவான ஆய்வாகவும் விரித்தார். அந்நூலுக்குப் பிறகு தமிழில் கால்கொண்ட நவீன வரலாற்று முறைமை மீது இக்கருத்தாக்கம் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது. இந்நிலையில்தான்திராவிடன்’ என்ற சொல்லை அரசியல் அமைப்பொன்றின் பெயராகவும் சமூகக் குழுவின் பெயராகவும் கையாண்டவராக முதலில் அயோத்திதாசரையே காணமுடிகிறது. 1891-இல்திராவிட மகாஜனசபை’ என்ற அமைப்பைத் தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூகப் பணியாற்றியதோடு அம்மக்களை ‘(சாதிபேதமற்ற) திராவிடர்கள்’ என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தினார். அவர் காலத்திலேயே வேறு குழுவினர்ஆதி திராவிடன்’ என்கிற அடையாள முயற்சிகளிலும் உடுபட்டனர்.

திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக 19-இம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி பல்வேறு காரணிகள் பங்கு வகித்திருப்பினும் துல்லியமாக புலப்படும்படியான முன்னோடியாக அயோத்திதாசரைக் கூறலாம். திராவிட இயக்கத்தின் முன்னோடியாக கூறத்தக்க அளவில் அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள சென்னை லௌகீக சங்கம் நடத்தியதத்துவவிவேசினி’ இதழ்களில் கூட (1878-1888) நாத்திகம், புரோகிதர் மறுப்பு போன்றவை உண்டெனினும் அப்போது உருவாகி வந்த தேசியவாத அரசியலைப் பிராமண அதிகாரமாகக் கருதி எதிர்த்தமை, இந்துமதம் மறுப்பு, இடஒதுக்கீடு கோரல் என்றெல்லாம் வெளிப்படையாக நவீன அரசியல் அமைப்புக்குட்பட்ட அரசியல் முகத்தோடு அயோத்திதாசர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட முன்னோடிகளே செயற்பட்டதைப் பார்க்க முடிகிறது.

தம்முடைய சமூகப்பணியின் தொடக்ககாலத்தில் ஆங்கிலேயர் அரசு குடிமதிப்பு கணக்கெடுப்பு எடுத்த போது (1881) பஞ்சமர்களை இந்துக்களாக பதிவு செய்யக்கூடாது என்றும், பூர்வத் தமிழர்கள் என்று பதிவுசெய்ய வேண்டுமென்றும் அயோத்திதாசர் அரசிடம் விண்ணப்பம் செய்தார். மேலும், 1880களின் மத்தியில்திராவிடர் கழகம்’ என்கிற அமைப்பை நடத்தி வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜான் ரத்தினம் என்கிற கிறித்தவ மதத் துறவியோடு சேர்ந்துதிராவிட பாண்டியன்’ என்கிற இதழை அயோத்திதாசர் நடத்தினார் என்று குறிப்புகள் கூறுகின்றன. பிறகு 1891இல் அவர் தொடங்கிய அமைப்பின் பெயரில்திராவிடன்’ என்ற சொல் இடம்பெற்றது. தமிழரைக் குறிப்பதற்கான மறுசொல்லாகவே அச்சொல்லைக் கருதிய அயோத்திதாசரிடம் இப்பார்வை கால்டுவெல் கட்டமைத்த கருத்தியலின் தாக்கத்தினால் உண்டானது என்று சொன்னால் அது மிகையில்லை. தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக அரசாங்க ஆதரவைக் கோரிவந்த அவர் அரசியல் நோக்கில் காலனியத்தின் அடையாள உருவாக்கமானதிராவிடன்’ என்ற சொல்லை எடுத்துக்கொண்டார். ஆனால், அயோத்திதாசர் தம் எழுத்துகளில் கால்டுவெல் பெயரை நேரடியாக எங்கும் கூறவில்லை. பறையர் வகுப்பு பற்றி கால்டுவெல் காட்டும் தொன்மங்கள் வரலாறு போன்றவை அயோத்திதாசரின் எழுத்துகளில் விரிந்த சித்திரம் பெற்று நிற்கின்றன.

திராவிடக் கருத்தியலின் மூலவரான எல்லீஸ் பற்றிய தகவல் கூட அயோத்திதாசரிடம் உண்டு. அதாவது 1812-ம் ஆண்டு சென்னை கல்விச்சங்கத்தை ஆரம்பித்த எல்லிஸ் அதல் தமிழ் ஏடுகளைச் சேகரிக்கவும் அச்சிடவும் செய்தார். திராவிட மொழிகள் குறித்த பார்வை உருவாக இச்சங்கச் செயற்பாடுகள் அவருக்கு ஆதாரமாயின. அவர் குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்னர் கல்விச் சங்கத்தில் குறள் அச்சேறியது. அவர் ஏடுகளை சேகரித்து வந்தபோது எல்லீஸிடம் குறளையும் நாலடி நானூறையும் சுவடிகளாகத் தந்தவர் தம் பாட்டனார் கந்தப்பன் என்கிறார் அயோத்திதாசர். அதேபோல குறள் அச்சில் வெளியான பின்பு அதிலிருந்த பாடபேதங்களை எல்லீஸிடமே அவர் முறையிட்டதாகவும் கூறுகிறார்.

அயோத்திதாசரின் கருத்தியலும் செயற்பாடுகளும் 1914-இம் ஆண்டு மரணத்துக்குப் பிறகு பல்வேறு காரணிகளால் மெல்ல மெல்ல மறைந்தன. பிறகு இறந்து நூறாண்டுகளை எட்டும் தருணத்தில் 1990களில்தான் அவரின் சிந்தனைகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. அவரின் சிந்தனைகளைத் தொகுத்த ஞான.அலாய்சியஸ் அயோத்திதாசரின் கருத்துக்களே திராவிட இயக்கத்தின் முன்னோடி என்கிறார். அயோத்திதாசரின் கருத்துகளைத்தான் திராவிட இயக்கம் முழுமையாக பேசியதென்றோ, திராவிட இயக்கமே அவருக்குத்தான் சொந்தம் என்றோ உரிமை பாராட்ட முடியாது. அரசியல் கருத்துகள் தவிர்த்து அயோத்திதாசரின் பண்பாட்டுப் பார்வை திராவிட இயக்கத்தாரிடமிருந்து வேறுபட்டது. இனால் அரசியல் கருத்துகள் என்ற அளவில் வேறு எவரையும் விட திராவிட இயக்கம் அயோத்திதாசரை மூலவராகக் கொள்வதில் நியாயமிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இனால் திராவிட அடையாளத்திற்காக போட்டியிடும் தற்காலக் கட்சிகள் அயோத்திதாசரைச் சிறிதளவும் நினைவு கூருவதில்லை. 1912-இம் ஆண்டின் சென்னை திராவிட மாணவர் அமைப்பொன்றைத் தொடக்கமாகக் கொண்டு 2012-ம் ஆண்டை திராவிட இயக்க நூற்றாண்டாக முன்பு கருணாநிதி அறிவித்தார். திராவிடக் கட்சிகள் அயோத்திதாசரைத் தொடக்கமாக கொள்ளாததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இனால் அவருக்கு நூற்றாண்டு என்று வருகிறபோது கூடப் பேசாமல் மௌனம் காக்கிறார்கள்.

ஏனெனில் அயோத்திதாசர் உள்ளூர்க்காரர். இங்கு அவர் ஏதாவதொரு சாதியை சேர்ந்தவராகி விடுகிறார். அதிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். அந்த கணக்குக்கு ஏற்பவே அவரை நினைவு கூரவோ பேசாமலிருக்கவோ முடியும். இனால் கால்டுவெல்லை இப்படிச் சொல்லிவிட முடியாது. எனவே அவரை நினைவு கூருவது எளிமை. அதனால்தான் அவரை நினைவு கூருவதற்கு இங்கு போட்டி. அதற்கிணையாக அயோத்திதாசரை நினைவு கூர்ந்துவிடாமல் மௌனம் காப்பதிலும் போட்டி.

ராபர்ட் கால்டுவெல்
கால்டுவெல் 1856-இல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அவர் உயிரோடு இருந்தபோது திருத்தம் செய்து 1876-இல் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டார். அதன்பிறகு அந்நூலின் மூன்றாம் பதிப்பு 1913-இம் இண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் அம்மூன்றாம் பதிப்பில் சில பகுதிகள் நீக்கப்பட்டு, நீக்கப்பட்டதற்கான குறிப்பே இல்லாமல் வெளியிடப்பட்டது. துண்டாடப்பட்ட இந்த வடிவமே முழுமையானது என்ற எண்ணம் அறிவுலகில் நிலைத்துவிட்டது. அந்நூலிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமானது பழம் திராவிடக் குடிகள் பறையர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளே என்பதாகும். கால்டுவெல்லுக்குச் சிலையும் பெயரும் வைத்ததாக உரிமை பாராட்டுவதில் போட்டி போடும் கட்சிகளின் இட்சியிலும் கால்டுவெல் நூல் மீதான எந்த ஆய்வும் நடந்ததில்லை. மாறாக, தனி நபர்கள் முயற்சியில் 2009-இம் ஆண்டுதான் இரண்டாம் பதிப்பின் நேரடி மூன்றாம் பதிப்பு வெளியிடப்பட்டது (கவிதா சரண் பதிப்பகம்). இதுபோன்ற அறிவார்ந்த விசயங்களெல்லாம் இக்கட்சிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் வேறு சில விசயங்கள் மட்டும் சொல்லித் தராமலேயே தெரிகின்றன.
 
திராவிட மற்றும் தமிழ்க்குழுவின் முதற்குடியினராக தாழ்த்தப்பட்ட சாதியைக் காட்ட விரும்பாமல் அதற்கான நூலாதாரத்தையே 1913-இல் நீக்கிய விசயம்தான், இன்றைய 2014-இல் திராவிட கருத்தியலின் மூலவராக தாழ்த்தப்பட்ட ஒருவர் இருந்தார் என்பது தெரிந்து விடக்கூடாது என்கிற விசயமாகவும் தொடர்கிறது என்று கூறினால் அதை தவறென்று சொல்லமுடியுமா?

Sunday, 20 January 2013

தமிழைத் தின்ற சாதி (தருமபுரி வன்முறை பற்றிய குறிப்புகள்)

- ஸ்டாலின் ராஜாங்கம்

புகைப்படங்கள்: ஜெய்கணேஷ்

நவம்பர் 7ஆம் தேதி வன்னியர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்ட தருமபுரியின் மூன்று கிராமங்களுக்கு எழுத்தாளர் குழுவாக நவம்பர் 10ஆம் நாள் சென்றிருந்தோம். செப்பனிட முடியாத அளவுக்கு எல்லா வீடுகளும் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருந்தன. உடல்மீதான வன்முறையைத் தவிர்த்துவிட்டு வீடுகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய திட்டமிட்ட சம்பவம் இது. மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வற்றவில்லை. எங்கள் குழுவில் மறைமுகமாகவேனும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளாதவர் யாருமில்லை. வாழ்விடத்தை இல்லாமலாக்குவது சாகடிப்பதைவிட மோசமான வன்முறை. இந்நிலைமை பாதிக்கப்பட்டவனின் இருப்பையே அழிக்கிறது. உயிரை மட்டும் விட்டுவைப்பதன் மூலம் இழப்பு ஏற்படுத்திய வலியிலேயே அவனை உழலவைக்கும் உளவியல் தந்திரம் இது. எலி வளையானாலும் தனிவளை என்பது தமிழ்ப் பழ மொழி. தலித் ஒருவன் வீடு கட்டுவது அசாதாரணமானது. முதலீடும் உழைப்பும் கால அளவும் அளப்பரியன. குறைந்தபட்ச வசதிகளோடு ஒரு வீட்டைக் கட்டிவிடுவது தலித்தின் வாழ்நாள் சாதனையாகிவிடுகிறது. மூன்று கிராமங்களிலும் எல்லா வீடுகளும் சீர்குலைக்கப்பட்டிருப்பதோடு ஒரு வீட்டின் எல்லாப் பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு 1987இல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றுவரையிலும் தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துவதும் வீடுகளை அழிப்பதும் வன்னியர்களின் வன்முறை வடிவங்களாக இருந்து வருகின்றன.

மூன்று கிராமங்களில் கொண்டம்பட்டி என்னும் ஊரில் ஒரு வீட்டில் முழுக்கக் கருகல் நெடி. ஏறக் குறையப் பத்து மூட்டை நெல் தீக்கிரைக்கிரையாக்கப்பட்டுள்ளது. எரிந்து சிதைந்த வீட்டிற்கு வெளியே வீடிழந்த பெண் குத்துக்காலிட்டுக் கதறியழுதுகொண்டிருந்தார். அவருக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காததுதான் வியப்பு என்றார் ஒருவர். மறுபுறம் பக்கத்துக் கிராமங்களின் உறவினர்களும் ஆர்வலர்களும் திரட்டித் தந்த உணவையும் உடைகளையும் பெற்றுக்கொள்ளப் பாதிக்கப்பட்ட மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். வரிசையில் வந்துகொண்டிருந்த ஒரு பெண் என்ன நினைத்தாரோ அவற்றை வாங்க மறுத்துக் கதறியழுதார். இத்தகு அழிவுகளையும் வலிகளையும் புரிந்துகொள்ள ஒருவர் தலித்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது. ஆனால் தலித்துகளின் துயரக் குரலை எந்தவிதத்திலும் பொதுச் சமூகம் பொருட்படுத்துவதில்லை. இத்தகைய அழிவிற்குப் பின்னும் அம்மக்கள் யார்மீதும் சிறு கல்லும் எடுத்தெறியவில்லை. சாதியமைப்பின் பகுதியாகிய இத்தகைய ‘சகிப்புணர்வைப்’ பயன்படுத்திக் கொண்டு நம் சமூகம் தலித்துகளைத் தொடர்ந்து சுரண்டுகிறது.

நாங்கள் சென்றிருந்தபோது மூன்று கிராமங்களிலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மட்டும் இருந்தனர். அடுத்தடுத்துத் தலித் அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் அப்பகுதிக்கு வந்துவிட்டனர். சில நாட்கள் கழித்துச் சில அமைப்புகள் கண்டனம் வெளியிட்டன. எனினும் தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் இப்பிரச்சினையில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அல்லது தலித்துகளுக்கு முகம் காட்டி, வன்னியர்களுக்கும் பாதகமில்லாமல் பேச விரும்புகிறார்கள். தலித் ஆணும் வன்னியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதையொட்டி இப் பிரச்சினை ஏற்பட்டது. வன்னியர் சங்கமான பாட்டாளி மக்கள் கட்சியும் கொங்கு வேளாளக் கவுண்டர் அமைப்புகளும் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக விடுத்த சவாலைக் கண்டுகொள்ளாமலிருந்த தமிழகத்தின் பெருவாரியான அமைப்புகளையும் அறிவுஜீவிகளையும் தருமபுரிச் சம்பவம் பேசவைத்துள்ளது. இதற்கு மூன்று தலித் கிராமங்கள் அழிய வேண்டியுள்ளது. தலித்துகள்மீது நடந்த தாக்குதல் மட்டுமல்லாது சேதத்தின் அளவும் அரசியல் நெருக்கடியும் சேர்ந்தே இவ் விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன.

பெரியார் முன்னெடுத்த அரசியல் கருத்தாக்கத்திற்கே பெரிய நெருக்கடி என்ற முறையில் பெரியார் இயக்கங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ஏற்கனவே போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகம் தவிரத் தமிழகத்தில் கடந்தகாலங்களில் நடந்துவந்த பல்வேறு சாதி வன்முறைகளுக்கு உரிய எதிர்வினையை ஆற்றாத திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி போன்றோர் சம்பவப் பகுதிகளுக்கு வந்ததோடு, கலப்பு மணத்திற்கு ஆதாரவான மாநாடு, போராட்டங்களை அறிவித்துள்ளனர். எனினும் தருமபுரிப் பிரச்சினையைக் கண்டிக்க அவர்களுக்குப் பிராமண எதிர்ப்பு அடையாளமும் தேவைப்படுகிறது. ‘பிராமணர்கள் கபே’ எதிர்ப்பு மட்டுமே போதாது, பிற ஆதிக்கச் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் எனத் தலித் செயல்பாட்டாளர்கள் பேசத் தொடங்கிய பிறகே எல்லாச் சாதிப் பெயர்களையும் நீக்குவதென்னும் மாற்றம் ஏற்பட்டது. எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஆதிக்கச் சாதிகளின் எதிர்ப்பைச் சார்ந்து பல்வேறு ஆதிக்கச் சாதிகளும் கலப்பு மணத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ள நிலையில், கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் போராட்ட அறிவிப்பில் எதிர்ப்பிற்குரிய முதல் சாதியமைப்பாகப் பிராமணர் சங்கத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. பிராமணர் சங்கம் எதிர்க்கப்படக் கூடாதது என்பதும் நம் கருத்தல்ல. மாறாகப் பெரும்பான்மை வன்முறையை எதிர்ப்பதற்குப் புழக்கத்திலிருந்து வரும் அரசியல் நம்பிக்கை தேவைப்படுகிறது. இங்குப் புதிதாய் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள யாரும் தயாராயில்லை.

கலப்புத் திருமணத்துக்கு எதிரான காடுவெட்டி குருவின் பேச்சைக் கண்டிப்பதிலும் போராட்டம் நடத்துவதிலும் அக்கறை காட்டும் பெரியாரிய அமைப்புகளும் பல்வேறு முற் போக்கு அமைப்புகளும் கவுண்டர், வன்னியர் போன்ற பெரும்பான்மைச் சாதியினர் இம்முடிவுக்கு வந்தடைந்த விதத்தையும் அவர்களிடம் தீவிரம்பெற்றுள்ள தலித் வெறுப்பையும் ஆராய வேண்டும். இட ஒதுக் கீட்டுக்காகப் போராடிய சாதிகள் என்பது முதற்கொண்டு இன்றுவரையிலும் அச்சாதிகளிடம் இட ஒதுக்கீடும் அரசியல் அதிகாரமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அளவிலும் அச்சாதிகள் மத்தியிலும் செயல்பட்டுவந்த சாதி சாராத அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் தீண்டாமையையும் தலித்துகள் பற்றிக் கொண்டிருந்த சித்தரிப்புகளையும் பரிசீலிக்க வேண்டும். இத்தகு மாற்றங்களையெல்லாம் கொண்டு அதற்கேற்பச் சாதி மறுப்புச் சொல்லாடல்களைக் கட்டமைக்காதபட்சத்தில் இதுபோல் ஆண்டுக்கொரு காடுவெட்டி குருவை நாம் கண்டிக்க வேண்டிவரலாம். இந்திய அளவிலான பிராமண அதிகாரம் தகர்ந்துவிடவில்லையெனினும் வட்டார அளவிலான பெரும்பான்மை ஆதிக்கச் சாதி அதிகாரம் வலுவடைந்திருப்பதையும் தேவையெனில் அது பிராமண அதிகாரத்தோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதோடு பிராமணர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்கிறது. இவ்வாறு சாதி தரும் அதிகாரம் ஒடுக்கப்பட்ட சாதிகளை அமுக்கிவைப்பதோடு இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது. இந்திய ஜனநாயகத்திற்குச் சாதிப் பெரும்பான்மைவாதம் பெருந்தடையாக மாறும் என்ற அம்பேத்கரின் கவலை நடை முறையில் நிரூபணமாகிவருவதைப் பார்க்கிறோம்.

காடுவெட்டி குருவின் கலப்பு மண எதிர்ப்பு உரையோடு முரண்படும் அமைப்புகள் பலவும் சாதிப் பெரும்பான்மைவாதத்தைக் கண்டுணராதது மட்டுமல்ல அதையே கடந்த காலங்களில் சமூக நீதி என்று பேசியும் செயல்பட்டும்வந்துள்ளன என்பதுதான் சாதிசார்ந்து இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கிலெடுக்காமல் போவதற்கான முக்கியக் காரணமாகும். மொத்தத்தில் இன்றைக்குச் சாதி என்பது தீண்டாமையா பண்பாட்டு அடையாளமா அதிகாரமா அல்லது இவையெல்லாம் இணைந்த வடிவமா? இத்தகு அம்சங்களில் கூர்மையடைந்திருப்பதும் மழுங்கிப் போயிருப்பதும் எவையெவை? இப்படியெல் லாம் இன்றைய உலகமயமாதல் சூழலில் ஆழமாக அணுகிச் சாதியச் சொல்லாடலைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. அத்தகு அக்கறை நம் சூழலில் அழுத்தம் பெறாததாலேயே நம் சமூகம் சாதிய வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி, திராவிட அமைப்புகளில் பெரியாரிய அமைப்புகள் தவிரப் பிரதானக் கட்சிகள் வன்முறையை மட்டும் கண்டித்திருக்கின்றன. காடுவெட்டி குருவின் பேச்சையோ சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பையோ அவை பேசாமல் தவிர்த்துள்ளன. மதிமுக சார்பாகக் குழுவொன்று அக்கிராமங்களுக்குச் செல்லும் என்னும் வைகோவின் அறிக்கை சாதி, தலித், ஒடுக்குமுறை போன்ற எந்தச் சொல்லும் இடம்பெறாமல் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ராமதாஸின் சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பைவிடத் திராவிட அடையாளம்மீதான அவரது எதிர்ப்பே திராவிடக் கட்சிகளை அதிகம் கோபப்படுத்தியிருக்கிறது. ராமதாஸுக்கு எதிரான பெரியாரிய இயக்கங்களின் எதிர்ப்பில் இந்த அம்சத்திற்கும் இடமுண்டு. கடந்த நவம்பர் 18ஆம் தேதி மறைமலைநகர் திமுக இளைஞரணிக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி திராவிட அடையாளத்துக்கு எதிரான ராமதாஸின் விமர்சனத்தை மறைமுகமாகச் சாடியிருந்தாரே ஒழிய அவரது அண்மைக்காலச் சாதியப் பேச்சுக்கு எதிராக எந்தச் சொல்லும் உதிர்க்கவில்லை. திராவிட அடையாளத்தின் முக்கிய அம்சமாகக் கொள்ளப்பட்டிருந்த பிராமண எதிர்ப்பினூடான சாதிய எதிர்ப்பை மீண்டும் பேசிச் சாதி சார்ந்த ஓட்டுகளை இழப்பதை விடத் திராவிடமா தமிழனா எனப் பேசிவிடுவது கருணாநிதிக்குச் சுலபம். அதிகாரிகளால் வழங்க முடிந்திருக்கிற அரசு உதவித் தொகையை அமைச்சர் ஒருவரை அனுப்பி வழங்கச்செய்வதன் மூலம் தன் தரப்பை நிறுவிக்கொள்ளப் பார்க்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆதிக்க சாதிகள் பற்றியோ வட்டாரரீதியான பெரும்பான்மை சாதிகள் பற்றியோ வெளியாகும் தவறான சித்தரிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போராட்டமும் கண்டனங்களும் தெரிவிப்பது மட்டுமல்ல ஒரு அரசே அவற்றுக்கு ஆதரவாக எதிர்வினையில் ஈடுபடுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கோ வாழிடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டாலும் அந்த நியாயம் பொருந்துவதில்லை. ஓட்டு சாராத ‘தமிழ்த் தேசிய’ அமைப்புகள் பலவும் இதைக் குறித்துப் பேசுவதையே தவிர்த்துள்ளன. கண்டனம், எதிர்ப்பு என்ற வகையில் திராவிட இயக்கம் சாதகமாகத் தெரிகிறபோதிலும், தலித் அக்கறை என்ற அளவில் திராவிடத் தேசியத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் தூரம் அதிகமில்லை என்பதே உண்மை.

                                                                                  o

தர்மபுரி நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் நடந்த வன்முறை என்ற அளவில் இந்தப் பிரச்சினை அரசியல்ரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது. 1980களில் நக்சல்பாரி இயக்கம் செயல்பட்ட பகுதி இது. இரட்டைத் தம்ளர் ஒழிப்பு போன்ற தீண்டாமை ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்ட நக்சல்பாரிச் செயல்பாட்டாளர்கள் காவல் துறையால் கொல்லப்பட்டனர். அதேபோல வன்னியர்களைப் பொறுத்தவரை கடலூர், அரியலூர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய குழுக்கள் செயல்பட்டுள்ளன. இது போன்ற காலங்களில் அமுங்கிப் போயிருந்த சாதி உணர்வு 1987 வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது ஒன்று திரட்டப்பட்டது. வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டபோது, சிதறிக்கிடந்த தமிழ்த் தேசிய குழுக்களும் கட்சி சாராமல் செயல்பட்டுவந்த மார்க்சியர்களும் அக்கட்சியை ஆதரித்தனர். எஸ்சி - பிசி ஒற்றுமை மேடைகளில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாமக தேர்தல் கட்சியாக மாற்றம்பெற்றபோது, அது வன்னியர்களின் சாதி உணர்வை முன்னெடுத்தது. நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அதிகாரத்தை எட்டுவதற்காகச் சாதித் திரட்சியும் அதற்கான சாதி உணர்வும் பயன்படும் என்கிறபோது சாதி மறுப்பு போன்று சவாலான நிலைப்பாட்டை எடுக்காமல் சமூகத்தின் சாதியப் புத்தியைப் பயன்படுத்திக்கொள்வதோடு அதைக் கூர்மைப்படுத்தும் செயல்பாடுகளிலும் பாமக ஈடுபட்டது. அக்காலகட்டத்தில்தான் கடலூர் மாவட்டத்தில் தலித்துகள் மத்தியில் பரவிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் வன்னியர்களால் வன் முறையோடு எதிர்கொள்ளப்பட்டது.

தர்மபுரி வன்முறையில் கணக்கில்கொள்ள வேண்டிய மற்றுமொரு அரசியல் காரணி பாமக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி பற்றியதாகும். வன்னியர்களையும் தலித்துகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்களாகச் செயல்பட்ட இக்கட்சிகள் கடந்த பத்தாண்டுகளாக அரசியல் தளத்தில் இணைந்து செயல்பட்டதால் இச் சமூகங்களிடையே சாதகமான மாற்றங்கள் உருவாகும் என எதிர் பார்க்கப்பட்டது. தங்கள் கூட்டணிக்கான நியாயமாக அக்கட்சிகளும் சமூக நல்லிணக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தின. ஆனால் இக்கூட்டணி வெறும் தோற்றமே என்பதைத் தருமபுரி எதார்த்தம் காட்டியிருக்கிறது. வன்னியர்கள் மத்தியில் இக்கூட்டணி எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே அறிய முடிகிறது.

இவ்விரண்டு கட்சிகளின் அடையாளரீதியான கூட்டணி, உள்ளூர் நிலவரம் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு இத்தகைய அனுபவம் வியப்பானதாக இருக்க முடியாது. முரண்படும் இரண்டு வகுப்பினரின் கட்சிகள் என்ற முறையில் முரண்பாட்டுக்கான காரணம், அதைக் களைவதற்கான தொடர்முயற்சிகள் என்பதாக இக்கட்சிகளின் கூட்டுச் செயல்பாடுகள் அமையவில்லை. மாறாகத் மொழி போன்ற எளிதில் உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சினைகளின் அடிப்படையில் இக்கூட்டணி அமைந்தது. தமிழ் அடையாளம் என்னும் அளவில் கல்விமொழி, நிர்வாக மொழி என்றுகூட ஆக்கபூர்வமாக அமையாமல் சினிமா பெயர் மாற்றம், ஈழப் பிரச்சினை என்ற அளவில் உணர்ச்சிபூர்வமான செயல்களோடு நின்றுகொண்டன. சாதி மறுப்பு என்ற செயல்திட் டத்தோடு முரண்பட்டு வாழும் மக்கள் குழுவினரிடம் சென்று செயலாற்றும் சவாலான நிலைமையை அக்கட்சிகள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில் இக்கூட்டணி தேர்தலில் இரு பெரும்பான்மை வகுப்பினரின் ஓட்டுகளைத் திரட்டும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. எனவே சாதிய அமைப்பு ஒழுங்கில் எவ்வித உடைவையும் ஏற்படுத்தாமல் முற்றிலும் வேறொரு அடையாளத்தின் பெயரால் இக்கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் அரசியல் நம்பிக்கையான தமிழ் அடையாளம்தான் இக்கூட்டணிக்கான காரணமாக அமைந்தது. அக முரண்பாடுகளை மறைத்துப் பொது எதிரியொருவரைக் காட்டி ஒன்று திரளும் அரசியல் உத்தி, உணர்ச்சிபூர்வமாக ஒன்று திரளுதல் என்ற வகையில் தமிழ் அடையாளம் அவர்களுக்கு உதவ முடியும் எனக் கருதப்பட்டது. இரண்டு வகுப்பினரின் அரசியல் அதிகார நிலைப்பாடுகளோடு தமிழ் அடையாளத்தை இணைப்பதில் நிறைய முரண்பாடுகள் இருந்தன. தேர்தல் மூலமான அரசியல் அதிகாரம் என்னும்போது சாதியாகவும் பிறவேளைகளில் தமிழ் உள்ளிட்ட முற்போக்கு அடையாளமாகவும் மாறிவந்ததே ராமதாஸின் கடந்தகால வரலாறு. பெரும்பான்மை சாதி என்ற முறையில் வன்னியர்களின் கட்சி ஆளும் கட்சியாக மாற வேண்டுமானால் முதலில் திராவிடக் கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு பெரும்பான்மைச் சாதி ஒன்றோடு சேர வேண்டும். இந்த நிலைமையில் வன்னியர்களுக்கு அடுத்துப் பெரும்பான்மையான தலித்துகளோடு கூட்டு சேர ராமதாஸ் விரும்புகிறார். சொந்தச் சாதித் திரட்சியையும் விட்டுவிடாமல் மற்றுமொரு சாதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் அடையாளம் ராமதாஸுக்குக் கைகொடுத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரையில் திராவிடக் கட்சிகளின் பெரும்பான்மைவாத அரசியலால் புறக்கணிக்கப்பட்ட தலித்துகளின் குரலைப் பிரதிபலித்து எழுச்சிபெற்ற அமைப்பாகும். தலித்துகளைத் திரட்டுவதில் வேகம் காட்டிய அந்த இயக்கம் அரசியலில் தலித் சார்பான குரலெழுப்பும் குழுவாக மாறியது. எனினும் தேர்தல் கட்சியாக வடிவமெடுத்த இக்கட்சியும் பாமகவின் அரசியல் நோக்கத்தை ஒத்த பண்புக்கு இணங்கியது. பெருவாரியான மக்கள் திரட்சியின் நோக்கமான சாதி ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான செயல்பாடு என்பதை விடுத்துத் திருமாவளவனின் சொந்த விருப்பமான தமிழ் அடையாளம் கட்சியின் பிரதான முழக்கமாயிற்று. தமிழ் அடையாளமானது ராமதாஸைச் சார்ந்து வன்னியர்களிடம் பெற்றிருக்கும் அழுத்தத்தைவிடத் திருமாவளவனைச் சார்ந்து தலித்துகளிடம் பெற்றிருக்கும் அழுத்தம் அதிகம். எனவே இங்கே தமிழ் அடையாளம் அரசியல் நோக்கத்திற்கேற்பக் கையாளப்பட்டு உண்மையில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய சாதி மறுப்பு சார்ந்த செயல்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்நிலையில்தான் தருமபுரியில் தமிழைச் சாதி தின்று தீர்த்திருக்கிறது.

தமிழ் அடையாளத்தை முன்னெடு¢த்த காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்காக அதிக விலை கொடுத்திருக்கிறது. சாதி எதிர்ப்பை எதிர்கொள்வதில் ஏற்பட்டுவிட்ட சமரசங்களே அவை. மாவீரர் தினத்திற்குத் தன்னெழுச்சியாகப் போஸ்டர் ஒட்டும் அக்கட்சியினரிடமிருந்து தருமபுரிச் சம்பவத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எங்கும் சிறு சுவரொட்டியோ மறியலோகூட இல்லாமல் போனது இயல்பானதல்ல. தருமபுரியில் பத்திரிகையாளர் ஒருவர் வன்முறைக்குப் பிறகு வன்னியர்கள் பயப்படுவது எஸ்சி-எஸ்டி சட்டத்திற்கு மட்டுமே என்று என்னிடம் கூறியது பொய்யல்ல.

ஈழ அரசியல் விஷயத்திலும் ராமதாஸுடன் கசப்பான அரசியல் அனுபவம் என்ற முறையிலும் திருமாவளவன் அனுதாபம் தேடுவதை விடுத்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர் என்னும் முறையில் பொறுப்போடு கற்றுக்கொள்வதற்கான அனுபவங்களை இந்த அரசியல் சூழல் அவருக்குத் தந்திருக்கிறது. தர்மபுரி வன்முறைக்குப் பிறகு ராமதாஸை நோக்கிய சீறல், ஆர்ப்பாட்டம் என்பதைத் தாண்டி மற்ற எவற்றையும் அவர் செய்யத் தெரியாமல் இருப்பதையே பார்க்கிறோம். இப்பிரச்சினையை அவர் மைய நீரோட்ட அரசியல் லாபியில் வைத்தே பேச முனைகிறார். தலித் பிரச்சினைகளை உடனடி தேர்தல் நோக்கில் இல்லாமல் பரந்த அளவிலான அணுகுமுறையை நோக்கி எடுத்துச்செல்லும் தொலைநோக்கு எதுவும் அவரிடம் இல்லை. தர்மபுரிப் பிரச்சினையில் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்க விரும்பும் ஊடகங்கள் திருமாவளவனுக்கு ஆதரவாக நின்றுகொள்ள விரும்புகின்றன. வன்முறைக்கு பிறகான ராமதாஸ் கருத்துகளையும் திருமாவளவன் கருத்துகளையும் ஒப்பிட்டு திருமா வளவனின் பக்குவம் பற்றி பேசப்படுகிறதே ஒழிய சாதி எதிர்ப்பு அரசியல் பயணத்தில் திருமாவளவனின் கடந்தகால செயல்பாடுகளின் விளைவுகள், தர்மபுரி போன்ற பிரச்சினைகளின்போது சடங்காகிவிட்ட ஆர்ப்பாட்டங்கள் என்பதைத் தாண்டி இப்பிரச்சினைகளில் அவரின் ஆக்கபூர்வ அழுத்தம் என்னவாக அமையப்போகிறது என்ற விமர்சனக் கண்ணோட்டத்திலான அணுகுமுறை முன்வைக்கப்படவில்லை.

ஏறக்குறையப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணியைக் காட்டித் தலித்துகளை எதிர்கொள்ளும் அரசியல் முயற்சி எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது. கொங்கு வேளாளர் பேரவையின் மணிகண்டன் கலப்புத் திருமண எதிர்ப்பை வலியுறுத்தி மாநாடு அறிவித்திருப்பதும் ஏனைய சாதி இந்துச் சமூகங்களை ஒன்றிணைக்க முயல்வதாகக் கூறுவதும் சாதிச் சங்கத்தின் குரல் மட்டுமல்ல. தமிழகத்தில் கடந்தகால முற்போக்கு நடவடிக்கைகளின் பலனை அறுவடைசெய்து கொண்ட இயக்கங்களின் குரலாகவும் மாறியிருப்பதைப் பார்க்கிறோம். தர்மபுரி வன்முறை குறித்துக் கருத்து தெரிவித்த ராமதாஸ் வன்முறையை நியாயப்படுத்தியிருப்பதோடு தலித்துகளுக்கு எதிரான மற்ற சாதி இந்துச் சமூகங்களின் பிரதிநிதியாகவும் குரலெழுப்பத் தயாராகி நிற்பதையும் பார்க்க முடிகிறது. தர்மபுரி தலித் மக்களின் துயரம் இவர்களை அசைக்காதது மட்டுமல்ல அதைத் தலித் மக்களுக்கான எச்சரிக்கை யாகவும் சாதி இந்துக்களுக்கான முன்னு தாரணமாகவும் மாற்ற இவர்கள் தயாராகிவருகின்றனர். இச்சூழல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல உரிய முறையில் எதிர்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது. பிராமணர் x பிராமணர் அல்லாதார் என்ற எதிர்வைக் காட்டிக் கொண்டிருந்தாலும் நம் சூழல் தலித் x தலித் அல்லாதார் என்னும் எதிர்வாக மாறியிருப்பதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம். நம் விவாதத்தை வேரிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

நன்றி :  காலச்சுவடு

Thursday, 12 July 2012

திராவிட இயக்கத்திற்காக நீங்கள் சிலுவை சுமப்பது ஏன்?

- ஸ்டாலின் ராஜாங்கம்

(தலித்துகள் பற்றிய தவறான வரலாற்றுத் தகவல்களை தந்த செம்மலர் இதழுக்கு எழுதப்பட்டு அவ்விதழ் பிரசுரிக்காமல் மறைத்த எதிர்வினை) 

செம்மலர் ஜூன் (2012) இதழில் அருணன் எழுதிய "எதிர்வினைக்கு மறுவினை" பற்றியும், மே 2012 இதழில் எஸ்..பெருமாள் எழுதிய "நீதிக்கட்சியும் சமூகநீதியும் என்ற கட்டுரை பற்றியும் என்னுடைய இக்கடிதம் அமைகிறது.

அருணனின் மறுவினையில் தகுந்த பதில் தருவதைக் காட்டிலும் வாதத்தை எதிர்கொள்ளும் சாமர்த்தியமே இருக்கிறது. தாம் எடுத்த நிலைபாட்டை எப்படியாவது வலிந்து நிறுவ வேண்டும் என்ற ஆவல் தான் அது. தலித் அரசியல் நிலைபாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளை எந்த அளவிற்கு எளிமைப்படுத்திப் புரிந்துக்கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமே மேலிடுகிறது.  "திராவிட இயக்கம் பிராமணரல்லாத சாதி இந்துக்களின் இயக்கம் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் போது, எம்முடைய வாதத்திற்கு வலுசேர்ப்பது போல் தெரியும் அருணனின் வாதம் அதனால் தலித்துகள் ஏன் உரிமை கொண்டாட வேண்டும் என்று கேட்கும் போது அதை ஏன் கூறினார் என்பது புரிந்து விடுகிறது.

திராவிட இயக்கம் சாதி இந்துக்களின் இயக்கம், அது தலித்துக்களைப் புறக்கணித்து வந்தது / வருகிறது என்பதை அறியாமல்தான் திராவிட இயக்கத்தின் தோற்றுவாய் மீது தலித்துகள் உரிமை கோருகிறார்கள் என்று அருணன் கருதுகிறாரா? இது குறித்த புரிதலோடுதான் இவ்வுரிமையைக் கோருகிறோம் என்பதை முதலில் கூற விரும்புகிறேன். தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கம்தான் தலித்துக்களைக் கைதூக்கி விட்டது; அதுவரையிலும் தலித்துகளுக்கு விழிப்புணர்வு ஓர்மையே இருந்ததில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை திராவிட இயக்கம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. உண்மையிலேயே திராவிட இயக்கம் தலித்துகளை எண்ணிக்கை பெரும்பான்மைக்காகவே சேர்த்து வந்தது. தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிவதையே நடைமுறையாகக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் வரலாற்று ரீதியாக தலித்துகளின் அரசியல் விழிப்புணர்ச்சியை ஆராய்ந்து பார்ப்பதும், பிற அரசியல் கருத்துகளோடு -அமைப்புகளோடு அவர்களுக்கிருந்த உறவும் - முரணும் குறிப்பாக திராவிட இயக்கத்தோடு  இருந்த தொடர்பு பற்றி தேடிப் பார்ப்பதும் நடக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, திராவிட இயக்கம் பேசிய பெரும்பான்மையான கருத்துக்களைத் தொடக்கத்திலேயே தலித் முன்னோடிகளும் அமைப்புகளும் பேசியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில்தான் தொடக்க கால திராவிட இயக்க அமைப்புகளோடு தலித்துக்கள் அரசியல் உறவினை மேற்கொண்டிருந்தனர். ஆனால் திராவிட இயக்கம் அரசியல் கட்சி என்ற நிறுவனமாக மாறியபோது தங்களுக்குக் கருத்தியல் மற்றும் மக்கள் திரட்சி என்ற அளவில் தொடக்கத்தில் உதவிய தலித்துக்களை விலக்கியது. சாதி இந்து இயக்கமாக மாறியது.

அந்நிலையில்தான் தலித்துகள் தலித் மேம்பாடு மற்றும் சாதி மறுப்புக் கண்ணோட்டத்தில் பேசிய பல்வேறு கருத்துகளைத் திரித்து - சிதைத்து தன் கால சாதி இந்துத் திரட்சிக்கு உகந்த வகையில் திராவிட இயக்கம் மாறிக்கொண்டு விட்டது என்று தொடர்ந்து விளக்கி வந்திருக்கிறோம். இப்போதும் அந்தப் பொருளில் தான் திராவிட இயக்க வரையறையைப் பற்றி கேள்வி எழுப்பியிருந்தேன். எனவே இதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. மற்றபடி திராவிட இயக்கத்தின் சமகால சாதி அரசியல் உள்ளிட்ட கெடுதிகள் மீது உரிமைக்கோரி இந்த எதிர்வினையில் இறங்கவில்லை.

தொடர்ந்து தலித்துக்களைப் புறக்கணித்து வரும் திராவிட இயக்கம் நூற்றாண்டு பற்றிய வரையறையிலும் எம்மை புறக்கணிக்கிறது என்று கூறுவதே எம் நோக்கம். அதே வேளையில் பொதுச் சமூகத்திற்கும் கருத்தியலுக்கும் தலித்துகள் அளித்த பங்களிப்பை வரலாற்று ரீதியாக நிறுவிக் காட்டுவதும் கூட தலித் அடையாள ஓர்மையின் ஒரு பகுதி தான்.

திராவிடம் என்ற பெயரை அரசியல் அமைப்பு ரீதியாக முதலில் கையாண்டவர்கள் தலித்துகளே என்பதை திராவிட இயக்க ஆதரவு ஆய்வாளர்களான தொ.பரமசிவனும் (கவிதா சரண் இதழ், ஆகஸ்ட்- நவ.1997) எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா (Towards a Non – bramin millennium from Iyotheethass to periyar) ஆகியோரும் சொல்லி யிருக்கிறார்கள். திராவிடம் என்ற பெயரைக் கையாண்டதால் மட்டும் தலித்துக்களை முன்னோடிகளாகச் சொல்லவில்லை. திராவிட இயக்கம் பின்னாளில் பேசிய பிராமணர் எதிர்ப்பு - இந்திய தேசிய மறுப்பு - இட ஒதுக்கீடு - இந்து புராணம் மறுப்பு போன்றவற்றை வேறெவரையும் விட தலித் முன்னோடிகளே உறுதியாகவும் விரிவாகவும் பேசினார்கள் என்பதால் தான் இவ்வுரிமை கோரல்.  இம்முன்னோடி முயற்சிகளைத் தொடக்கால பிராமணரல்லாத தலைவர்கள் அறிந்திருந்தார்கள். இது இன்றைக்குச் சொல்லப்படுவதில்லை. தேவையெனில் ஆதாரங்களோடு விவாதிக்கலாம்.

1916-ல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்தத் தொடக்கம் கூட முதலில் சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான நோக்கத்தை அது அனைவரிடமும் எடுத்துச் சொல்லமுடியவில்லை. இந்நிலை சற்றொப்ப 1909 - ஆம் ஆண்டின் நிலையை ஒத்ததாகவே பெயரளவில் தான் இருந்தது என்கிறார் கு. நம்பியாரூரன் (அதாவது 1909-ம் ஆண்டைய நான் பிராமின் சங்கமும் 1992-ம் திராவிட சங்கமும் பெயரவிலான அமைப்புகளே). இவ்வாறு மக்கள் திரட்சி சென்றடையாத நீதிக்கட்சியை 1917-ம் அக்டோபரில் நடந்த பஞ்சமர் மாநாடுதான் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்தது. அது ஸ்பர்டாங்க் மாநாடு என்று வரலாற்றில் கூறப்படுகிறது.  இம்மாநாடு பற்றி யூஜின் இர்ஷிக், கு. நம்பியாரூரன், ராஜாராமன் ஆகிய ஆங்கில ஆய்வாளர்களும் முரசொலி மாறன், நெடுஞ்செழியன் போன்ற  திராவிடக் கட்சி ஆய்வாளர்களும் பேசியிருக்கிறார்கள். இம்மாநாடு எம்.சி.ராஜா தலைமையில் ஆதிதிராவிட மகாஜனசபை நடத்திய மாநாடு என்பது முக்கியம். இவ்வாறு தொடக்க காலத்தில் நீதிக்கட்சிக்கு மக்கள் திரட்சி காட்டியதும் தலித்துகளே.

1917 முதல் 1919 வரை டி.எம்.நாயர் போன்றோர் உயிரோடு இருந்த காலத்தில் அதாவது நீதிக்கட்சி வளர்ந்து வந்த காலத்தில் கட்சி நடத்தும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பஞ்சமர்கள் சுதந்திரமாகப் பங்கேற்றனர் என்பது மட்டுமல்ல, சென்னை நகரில் தனித்துவமான ஆதிதிராவிட ஜனசபா, பறையர் மகாஜனசபா என்கிற இரு அமைப்புகள் முன்னணியில் இருந்தன (நம்பியாரூரன் நூல்) என்பதும் குறிக்கத்தக்கன.

இவ்வாறு வளர்ந்த நீதிக்கட்சி 1920-ல் ஆட்சிக்கு வந்ததும் தலித்துக்களைப் புறக்கணித்தது. ஆனால் செம்மலர் மே-இதழில் எஸ்..பெருமாள் எழுதிய கட்டுரையைப் பாருங்கள். அதில் 1920 முதல் 1926 வரை நீதிக்கட்சியின் சாதனைகளாக 21 அம்சங்களைக் காட்டியுள்ளார். அதில் 11 அம்சங்கள் தலித்துகளுக்காகச் செய்யப்பட்ட சாதனைகளாகக் காட்டப்பட்டுள்ளன.  இவற்றை நான் மறுக்கிறேன். அதில் வெகு சில மட்டுமே சரியானவை; மற்றவை பொய்யானவை; அரைகுறையானவை; ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டதையும் நீதிக்கட்சியின் சாதனையாகக் காட்டப்பட்டுள்ளது.  அதே போல தலித்துக்களின் முயற்சியால் நடந்த மாற்றங்களையும் நீதிக்கட்சி செய்த மாற்றமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை முதன்முதலாக அமைச்சராக நியமித்தது என்கிறது எஸ்..பெருமாளின் கட்டுரை. அமைச்சராக இருந்தவர் பெயர் என்ன? யாரால் நியமிக்கப்பட்டார்? எந்த தேதியில்? என்பதையெல்லாம் செம்மலரிலேயே வெளியிடுங்கள். பேசுவோம் அடுத்து தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக தனியாக அமைச்சகத்தை அமைத்தார்கள் என்ற தகவலும் உண்டு. இது 1916-ல் ஆங்கிலேயர் காலத்திலேயே தொழிலாளர் கமிஷன் என்ற பெயரில் ஏற்பட்டு விட்டது. இப்படி ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக மறுத்துச் சொல்ல முடியும்.

சென்னை மில் - தொழிலாளர் போராட்டத்தில் திரு.வி..வை நாடு கடத்த மறுத்தது நீதிக்கட்சி என்று பெருமையடைகிறீர்! ஆனால் பறையர்களை சென்னையை விட்டே கடத்த வேண்டுமென்று தியாகராய செட்டி அறிக்கை வெளியிட்டது பற்றி தெரியுமா?

எம்.சி.ராஜா
நீதிக்கட்சியின் தலித் விரோதப் போக்கை எம்.சி.ராஜாவின் அனுபவத்திலிருந்து விவரிக்கிறேன். நீதிக்கட்சி பறித்த தலித்துகளுக்கான வாய்ப்புகளை எம்.சி.ராஜா பட்டியலிட்டார். அவை:

1.         நீதிக்கட்சி பதவியிலமர்ந்து ஓராண்டு காலத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தில் ஒரு லட்ச ரூபாயை வெட்டியது. அதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் நலத்துறைகளை மூடியதால் அதில் பணியாற்றிய அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்..

2.         பட்ஜெட் தயாரிக்கப்படுவதற்கு முன் உத்தேசமாக ஒவ்வொரு துறைகளுக்கும் தேவைப்படும் தொகை, அதை செலவிடுவதால் ஏற்படும் பயன் ஆகியவற்றைக் காட்டும் உத்தேச வரவு செலவு பட்டியல் தயாரிக்கப்படும். அதில் 1921-22-ஆம் ஆண்டில் செலவிட உத்தேசித்து 6.47லட்சரூபாயை தொழிலாளர் நலத்துறையும் மற்ற துறைகளும் கேட்டன. ஆனால் சட்டமன்றம் இத்தொகையை ஒரு லட்சமாகக் குறைந்தது. 1922 - 23-ம் ஆண்டிற்காக 12.25 லட்சம் கோரிய போது நிதிக்குழு அதை 7.87 லட்சமாகக் குறைந்தது. இந்த 7.87 லட்சத்தில் 3.25 லட்சம் கூட்டுறவு சங்கங்களுக்குக் கடனுதவி வழங்கவேண்டும். அத்தொகையைக் கடனாகத் திருப்பிச் செலுத்தவேண்டும். ஆனால் இத்தொகையையும் கூட சட்டமன்றத்திற்கு வந்த போது 21, 380 ரூபாயாக குறைக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு படியிலும் உத்தேச செலவுத் தொகையை ஏன் குறைக்கிறார்கள் அல்லது வெட்டுகிறார்கள் என்பதற்கு காரணமே இருக்காது என்கிறார் எம்.சி.ராஜா.

3.         நகராண்மைக் கழகங்களுக்கு சுயாட்சி அளித்தவுடன் நகராண்மை பிரதிநிதித்துவத்திலிருந்து தலித்துகள் துரத்தப்பட்டார்களே ஒழிய அம்மக்களுக்குரிய பங்கு தரப்படவில்லை. சில சமயம் தரப்பட்ட இடங்களையும் நீதிக்கட்சி சாதி இந்துக்களே எடுத்துக்கொண்டனர்.

4.         அரசினர் ஆரம்பப்பள்ளிகளில் ஏழை தலித் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டுமென்று சென்னை சட்டசபையில், எம்.சி.ராஜா கோரிய போது இத்திட்டத்திற்கு கல்வி இயக்குநர் கணக்குப்படி ஆண்டிற்கு 67 லட்சம் செலவாகும் என்பதால் நிதிக்குழு ஏற்க மறுக்கிறது என்று பதிலளிக்கப்பட்டது. அத்தகைய உத்தேசச் செலவுத் திட்டத்தின் நகலொன்றைத் தரும்படி எம்.சி.ராஜா கேட்ட போது இதுவரை திட்டமாகத் தீட்டப்படவில்லை என்று கல்வியமைச்சர் பதிலளித்தார்.

5.         சிதம்பரம் தாலுக்கா போர்டுக்கு ஆதிதிராவிடரை ஏன் நியமிக்கவில்லை என்று எம்.சி.ராஜா கேட்டபோது தாலுக்கா போர்டு அலுவலகம் சாதி இந்து ஒருவரின் கட்டிடத்தில் இயங்கி வருவதால், அக்கட்டிடத்தில் ஆதிதிராவிடர் நுழைவதை விரும்பாததால் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றார் அமைச்சர்.

6.         1923-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் உபகாரச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென்று எம்.சி.ராஜா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் ஏழ்மையென்பது ஆதிதிராவிடருக்கு மட்டுமே உரிய தனிச்சொத்தல்ல. மற்ற வகுப்பினரிலும் ஏழைகள் உண்டு என்றுக் கூறி தீர்மானத்தை மறுத்தார். மறுநாள் விவாதத்தில் பதிலளித்துப் பேசிய எம்.சி.ராஜா ஏழ்மை தாழ்த்தப் பட்டோருக்கு மட்டும் உரியதல்ல. பிராமணர்களிலும் ஏழைகளுண்டு என்ற உண்மையை அமைச்சர் எப்போது கண்டுபிடித்தார்? அமைச்சராவதற்கு முன்பே கண்டாரா? பின்பு கண்டு பிடித்தாரா? பிராமண மாணவர்களிலும் ஏழைகள் உண்டென்றால் அவவர் ஏன் அம்மாணவர்களுக்காக பாடுபடக்கூடாது? தாழ்த்தப் பட்ட மாணவர்களின் ஏழ்மைக்கும் பிறசாதி மாணவர்களின் ஏழ்மைக்கும் வேறுபாடு இல்லையென்று எண்ணுகிறாரா? என்று கேள்வியெழுப்பியதோடு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கைகளை நான் வலியுறுத்துகிறேனோ, அப்போதெல்லாம் எம் கோரிக்கைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னிற்கின்றனா;. ஒடுக்கப்பட்ட அல்லது தீண்டப்படாத வகுப்பினரிடமிருந்து வேறுபட்டு நிற்கும் இவர்கள் யார்? சாதி இந்துக்கள்தாம் என்று பேசி முடித்தார். (ஆதாரம்: பெருத்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் - முதல் தொகுதி, தொகுப்பாசிரியர் : வே.அலெக்ஸ், தமிழில்: .சுந்தரம், வெளியீடு: எழுத்து, மதுரை -4, 2009).

7.         1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி ஏழுமுறை அமைச்சரவை அமைத்தும் ஒருமுறை கூட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை தலித்துகளுக்கு வழங்கியதில்லை.

நீதிக்கட்சி பற்றி பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டு வந்த பிம்பங்கள் தலித்துகளால் வெளிக்கொணரப்படும் ஆதாரப்பூர்வமான புதிய ஆவணங்கள் வழி கட்டுடைக்கப்பட்டுவிட்டன. இவற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனால் திராவிட இயக்கத்தைக் கண்ணை மூடிக்கொண்டு படித்துவிட்டு அப்படியே தங்கள் முகாம்களில் ஒப்புவிக்கும்முன் தலித் ஆவணங்களையும் பரிசீலிக்க படிக்க வேண்டுகிறேன். பொய்யான வரலாற்றைத் தன் கட்சித் தொண்டர்களிடமும் வாசகர்களிடமும் கொண்டு சேர்ப்பது மாபெரும் கருத்தியல் வன்முறை.

மே மாதம் செம்மலர் இதழில் வந்துள்ள (10 கடிதங்களில்) 5 கடிதங்கள் எஸ்..பெருமாளின் கட்டுரையைப் பற்றி குறிப்பிடுகின்றன. அக்கடிதங்கள் எஸ்..பெருமாள் தரும் இந்த பிழையான வரலாற்றுத் தகவல்களை உண்மையாக ஏற்றுப் போற்றியிருக்கிறார்கள். நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் - அறிவு நாணயமும் உள்ளோர் எல்லோரும் ஏற்பாடுகள் ஆழமான கட்டுரை / ஏராளமான தகவல்கள் / பாதுகாக்க வேண்டியதொரு ஆவணம் / மார்க்சிய ரீதியான சரியான ஆய்வு / இயங்கியல் பார்வையை முன் வைக்கிறது என்றெல்லாம் புகழாரங்கள். எதிர்காலத்தில் இதுவே வரலாறாக நிலைத்து விடும் அபாயமிருக்கிறது.

இதையெல்லாம் நான் சொல்வது மார்க்சிஸ்டுகள் பொய் சொல்லுகிறார்கள் என்ற பொருளில் அல்ல. அது என்நோக்கமுமல்ல. ஆனால் பொய்யையும் மெய்யையும் ஆராய்ந்து பார்க்கும் நிலையில் நீங்கள் இல்லை என்கிறேன். திராவிட இயக்கத்தையும் கருத்துக்களையும் கடந்த காலத்தில் புரிந்து கொள்ளத் தவறி விட்டோம் என்ற விமர்சனத்தைச் சரி செய்ய வேண்டிய அவசரத்தில் திராவிட இயக்கம் புனைந்து வைத்த தகவல்களையெல்லாம் எந்தவித மறு ஆய்வும் இல்லாமல் நாங்களும் புரிந்து கொண்டோம் / பேசுகிறோம் என்று காட்ட வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
திராவிட இயக்கம் பற்றிய தங்களின் கடந்த காலக் குறைகளைச் சரிசெய்ய வேண்டுமென்பதற்காக திராவிட இயக்கத்தின் தலித்துகள் பற்றிய பொய்களை மறு உற்பத்தி செய்வதுதான் உரிய வழியா?

தலித்துகளுக்கு களத்தில் ஆதரவாக செயற்பட்டால் மட்டும் போதாது, கருத்தியல் தளத்திலும் செயற்படவேண்டும். அதற்குத் திராவிடக் கட்சிகளின் பொய்கள்பின் சென்றால் தீர்வு வராது. தலித்துகள், கருத்தியல் தளத்தில் சிறுபான்மையாக நடத்தும் போராட்டங்களை கவனிக்கவும், அதை பொருத்தமாக புரிந்து ஏற்கவும் வேண்டும்.