Wednesday 16 May 2012

சுகுமாரனின் 'சுதாரிப்பு'

கோ.சுகுமாரன்
எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்திராத புதுச்சேரி கோ.சுகுமாரன் எழுதிய சிறுபதிவொன்றை முகநூலில் (Facebook) காணமுடிந்தது. ஏப்ரல் 14ந்தேதி நெய்வேலி விருதுகள் வழங்கும் விழாவில் "பெரியார் பிறக்காத உ.பி.யில் தலித் முதலமைச்சராக முடிகிறது. ஆனால் பெரியார் பிறந்த தமிழக மண்ணில் முதல்வராக முடியவில்லை" என்று திருமாவளவன் பேசியதான ஒரு கூற்றை மட்டும் எடுத்துக்காட்டி மறுப்பு எழுதியிருக்கிறார். அண்மையில் பேட்டியொன்றிலும் (ஆழம் மே 2012) திருமாவளவன் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர் அல்லாத பெரும்பான்மை இடைநிலைச் சாதிகளின் அதிகாரத் தளத்தில் தேர்தல் அரசியல் சார்ந்து இயங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியும் மேற்கண்ட பெரும்பான்மைவாதத்திற்குக் கட்டுப்படவேண்டியிருப்பதால் சமரசத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அது அவ்வப்போது கருத்தியல் தளத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் விழிப்புணர்ச்சியைக் கூட முடக்கும் எத்தனம்தான் சுகுமாரனின் இப்பதிவு.

முதலில் அவர் திருமாவளவனின் இக்கூற்றை எடுத்துக்காட்டி பிரச்சினைக்குரியதாகக் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறு உண்மை கூட பெரியார் என்னும் திருவுரு மீதான விமர்சனமாக மாறிவிடக்கூடாது என்ற அச்சம் அவருக்கிருக்கிறது. இதேபோல்தான் முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆராதிப்பதற்காக அக்கட்சி சமத்துவப் பெரியார் என்ற பட்டத்தைத் தந்தபோது அச்சீரழிவைப் பற்றி ஒருவரி கூட விமர்சிக்காமல் சமத்துவப் பெரியார் என்ற பெயரைப் பற்றி மட்டுமே அவர் வல்லினம் இதழில் விமர்சித்து எழுதியிருந்தார். அதாவது கருணாநிதியைச் சமத்துவப் பெரியார் என்று சொன்னால் பெரியார் ஈ.வே.ரா. 'சமத்துவமற்றவரா?' என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் எழுதியிருந்தார்.

முன்பு பெரியார் - திராவிட இயக்கம் பற்றி விமர்சனம் செய்ததாக வெவ்வேறு காரணங்களின் பெயரால் திருமாவளவனைக் கொத்தித் தீர்த்த பலரும், தலித் பிரச்சினைகளுக்கு அழுத்தம் தராமல் தமிழ் அரசியல், எந்தவொன்றிலும் தனித்துக் கருத்து கூறாமல் பொத்தாம்பொதுவான பிராமண எதிர்ப்பு கருத்து நிலை என்றெல்லாம் வந்துவிட்ட பின்னால் அவரை அது சார்ந்து விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டனர். திருமாவளவனையோ தலித் கட்சிகளையோ விமர்சிப்பதில் ஈழத்தை ஆதரிப்பவரும், ஆதரிக்காதவரும் ஒன்றுபடும் புள்ளி இது. யாரும் சீரழியும் போது வராத மறுப்பு சீரடையும் போது வந்துவிடுகிறது.

காஞ்சி மடத்தைப் பற்றிப் பேசுவோர் கிராமக் கோயில்களில் தலித்துகள் நுழையமுடியாமலிருப்பதைப் பேசுவதில்லை என்று முன்பொருமுறை திருமாவளவன் கூறியிருந்தபோது "இரண்டும் ஒன்றா?" எனக் கேட்டு அக்கூற்றைப் பிராமண ஆதரவு கொண்டது என்ற அளவிற்கு மாற்றியிருந்தார் ஓர் அறிவுஜீவி. மேலிருப்பவரை மட்டுமே எதிரியாகக் காட்டிக்கொண்டு கீழிருக்கும் தலித்துகளுக்குச் சமத்துவம் அளிக்காததுதான் இன்றைய பிராமணரல்லாத அரசியல் என்கிற பொருள் கொண்டது திருமாவின் அவ்விமர்சனம்.

பிராமணர் அடையாளங்களை மட்டுமே எதிரியாகக் காட்டும்போது இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் பொத்தாம்பொதுவாகப் பேசி தப்பித்துக்கொள்பவர்களுக்கு, பதிலளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். ஆனால் இப்படியொரு விமர்சனம் செய்தாலே பிராமணர் ஆதரவு என்றாக்கிவிடும் எளிமைப்படுத்தல்தான் இங்கிருக்கிறது. "தலித்துகள் பேசும் கருத்து பிராமண ஆதரவாகிவிடக் கூடாது என்பதற்காக பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கத்தைப் பேசாமல் அவர்களையும் அரவணைத்துப் பேசவேண்டும்; இவ்வாறு பேசினாலும் அவர்கள் கிராமந்தோறும் வெட்டிக்கொண்டே இருப்பார்கள். தலித்துகள் செத்துக்கொண்டே இருக்கவேண்டும்" என்பதுதான் நியதியாக இருக்கிறது.

கிராமப்புறக் கோயில்களின் தலித் புறக்கணிப்பு போன்றவற்றை அவ்வப்போதான கூற்றுகளாக உதிர்க்காமல் செயல்திட்டமாகக் கொண்டுசெல்லாமலிருப்பது அக்கட்சியின் குறைபாடுகளாக இருந்தாலும் எப்போதாவது இப்படியொரு கேள்வியை எழுப்புவதையும் மறுக்கவேண்டுமா? தலித்துகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் சார்பாக உண்மையறியும் குழு செல்வது மட்டுமே உண்மையறிதலாகிவிடாது. அவர்களை ஒடுக்கிய / ஒடுக்கும் சக்திகள், அதில் நடந்துள்ள சமகால மாற்றங்கள், சாதிமுறையால் பலன்பெறும் சாதிகள் - அவற்றிற்குக் கிடைக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் பரிசீலனை செய்வதும் உண்மையறிதல்தான்.

திருமாவளவன்
திருமாவளவனின் கூற்று பெரியாரை விமர்சிப்பதாகக் கருதி சுகுமாரன் அதை மறுத்திருக்கிறார். பெரியார் பணியாற்றியும் கூட அம்மண்ணில் தலித்துகளுக்கு எதிரான மனோபாவத்தை மாற்ற முடியாத அளவிற்கு அது ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்று நேர்மறையாகக் கூட இதை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சுகுமாரன் உண்மையை அறிபவராயிற்றே. தலித்துகள் அதிகாரம் பெறாமலிருப்பதற்குப் பெரியார் காரணமல்ல. மாறாக தலித்துகளே காரணம் என்று கூறி அவர்களையே குற்றவாளியாக்கியிருக்கிறார்.

தலித்துகள் உட்சாதிகளாகவே இருக்கிறார்கள், தலித் அரசியல் தலைமைகள் அவர்களை ஒருங்கிணைக்கவில்லை என்று கூறி, குறிப்பாக திருமாவளவனையே சுட்டிவிட்டு, ஆனால் உ.பி.யில் தலித்துகளை மாயாவதி ஒருங்கிணைத்ததாலேயே முதல்வரானார் என்கிறார். மற்றெந்த காரணத்தையும் அவர் கூறவில்லை. சுகுமாரனின் இப்பதிவிற்கு "முதல்வர் பதவிக்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?" என்று பின்னூட்டமிட்டு, அதைத்தான் சுகுமாரனும் கேட்கிறார் என்று சுகுமாரனை ஆமோதித்து பின்நவீன 'அறிஞர்' ஒருவரின் கூற்றும் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் தலித் சாதி ஒருங்கிணைப்பு பற்றி பல்வேறு தலித் தலைவர்களின் நிலைபாடும், முயற்சியும், வரையறையும் என்ன? தலித் சாதிகளின் ஒருங்கிணைவில் தலித் அல்லாதோரின் தலையீடும் பங்களிப்பும் என்ன? போன்றவற்றை விரிவாகப் பேசும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் வெளிப்படும். அவ்வாறு வெளிப்பட்டால் தலித் ஒருங்கிணைப்பில் தலித் தரப்பு குறைபாடு மட்டுமல்ல, தலித் அல்லாத தரப்பின் குறைபாடும் தெரியவரலாம். எனவே என்னுடைய குறிப்பு அதை விடுத்து சுகுமாரனின் மறுப்பில் அடங்கியுள்ள வேறுசில பிரச்சினைப்பாடுகளைச் சொல்ல முயற்சிக்கிறது.

தலித்துகளின் அதிகாரம் பற்றிய கருத்தில் தலித்துகளின் ஒற்றுமைக்குறைவை மட்டுமே காரணம் காட்டி தலித் அதிகாரத்திற்கு எதிராக உள்ள மற்ற பிரச்சினைகளைப் பேசாமல் விடுவது அல்லது மறைப்பது நியாயமல்ல. அதிலும் தலித்துகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதும் யாரும் தங்கள் தரப்பின் குறைபாடுகளை விவாதிக்காமல் தலித்துகளையே குறைகூறுவது தலித் மக்களுக்கு நன்மை செய்வதாகாது என்பதைப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை.

முதலில் சுகுமாரனும் அவரை ஆதரிப்போரும் திருமாவளவனின் கூற்றை எளிமைப்படுத்தி, தாங்கள் பதிலளிப்பதற்கு ஏதுவாகக் குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் கூற்று பெரியாரை மட்டுமே காரணமாக்கியிருக்கிறது என்று கொள்வதைக் காட்டிலும், அவர் நடத்திய அரசியல் பணிகளின் விளைவு, அவருடைய அரசியல் வாரிசுகளின் தலித் பற்றிய மனோபாவம், அவருடைய கருத்தியல் மற்றும் பணி, சாதி எதிர்ப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்றெல்லாம் அதை விவரிக்கமுடியும். அதில் எந்தப் பெரியார் புறக்கணிப்பும் இல்லை. பெரியாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் அவர் மீதான சிறு விமர்சனமாகவும் அது அமைந்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்த அளவிலான விமர்சனத்தைக் கூட ஒடுக்கப்பட்டோர் அரசியல் இயக்கம் முன்வைக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது மோசமான மனோபாவம். 

இங்கு செல்வாக்கு செலுத்திவரும் பிராமண எதிர்ப்புவாதம் பிராமணரல்லாத சாதிகளின் பெரும்பான்மையை வலியுறுத்துகிறது. இப்பெரும்பான்மைவாதம் ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள எண்ணிக்கைப் பெரும்பான்மை இடைநிலை சாதியினரை வலிமையாக்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்துவந்த நிலவுடைமை, பிராமண இந்து மதத்திற்கான ராணுவ சேவை போன்றவற்றால் சமூக அதிகாரம் பெற்றிருந்த பிராமணரல்லாத சாதியினருக்கு, திராவிட இயக்கம் பேசிய கருத்தியல் "அரசியல் அதிகாரத்தை"க் கொண்டுவந்திருக்கிறது. வட்டார அளவில் தலித்துகளை ஒடுக்கிவந்த பெரும்பான்மை இடைநிலைச் சாதியினருக்குக் கிடைத்த இந்த அரசியல் அதிகாரம் தலித்துகளை அதிக பலத்தோடு ஒடுக்குபவர்களாக மாற்றியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகாலத்தில் அரசியல் தளத்தில் நடந்துள்ள மாற்றம் இது. இதற்குப் பிராமணரல்லாத அரசியல் பெரும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. பிராமணரை அகற்றமுடிந்த இவர்களால் சாதி என்கிற அளவில் தங்களுக்குக் கீழிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளை அரவணைக்க முடிவதில்லை.

தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களில் மட்டுமல்ல; உள்ளாட்சி பிரதிநிதித்துவம், கட்சிகளின் கிளை, ஒன்றிய, வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகங்களிலும் கோலோச்சிவரும் பிற சாதியினர் தலித்துகளைப் புறக்கணித்து வருகின்றனர். இப்போக்கைப் பிரதிபலிப்பதில் திராவிடக் கட்சிகளும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களும் முதன்மை; தற்போதிருக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் மட்டுமே தலித்துகளுக்குப் பாதுகாப்பு. இச்சலுகைகள் கிடைத்ததில் திராவிட இயக்கங்களுக்கு எவ்விதப் பங்கும் இருந்ததில்லை. மாறாக இச்சலுகைகள் அமுல்படுத்தப்படாமல் இருப்பது இவர்கள் ஆட்சியிலேதான். தற்போது பெரியாரிடமிருந்து திராவிடக் கட்சிகள் வேறுபட்டு இருந்தாலும் இவர்கள் அதிகாரம் பெற்றிருப்பதும், அதிகாரத்தைத் தக்க வைப்பதும் அவர் உருவாக்கிய பிராமண எதிர்ப்புக் கருத்தியல் மற்றும் பணியின் விளைவுதான் என்பதை மறுக்கமுடியாது. இவ்விடத்தில் பெரியாரை முற்றிலுமாகப் புறக்கணிப்பது நம் நோக்கமில்லை என்றாலும் அவரை விமர்சிக்காமல் செல்லவேண்டும் என்று கோருவது நியாயமல்ல.

பிராமணர்களால் ஒதுக்கப்பட்டவர்களென்று அரசியல் நியாயம் கோரிய பிராமணரல்லாதார் தற்காலத்தில் அதிகாரம் பெற்று, பிராமணர்களைக் கட்டுப்படுத்தியிருப்பதோடு, தலித்துகளையும் ஒடுக்குகிறார்கள் என்கிற உண்மை, மாற்றத்திற்குட்படாத பிராமணரல்லாதோர் என்ற கருத்தியலால் தற்கால அதிகாரத்துவத்தை மறைக்கப்படுகிறது. அதே வேளையில் கிராம அளவில் இந்த பிராமணரல்லாத சூத்திரச் சாதியினரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறவர்களாக இருந்தும் தலித் கட்சிகளால் இம்முரண்பாடு அரசியல் தளத்திற்குக் கொண்டுவரப்படும்போது நாமெல்லாம் பிராமணரல்லாதார் / திராவிடர் / தமிழர் என்ற அடையாளங்களால் முடக்கப்படுகிறார்கள். 

எனவே  இந்த பிராமணரல்லாதார் என்ற அரசியலின் வரலாறு, அதில் தலித்துகள் இருத்தி வைக்கப்பட்ட இடம் போன்றவற்றையெல்லாம் பேசும்போது பெரியாரும் அதில் வருவார். அவர் பேசி வந்த பிராமணரல்லாதார் அரசியலால் அவர் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். அதை மீறுவதற்கு அவர் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செய்ததாகக் கூறமுடியாது. தன்னுடைய அரசியல் வரலாற்றில் குறிப்பான தலித் பிரச்சினை என்ற அளவில் ஒரு போராட்டத்தைக் கூட அவர் நடத்தியதில்லை. மற்றபடி அவர் நடத்திய வேறு சில போராட்டங்களை மொத்தத்தில் பார்க்கும்போது அது தலித்துகளுக்கும் சாதகமானதாக அமைந்திருந்தது என்று வேண்டுமானால் கூறலாம். 

பெரியார்
பெரியார் சூத்திரர்களின் இழிவு பற்றிப் பேசி வந்த அதே காலத்தில்தான் கிராம அளவில் சூத்திரர்களால் திணிக்கப்பட்ட பிணக்குழி தோண்டுதல், செத்த மாடெடுத்தல், பறையடித்தல் போன்றவற்றை எதிர்த்து தலித்துகள் போராடியபோது மௌனமாக இருந்தார். கருத்து ரீதியாகச் சூத்திர சாதி முதலாளிகளைச் சாதகமாகப் பார்த்த அவரால் தலித் சாதித் தொழிலாளிகளைத் திரட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திட்டமட்டுமே முடிந்தது. எனவே தமிழகத்தில் நடைபெற்ற சமூகநீதி அரசியல் என்பது பிராமணரல்லாதார் என்ற பெயரால் தன்னைச் சாதுர்யமாகப் பாதுகாத்துக் கொண்டு தலித்துகளையும் மேலெழ முடியாமல் தடுத்துவருகிறது. சாதியுணர்வு அரசியல்மயப்படுத்தப்பட்டு, கண்ணுக்குத் தெரியாமல் இறுக்கமடைந்துள்ளது. அரசியல்மயமாகாத இடத்தை விட அரசியல்மயப்பட்ட இந்த இடம் இன்னும் ஆபத்தானது.

பெரியார் போன்றோர் பணியாற்றாத உ.பி.யில்  சாதி இந்துக்களை எதிர்கொள்வது தமிழகத்தைவிட எளிமையாக இருக்கலாம். அங்கு தலித்துகளைக் கட்டுப்படுத்த பிம்பங்களோ கருத்தியல்களோ இல்லை. இந்த அர்த்தத்தில்தான் திருமாவளவன் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய வாசிப்பிற்கே அதிக சாத்தியம். சுகுமாரன் கொண்டிருந்த அர்த்தத்தை இங்கிருந்தும் மறுக்கமுடியும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சூத்திரசாதியினரின் வன்முறை பற்றி சுகுமாரனோ, அவருடைய நண்பர்களோ அறியாதவர்கள் என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அவர்களே பேசியிருக்கிறார்கள். ஆனால் சூத்திரர்களின் ஏகபோகம், வன்முறை பற்றிய சிக்கல் வரும்போது அதை ஒத்துக்கொள்வதோ, கடுமையாகக் கண்டனம் செய்வதோ மட்டும் அதற்கு எதிராகச் செயல்பட்டதாக முடியாது. இச்சூழலைக் காப்பாற்றிவரும் / மௌனமாக்கிவரும் அரசியல் சூழல், கருத்தியல் எவையெவையெனப் பேசுவதும் தேவை. ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி அறிவுஜீவியைப் போல் பேசியிருப்பதும், அறிவுஜீவியென்போர் அரசியல்வாதியைப் போல் வாதத்தை எளிமைப்படுத்தி ஒற்றையான பதிலைச் சொல்வதும்தான் நம் அறிவுச்சூழலின் கதி போலும்!

சுகுமாரனின் மறுப்பில் சூத்திர சாதியின் பெரும்பான்மைவாதம், தலித்துகளின் மீதான அரசியல் புறக்கணிப்பு பற்றி ஒருவரி விமர்சனம் கூட கிடையாது. உ.பி.யில் மாயாவதியின் வெற்றி தலித் ஒருங்கிணைப்பால் மட்டுமல்ல. தலித்துகளை நேரடியாக ஒடுக்கும் பெரும்பான்மை சாதியைக் குறிப்பாக அடையாளம் காட்டி, அப்பெரும்பான்மை சாதியைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் தலைமையில் பிற எண்ணிக்கைச் சிறுபான்மையினரை ஒன்று சேர்த்ததால் பெற்ற வெற்றி அது என்பதை அவர் கூறவில்லை. கூறவிரும்பவும் மாட்டார்.  தமிழகத்தில் ஒரு தலித் கட்சியை அப்படி விடுவார்களா? எப்பாடுபட்டாவது அக்கட்சியைப் பெரும்பான்மைவாதக் கருத்தியலுக்குள் உள்ளடக்காமல் விடமாட்டார்கள். இப்போது கூட ஒரு சிறு விமர்சனத்திற்குதான் இத்துணை மறுப்பு.

அதே போல தமிழகத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மை இல்லாத சாதிகளின் கூட்டு, அதற்கான தலித் கட்சிகளின் முயற்சி என்பதெல்லாம் எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதோடு அப்படியான முயற்சி கூட இல்லை. மேலும் உ.பி.யில் தலித் உட்சாதிகளிடம் முரண்பாடே இல்லையென்பதும் சரியல்ல. எனவே, திருமாவளவனின் கூற்றை மறுப்பதற்கு நியாயமற்ற காரணத்தையும் அர்த்தத்தையும் கைக்கொண்டது தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள சுகுமாரனுக்குப் பயன்பட்டிருக்கிறது எனலாம். இதையெல்லாம் எழுதினால் சுகுமாரனின் மனித உரிமைச் செயற்பாடுகளை மறந்துவிட்டு எழுதுகிறார்கள் என்று பதில்கள் வரும். ஒருவரை விமர்சிக்கிறோம் என்று சொன்னால் அவரது பிற செயற்பாடுகளையும் மறுக்கிறோம் என்று எதிர்கொள்வது தமிழ்ச்சூழலில் விமர்சனத்திற்கு எதிராகக் கையாளப்படும் ஓர் கவசம் மட்டுமே.

- ஸ்டாலின் ராஜாங்கம்

5 comments:

  1. sariyana pathivinai seiduirukkirar stalin nanri

    ReplyDelete
  2. கருணாநிதியும்,அண்ணாதுரையும் என்னவோ பள்ளர்,மீனவ மக்களை விட மிக உயரத்தில் உள்ள உயர்ந்த சாதி போல பேசுவது சரியா
    திராவிட இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களால்,இன்று கூட சில தமிழ் தேசியர்களால் பெரிய மேளம்,சின்ன மேளம் என்று பொட்டு கட்டி விடும் சமுதாயத்தை/குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பதால் இழிவு படுத்தி காட்டப்படும் அவர்களை தலைவராக
    கொண்டது ஒன்றும் குறைந்த சாதனையல்ல.அவரை எதிர்த்து போட்டியிட்டு செயித்த நடேச முதலியார் அன்னாடுரையை பற்றி என்ன பிரச்சாரம் செய்தார் என்பதை படித்து இருக்கிறீர்களா
    சில மாதங்கள் முன்பு சுப்ரமணிய சாமி twitter இல் அண்ணாதுரை பாதி ஐயர் என்று கூறியுள்ளார்.இப்போதும் சிலர் மேளம் என்று கிண்டலாக கலைஞராக எழுதுவது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது
    மீனவ மக்களைவிட ஆண்ட சாதி என்று குதிக்கும் பள்ளர்களை விட கலைஞரும்,அண்ணாதுரையும் உயர்ந்த சாதியல்ல
    எண்ணிகையில் மிக குறைந்த சாதி கலைஞரின் சாதி பார்க்கப்படும் பார்வையிலும் தாழ்ந்த சாதி தான்

    ReplyDelete
  3. http://www.namboothiri.com/articles/bhrashtu.htm

    அடுத்து எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்
    அவர் தந்தை தன் சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்
    அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.
    அவருக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்.
    திராவிட இயக்கத்தின் கிளைகளின் தலைமையும் சாதியை கடந்தவர்கள் இடம் தான் சென்றது.
    யாரும் குலம் கோத்திரம் பூர்வீகம் பார்த்து தலைவர்களின் பின் செல்லவில்லை
    மற்ற மாநிலங்களில் சாதிப்பற்றாளர்கள் எப்படி ஆட்சியை பிடித்து எப்படி தங்கள் சாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்தால் திராவிட இயக்கத்தின் தாக்கம் புரியும்

    One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.

    http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

    சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்
    அதனால் எம் ஜி ஆரின் தந்தை ஒடுக்கப்பட்டவர் ஆகிறார்
    அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்
    அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான(இன்றைக்கு ஆதிக்க சாதி என்று கட்டம் கட்டபடுவர் நவீன போராளிகளால்)ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்
    கணவனை இழந்த சத்தியபாமா அவர்களால் வளர்க்கப்பட்டதால் அவர் ஈழவ சமுதாய community certificate வாங்கி கொள்ளவும் எல்லா உரிமையும் உண்டு
    கடந்த வருடம் உச்ச நீதிமன்றமும் தாயின் சாதிய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டால் தாயின் சாதியை ஏற்று கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது
    தந்தை வழியில் சண்டாளர் என்பதால் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் உரியவராகிறார் .தாய் வழியில் அன்றைய தீண்டத்தகாத சாதியும் இன்று பிறபடுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வரும் ஈழவ சமுதாயத்தை சார்ந்தவராக இருக்கும் உரிமையும் எம் ஜி ஆர் அவர்களுக்கு உண்டு

    ReplyDelete
  4. கலைஞரின் தனிப்பட்ட குடும்பத்தை நீக்கி பார்த்தால் அவர் சமுதாயம் நரி குரவருக்கு கொஞ்சம் மேல் வர கூடும்.
    அவரை எதுவோ பெரிய ஆதிக்க சாதி போல சித்தரிக்கும் முயற்சிகள் சரியா

    கலைஞரின் சாதியை தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இருந்திருந்தால்,அல்லது சேர்க்கப்பட்டால் அது பெரிய அநியாயம் என்றா பார்க்கப்படும்
    சில மாநிலங்களில் (மகாராஷ்டிரம்,கர்நாடகம்) பொட்டு கட்டி விடும் தேவதாசி வழக்கம் உள்ள சில சாதிகள் பட்டியல் வகுப்பினரின் கீழ் வரும்

    தமிழக அரசு வெளியிடும் சாதி பட்டியலில் ஒரே சாதி வேறு வேறு மாவட்டங்களில் வேறு வேறு பிரிவுகளின் கீழ் வரும்.அரசு கமிஷன் மூலம் சில அளவுகோல்களை வைத்து பட்டியல்களை உருவாக்கும்.அதை வைத்து கொண்டு இன்னார் மட்டும் தான் ஒதுக்கப்பட்டனர்,மற்றவர் எல்லாம் ராஜவாழ்க்கை வாழ்ந்தனர் என்று பேசுவது சரியா
    முக்குலத்தோர்,நாடார்,வன்னியர்,கொங்கு கவுண்டர்,முத்தரையர் போன்ற சாதிகளில் இருந்து கூட யாரும் திராவிட இயக்கங்களின் தலைமைக்கு வரவில்லையே
    அவர்களும் ஏமாற்றப்பட்டோம் என்று திட்டுகிறார்கள்.பின் இங்கு எந்த சாதி தான் பயன் அடைந்தது

    ReplyDelete
  5. அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

    அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

    பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

    http://www.tamilhindu.com/2011/02/vulgar-castiest-writings-of-bharatidasan/

    குடும்ப விளக்கு எழுதிய பாரதிதாசன் தன் குயில் பத்திரிக்கையில் அண்ணாதுரையை பற்றி எழுதியது

    மக்களும் இயக்கமும்
    தலைவராகவும்,முதல்வராகவும் ஆக்கியது பெரிய மேளம் அண்ணாதுரையை
    அவர் சாதியை,குடும்பத்தை,பின்புலத்தை பார்த்தா அவர தலைவர் ஆனார்

    பெரியார்,அண்ணா ,கலைஞர்,எம் ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றோர் தலைவராக அவர்களின் சாதிகள் எந்த அளவில் உதவின என்று கூற முடியுமா
    கூர்மையான பார்வையுடைய தெளிவான ஆராய்ச்சியாளர் நீங்கள்.உங்களின் பல வினாக்கள் கொள்கைகளை கேள்விக்கு ஆளாக்கியுள்ளன.அடிப்படைகளை அசைத்துள்ளன


    வேறு எந்த இயக்கத்தில் எண்ணிக்கையில்,சக்தியில் மிக குறைந்த நிலையில் உள்ள சாதியை சேர்ந்தவர்களின் பின் ஆட்சி,கட்சி சென்றுள்ளது.

    மாயாவதி அவர்கள் கூட தனக்கு அடுத்த தலைவராக தான் சார்ந்த சாமர் இனத்தை சார்ந்த ஒருவர் தான் வருவார் என்று கூறும் சூழல் தானே உள்ளது.பெரும்பான்மையாக உள்ள சாமர்களை தவிர்த்து பட்டியல் வகுப்பின் கீழ் எனபதிற்க்கும் மேற்பட்ட பிற சாதிகளும் உத்தர்ப்ரதேசதில் உண்டு.எண்ணிக்கையை வைத்து தானே அவர் அந்த பேச்சு பேச வேண்டி உள்ளது



    http://www.hindu.com/2006/08/29/stories/2006082915880400.htm

    ReplyDelete